கண்டதும் காதல்
(வண்ணம்)
ஸ்ரீமதி இவளார்? உலகிடை
மானிடமதிலேதிவள்?
ஒரு சேலிணையினை நேரிருவிழி
கோகனகவி நோதஅதரம்
மாமதிநிகர் ஓரிளமுகம்
வானுறுமழை தானிருள் குழல்
வாழ்மதுரகரகம் ஊதிடுமலர்
சூடியமுடி யோடிவளிரு
மத்தக மொத்த தனத்தொடு சித்தமி
னித்திட நிற்பது மிக்கவும் அற்புதம்!
மலர்வாய் திறந்தொரு வார்த்தை சொல்லாளோ?
தோய்மதுமலர் மாலையைநிகர்
ஆகியஒரு தேகவனிதை
தீவிரநடம் ஆடியமயி
லேஎ னுமொரு சாயலினொடு
மாசறுகலை மானெனமருள்
வாளவள்நடை யோ அனநடை
வாழுலகினி லேஇவளரு
ளால திசுக மேபெருகிடும்!
வைத்திடு புத்தமு
தத்தையெ டுக்கம
றுத்திடல் மெத்தவ
ருத்தமெ னக்குறும்
மதுவோடையைமொண்டுணவாக்கு நல்காளோ?
மாமயலெனும் ஓர் அனலிடை
யே எனதுளம் நோயடைவதை
மாதிவளறி யாள் இதை எவர்
போயவளிட மே புகலுவர்?
ஆம். அவள் தரு வாயிதழமு தே இதுததி மா அவுஷதம்!
ஆவியுமவ ளே உடைமைக
ளாதியுமவ ளேயுலகினில்!
அற்புத சித்திர சிற்ப கலைக்கொரி
லக்கியம் வைத்தசி லப்புமி குத்திடும்
அழகாகிய வஞ்சியென் வீட்டை நண்ணாளோ?
காமுறுதமிழ் நாடெனுமொரு
தாயுறுபுக ழோ! இனிதென
நாவலர்களு மேதுதிநிதம்
ஓதிடுதமிழோ நவநிதி
யோ! முழுநில வோ! கதிரவ
னோ! கவிதையி லேவருசுவை
யோ! இதுகன வோபுதுயுக
மோ! வடிவழ கே வடிரசம்
மக்கள் உயிர்க்குறு
நற்பதம் இப்படி
வைத்த தெனச் சொல
விட்டசு கக்கடல்!
மனமே இனும்பொறு வீழ்ச்சி கொள்ளாதே!
கண்டதும் காதல்
(அடாணா இராகம்.அடதாளம்.)
பல்லவி
களிப்பில் ஆடும் கான மயிலோ
காதாரும் பண் பாடும் குயிலோ? (களிப்)
அனுபல்லவி
துளிக்கும் மது மலரின் தேகம்
சுகம் தரும் இவள் அளிக்கும் போகம்! (களிப்)
சரணம்
பளிக்குமேனி கண்டு மனந்தத்
தளிக்குதுடல் கொப்பளிக்குதே!
ஒளிக்குதே இம் முகவிலாசம்
உளத்தில் மோகம் தெளிக்குதே
வளர்க்கா தெழில் வளர்ந்த ரூபம்
வையம் விளங்க ஏற்றும் தீபம்! (களிப்)
கலைத்துக் கலைத்து வரைந்த சித்திரமோ
கவினுறும் விழி வேலோ!
ஒலிக்கெலாம் உயிர் தரும் இவள் மொழி
இனிப்புச் சேர்த்திட்ட பாலோ!
தலைக்கேறுதே கொண்ட மோகம்
தகிக்குதே இதென்ன வேகம்! (களிப்)
நாணிக்கண் புதைத்தல்!
தலைவன் கூற்று.
இராகம்;
கமாஸ்
(ஏனிந்தப்படி மனம் கலங்கலானீர் மன்னா என்ற
மெட்டிற் சிறிது பேதம்)
தாமரைமுகத்தினைத் தளிர்க்கரம் மறைத்ததடி -- இளந்தையலே!
பூமது வருந்திடும் புதுவண்டுபோல் மனம்
புழுங்குதடி மயிலே, வழங்கும் தமிழ்க்குயிலே! (தாமரை)
விழிமலர் மறைத்ததில் கழிமயல் ஆகுதடி -- இளந்தையலே!
பிழிந்த அமுதமதைப் பிசைந்த கனிரசத்தை
விழுந்து புசித்துவிடின் ஒழிந்து விடுமெனதே (தாமரை)
நாணப்படுவதிங்கு நாணயமில்லையடி -- இளந்தையலே
காணப்படும் நிலவைக் கரம்பொத்தி விடுவதில்
ஆணழகன் சகித்தல் அருமை அருமையடி! (தாமரை)
மலர்க்கொடி விலக்கடி மதிமுகம் மறைத்தகரம் --
இளந்தையலே!
இலக்குத் தவறுதடி என்முகம் உன்முகம்
இணைத்திணைத் திழுத்திழுத்தணைத் தணைத் தமுதளி!
(தாமரை)
தலைவன், தலைவி தந்த சுகம் நினைத்துருகல்
(ஸ்ருங்காரலகரி என்ற மெட்டு)
பல்லவி
செந்தேனோ தமிழோ அவளுதவிய சுகம் (செந்)
அனுபல்லவி
முந்தோர் நாள் தானே வந்தெதிர்
குளிர் சோலையில் முழு நிலவினில்
கொண்ட காதல் மிகவாகிச் சிலீரெனக்
[சிட்டா ஸ்வரத்திற்கு]
கோ-கனகவி தழ்குவிய முகமே என
தொருமுக மிசையுற, மலருடல் எனதொரு
புளகமெய் தனிலுற இருவரொருவ ராக ஆவலொடு கொஞ்சித்தந்த வஞ்சி முத்தம்
கொஞ்சத்தினில் நெஞ்சத்தைவிட்டு
நிமிஷமும் அரை நிமிஷமும்
விலகுதல் அருமை விரைவினில் அவள்பிரி
வினைமனது பொறுத்திடுவது சுகம்
வெறுப்பதுவாகும் மலர்ச் (செந்)
சரணம்
சுந்தராங்கி அமுதங் குழல்போல் மொழியாள்
சுகுணாலயம் அன்னவள்!
எந்த வனிதை அவளோடு இணைபெற வருவாள்?
கந்தக் களப உடலாள்! அதிசோபித
கண்ய மான அதி புண்யவதி சுநிதி! (செந்)
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
|