இயற்கை அன்னை அருளிய இன் தமிழ்!
அயல்மொழி வேண்டா ஆர் எழில்
சேர் தமிழ்
நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும்
குறைவில தென்றுகுறிக்கும் தனித்தமிழ்!
தமிழர் வாழ்வின் தனிப்பெருமைக்கும்
அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ்!
அந்த நாளில் அறிவுசால் புலவர்
எந்நாள் தோன்றியதோ எனும் பழந்தமிழ்!
தமிழ்நாடு பலப்பல தடுப்பரும் இன்னலில்
அமைந்தும், அணுவும் அசையாப் பெருந்தமிழ்
தமிழை அழித்தல் தமிழரை அழிப்பதென்று --
இமையாது முயன்ற அயலவர் எதிரில்,
இறவாது நிற்கும் ஏற்றத் தமிழன்
பெருநிலை எண்ணுக தமிழ்ப்பெரு மக்களே!
அருஞ் செல்வர்கள் அன்று தொடங்கி
இன்று வரைக்கும் ஈந்து வந்துள்ள
பொன்றா ஆதரவு -- அன்றோ காரணம்?
அயல்மொழி எல்லாம் அண்டையில்,
கண்ணெதிர்
வியக்கு முறையில் மேன்மை பெற்றன;
என்ன முயற்சி! எத்தனை ஆர்வம்!
இன்ன வண்ணம் இருக்கையில், நம்மவர்
தமிழிடம் காட்டும் தயவு போதுமா?
தமிழ்த்தாய் பூசை போதுமா? சாற்றுக!
"தமிழர் பொருளெல்லாம் தமிழுக்குத்
தந்தார
"தமிழை யுயர்த்தினர் தாமுயர் வுற்றார
என்ற சொல் நாட்டினால், இறவா
நற்புகழ்
நன்று வாய்ந்திடும் என்ற நடுக்கமோ?
தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு
--
அமிழ்தம் அன்றோ அண்ணன்மாரே?
ஆவன தமிழுக்கு ஆற்றுதல் சிறிதே
ஈவது சிறிதே இன்ப மொழிக்கு!
வருத்தச் சேதி இஃதொன்று மட்டுமா?
ஒருவர் ஒன்று தமிழ் நலம் உன்னி
இயற்ற முன் வந்திடில், இடையூறு
பற்பல
இயற்ற முன்வருவதை என்ன என்பது!
சேர்ந்து தொண்டாற்றுதல் சிறப்பா?
அன்றிக்
காய்ந்தும், முணுத்துக் கசந்தும் கலகம்
செய்தும் திரிதல் சிறப்பா? செப்புக!
குள்ள நெஞ்சினர் கொடுமை செய்வதைத்
தெள்ளிய நெஞ்சினர் தீர்த்தும்,
தமிழில்
அன்பிலாத் தமிழரை அன்பில் தோய்த்தும்,
தென்பா லெழுந்த தீந்தமிழ்ச்
சுடரை வானிடை எழுமோர் வண்ணச் சுடராய்ச்
செய்யுமுன் வருக தமிழரே,
உய்ய நம்மவர்க்கிங்கு உறுதுணை அஃதே!
நமது நாடகம், சினிமா
சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த
வேண்டும்
கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால்
கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்?
பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்
பழமையினை நீக்கி நலம் சேர்ப்ப
தற்கும்
ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள்
அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின்றார்கள்.
ஒருநாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி
உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப
தற்கும்,
பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்
பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்பதற்கும்,
பெருநோக்கம் பெரு வாழ்வு கூட்டு தற்கும்,
பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்!
என்றன்
திருநாட்டில் பயனற்ற நாடகங்கள்
சினிமாக்கள் தமிழர்களைப் பின்னேத்
தள்ளும்!
தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பா திப்போர்
தமிழ்ப்பாஷையின் பகைவர்; கொள்கை
யற்றோர்;
இமயமலை யவ்வளவு சுயந லத்தார்;
இதம் அதகிம் சிறிதேனும் அறியா
மக்கள்!
"தமைக்காக்க! பிறர்நலமும் காக்க" என்னும்
சகஜகுண மேனுமுண்டா? இல்லை இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாடகங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை
இல்லை. முன்னேறறங் கோருகின்ற இற்றை நாளில்
"மூளிசெயல் தாங்காத நல்லதங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட
சரிதத்தை காட்டுகின்றார் சிணிமாக்காரர்!
