பறக்கும்
மிளகு!
பூமியில் மிளகு புள்போல் பறக்குமா?
புதுவை மிளகோ புள்ளாய்ப் பறக்கும்!
சீர்புதுச் சேரியில் தெரிந்த வீடு
சென்றேன் சென்றமாதக் கடைசியில்!
கூடம் நிறையக் கொட்டியிருந்த
கொட்டை மிளகைக் கூட்டிவார
எண்ணினேன், வீட்டார் இல்லை யாதலால்!
எழுந்து துடைப்பம் எடுத்து நாட்டினேன்
பூமியில் மிளகு புள்போற் பறக்குமா?
புதுவை மிளகு புள்ளாய்ப் பறந்ததே!
எனக்கும் ஆயுள் எண்பது முடிந்ததாம்;
இந்த அதிசயம் எங்கும் கண்டிலேன்!
பூமியில் துடைப்பம் போட்டு நின்றேன்;
போன மிளகு பூமியில் வந்தது!
கூட்டப் போனேன் கூட்டமாய்ப் பறந்தது!
கூட்டாப் போது பூமியில் குந்தும்!
வீட்டுக்காரி வந்து
பாட்டாய்ப்பாடினாள் "ஈ"ப் படுத்துவதையே
பழய நினைப்பு
நேற்றவன் சேவகனாம் -- இன்று
நீங்கிவந் திட்டாண்டி!
ஏற்றம் இறைத்திடவே -- உச்சி
ஏறி மிதித்தாண்டி!
சேற்று நிலத்தினிலே -- ஒரு
சின்னஞ்சிறு குறும்பன்
தோற்றி மணியடித்தான் -- அந்தத்
தொல்லை மணி ஓசை.
பழைய சேவகனின் -- காதிற்
பட்டதும் வண்டி என்றே
பழய ஞாபகத்தில் -- செல்லும்
பாதை குறிப்பதற்கு
முழுதும் கைதூக்க -- அவன்
முக்கரணம் போட்டு
விழுந்து விட்டாண்டி! -- அவன்
வீணில் கிணற்றினிலே!
கொசு! உஷார்!!
(கும்மி மெட்டு)
கும்பகோணத்திற்குப் போகவேணும் -- அங்குக்
கும்பலிற் சேர்ந்து நடக்க வேணும்
சம்பள வீரர் பிடிக்கவேணும் -- அங்குச்
சாவுக்கும் அஞ்சாத தன்மை வேணும்
கும்பலும் வீரரும் ஏதுக்கென்பீர்? -- நல்ல
கும்பகோணத்தினில் என்ன என்பீர்?
அம்பு பிடித்த கொசுக் கூட்டம் -- அங்கே
ஆட்களை அப்படியே புரட்டும்!
சென்னையில் வீட்டு வசதி
ஒரு வரம் தேவை! உதவுவீர் ஐயா!
திருவரங்கப் பெருமாள் நீரே!
சென்னையில் உங்கள் சிறந்த நாமம்
தெரியாதவர்கள் ஒருவருமில்லை!
பிச்சை எடுத்துப் பிச்சை எடுத்துநான்
பெற்ற பொருளில் மிச்சம் பிடித்துத்
தேன் போட் டுண்ணத் தினையில் ஒருபடி
சேகரித்தேன்! ஆகையால் அதனை
வீட்டில் வைத்து வெளியிற் சென்று
விடிய வந்து எடுத்துக்கொள்கிறேன்.
வீட்டுக் காரன் கேட்டுத் துடித்தான்
"பாட்டுப் பாடும் பராபர வஸ்துவே!
படித்தினைக் கிடமிருந்தால்,
குடித்தனத் துக்கிடம் கொடுத்திருப்பேனே!!"
ஏற்றப் பாட்டு
ஆழஉழுதம்பி அத்தனையும் பொன்னாம்!
அத்தனையும் பொன்னாம் புத்தம்புது நெல்லாம்
செட்டிமகள் வந்தாள் சிரித்துவிட்டுப் போனாள்!
சிரித்துவிட்டுப் போனாள் சிறுக்கி துரும்பானாள்!