இந்நிலையில் நாடகத்தின் தமிழோ, "காதை
இருகையால் மூடிக் கொள என்று
சொல்லும்.
தென்னாட்டின் நிலை நினைத்தால் வருந்தும் உள்ளம்!
செந்தமிழின் நிலைநினைத்தால்
உளம் வெடிக்கும்!
சுகாதார
வாழ்வு
[மாமயிலேறி நீ வா மகானுபாவா
என்ற மெட்டு]
பல்லவி
நோயினைப் போய் அழிப்பாய்
நூறாண்டு வாழ்வாய்!
சரணம்
ஆயநன் னெஞ்சில் வேண்டும்நல் வீரம்
தேயத்தில் தேகத்தில் வேண்டும்சுகா தாரம் (நோ)
அசுத்தமும் இருட்டும் புறத்தும் நல் லகத்தும்
அகற்றுக நீ தமிழா ஆநந்தம் உனை நத்தும் (நோ)
வாழ்க்கையின் நடுவே வரஎண்ணும் சாவை
போக்கிட நோய்களில் அசுத்தத்தில் "தீ" வை!
அயர் வினில் தொடரும் துயரெனும் சேதி
அறிவுலகினில் இல்லை; ஏறடா அதன் மீதில்! (நோ)
தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை
காலை விழித்தெழுந்தாள் கைம்மலரால் கண்துடைத்தாள்
கோல மலர்கமழும் கூந்தல் திருத்தினாள்,
காந்தி முகம்கழுவிக் கைவிளக்கை ஏற்றி, மிகு
சாந்த உரைபேசிப் பிள்ளைகளைத் தானெழுப்பி,
வீணை எடுத்தாள்! விளைத்தாள் அமுதத்தை!
ஆணழகன் தன் நாதன் அவ்வமுதம் கேட்டெழுந்தான்
காதற் கணவன், கனியன்புப் பிள்ளைகள்
சோதித் தமிழ்க்கவிதை சுருதியொடு கலக்கப்
பாடினார்! பாடிப் பனிக்காலைப் போதுக்குச்
சூடிஅழைக்கச், சுடரும் கிழக்கினிலே
செம்மை ஒளியிற் சிரித்துத் தலைநிமிர்ந்தான்!
அம்மை குடித்தனத்தை ஆளும் அரசியிவள்
பிள்ளைகளைக் கூட்டிப்போய் பீடத்தி லேயமைத்துப்
பள்ளிக்கு வேண்டியநற் பாடங்கள் சொல்லிவிட்டு,
நல்ல கதையுரைத்து ஞாலப் பதுமைகளைச்
சொல்லி மகிழ்வித்தாள், தோயன்பு நாதன் முதல்
எல்லாரும் இன்ப உணவுண்டார். மக்களெலாம்
கல்விச்சாலை செல்லக் கட்டும் உடைப்பொத்தலெல்லாம்
இல்லக் கிழத்தி எழில் தையற் காரியாய்த்
தைத்துடுததி்விட்டாள்; தனது கணவனிடம்
அத்தினத்தில் ஆன பல ஆலோசனை பேசி
நாதன் வெளிச்செல்ல நங்கை இனிதிருந்த
போதில், வெளியூர்ப் புறத்தி லிருந்து தன்
வீட்டுக்கு வந்த விருந்தாளி, வீதியிலே
போட்டிருந்த கல் தடுக்கப் பொத்தென்று வீழ்ந்ததனால்
மண்டை யுடைந்துவந்தான்; வஞ்சி இரக்கத்தால்
அண்டையிலே கட்டில் அதில்வளர்த்தி நற்சிகிச்சை
தக்கபடி புரிந்தாள். தன் நாதன் வீடுவந்தான்.
ஒக்க இருந்தான். உடலும் நலமாச்சு
நல்லசுகாதாரம் நாடிச் சமைத்திருந்த
பல்லுணவும் இட்டாள்! பகல் கணக்கும்தான் எழுதிச்
சித்திரத்தில் மக்கள் திருந்தப் படமெழுதி
வைத்திருந்த நூலை மணவாள னோடிருந்து
வாசித்தாள். நல்ல வடிவழகன் பேச்சமுதை
ஆசித்தாள், இன்பம் அடைந்தாள். சிறிதயர்ந்தாள்.