ஆற்று மணல்போலே அள்ளி அள்ளிப் போட்டாள்
அத்தனையும் பொன்னாம் அன்புமனந்தாண்டி!
கீற்று முடைந்தாளே கிளியலகு வாயாள்
நேற்றுச் சிறுகுட்டி இன்று பெரிசானாள்!
தோட்டங் கொத்தும் வீரன் தொந்தரவு செய்தான்
தொந்தரவுக் குள்ளே தோழிசுகம் கண்டாள்!
அம்மானை ஏசல்
(எல்லாரும் போனாப் போலே என்ற மெட்டு)
மந்தை எருமைகளில்
வளர்ந்திருந்த காரெருமை
இந்தவிதம் சோமன் கட்டி
மாப்பிள்ளையாய் இங்கு வந்தீர் மாமா -- எங்கள்
இன்ப மயிலை நீர் மணக்கலாமா?
ஆந்தை விழி என்பதும்
அம்மிபோன்ற மூக்கென்பதும்!
ஓந்தி முதுகென்பதும்
உமக்கமைந்து கிடப்பதென்ன? மாமா -- எங்கள்
ஓவியத்தை நீர் மணக்கலாமா?
கோடாலிப் பல் திறந்து
குலுங்கக் குலுங்க நகைக்கையிலே
காடே நடுங்கிடுமே
கட்டை வெட்டக் கூடுமென்று! மாமா -- எங்கள்
வாசமலரை நீர் மணக்கலாமா?
வெள்ளாப்பம் போலுதடு
வெளுத்திருக்கும் வேடிக்கையில்
சொள்ளொழுகிப் பாய்வதுதான்
சொகுசு மிகவும் சொகுசு சொகுசு மாமா -- எங்கள்
சுந்தரியை நீர் மணக்கலாமா?
ஆனைக்குக் காதில்லையாம்
அளிப்பதுண்டோ நீர் இரவல்!
கூன்முதுகின் உச்சியிலே
கொக்குக்கழுத்து முளைத்ததென்ன? மாமா -- எங்கள்
கொஞ்சுகிளியை நீர் மணக்கலாமா?
எட்டாள் எடுக்க ஒண்ணா
இரும்புப் பீப்பாய் போலுடம்பு
கொட்டாப்புளிக் கால்களால்
குள்ளவாத்துப் போல் நடப்பீர் மாமா -- எங்கள்
கோகிலத்தை நீர் மணக்கலாமா?
அண்ணியை ஏசல்
(கத்தாழம் பழமே உனைநத்தினேன் தினமே
என்ற மெட்டு)
அண்ணி வந்தார்கள் -- எங்கள்
அண்ணாவுக்காக -- நல்ல (அண்ணி)
கண்ணாலம் பண்ணியாச்சு!
கழுத்தில் தாலி கட்டியாச்சி!
பிண்ணாக்குச் சேலை பிழியப்
பெரியகுளமும் சேறாய்ப் போச்சு! (அண்ணி)
எட்டிப் பிடித்திடலாம்
இரண்டங்குலம் ஜடை நுனிதான்
பட்டி வெள்ளாட்டு வாலைப்
போல மேலே பார்க்கும்படி! (அண்ணி)
நத்தைப்பல் சொட்டை மூக்கு
நாவற்பழ மேனியிலே
கத்தாழை நாற்றம் எங்கள் கழுத்தை நெட்டித் தள்ளிடுதே! (அண்ணி)
அழுக்குச் சுமந்து செல்லும்
அழகு வெள்ளை முகக்குதிரை
வழுக்காது நடப்பதுபோல்
வாய்த்தநடை என்னசொல்வேன்? (அண்ணி)
கோல்போல் இடுப்புக் கொரு
கோல ஒட்டியாணம் செய்யப்
பேல்கட்டு வாங்க வேண்டும்
பிரித்துத் தகட்டை எடுக்கவேணும்! (அண்ணி)
பக்குவமாயப் பேசும்போது
பாய்ந்துவரும் குரல்ஒலிதான்,
செக்காடும் சங்கீதமே
செவியில்வந்து துளைத்திடுதே! (அண்ணி)
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 123 )
|