பக்கத்து வீட்டுப் பருவதத்தாள் தான் வந்து
சொக்கர் திருவிழாச் சோபித்ததைச் சொல்லி,
வருவோம் நாம் போய் வருவோம்; மாலை திரும்பி
வருவோம் என்றாள்! இந்த வார்த்தைகளைக் கேட்ட
இல்லக் கிழத்தியவள் சும்மா இருந்துவிட்டாள்;
நல்ல விழாவைத் தன் நாவால் மறுப்பாளா?
வந்த விருந்தாளி பருவதத்தின் வார்த்தைக்குத்
தந்த பதில் இதுவாம்:- "தையலரே கேளுங்கள்!
சங்கீத கோகிலத்தைத் -- தாவும் கிளையினின்று
அங்கு விழாவுக் கழைத்தால் வருவதுண்டோ?
மக்களுக்கு வாத்தியென வாய்ந்த மருக்கொழுந்தைக்
கக்கும் அனலின் கசக்க அழைப்பீரோ?
தையற் றொழில் அன்னம் தாமரைப்பூ வைமறந்து
வெய்யிற் சுரத்திடையே வீழ்த்த அழைப்பீரோ?
வீட்டுக் கணக்கெழுதும் வித்தகத்தை அவ்விழவில்
போட்டுக் குலைக்கப் பெறாமை உமக்காமோ?
காவியங்கள் கற்றுக் கவிசெய்து நல்ல நல்ல,
ஓவியங்கள் தீட்டும் உயர்புலமைத் தேவியினை
வம்புக் கிழுக்க வசமாமோ சொல்லிடுவீர்?
அம்மைமீர், நல்ல அறிவும் திருவுமுறும்
சீமாட்டிதன்னைத், திருவிளக்கைக் கல்வியென்னும்
மாமேட்டில் வீற்றிருக்கும் மங்கைக் கரசிதனைச்
சொந்தக்கணவனுடன் சேய்கள் தொடர்பறவே
எந்தநிமிஷமும் பிரிதல் ஏற்றதல்ல என்றுரைப்பேன்.
நிர்மலமாங் கல்வி நிறைந்தாள் இருந்தகுடி
சர்வகலா சாலை எனத்தகுமே! அவ்வம்மை
ஊமைஎன இருந்தாள் உங்கள் அழைப்புக்கே!
தீமை புரியாதீர்' என்று தெரிவித்தான்!
இல்லக் கிழத்தி எதிரிருந்த மங்கைதனை
முல்லை மலர்ந்த சிரித்த முகங்காட்டி,
தோழி, விழாவுக் கழைத்தாய் அதுவேண்டாம்;
வாழி உலகென்றாள் வாய்ந்து.
தழிழர் எழுச்சி!
உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம்
இங்கிவை தமிழரின் உடைமை!
அயர்வுகள் தீர்ந்தன புதுமையில் உலகை
ஆழ்வது தமிழர்கள் கடமை!
புயல்நிகர் பகைமையும் வேரோடு மாளும்
தமிழர்கள் சமரிடைப் புகுந்தால்!
வெயில்முகம் சுளித்தால் அகிலம் துாளாம்
மேன்மையை முழக்குக முரசே!
பழமையில் இங்குள அன்புறு காதற்
பயனுறும் அகப்பொருள் காப்போம்!
அழகிய தமிழ்நடை யாற்புதி யனவாய்!
ஆயிரம் கலைநூல் சேர்ப்போம்!
அழுதிட ஒருவன்மற் றொருவனை மேய்க்கும்
அதருமம் அனைத்தையும் மாய்ப்போம்!
முழுதுல கப் பயன் உலகினர் சமம்பெற
அன்பினில் மனிதரைத் தோய்ப்போம்!
முழக்குக எங்கணும் முழக்குக முரசே
முழக்குக தமிழர்கள் பெருமை!
வழங்கிடும் அங்கையர் வாளுயர் தோளினர்
வாய்மையின் வாழ்பவர் தமிழர்!
எமுந்துள வீரம் தமிழரின் மூச்சில்
எழுந்தது வாமென முழக்கே!
அழுந்துதல் இல்லை உலகுள்ள வரைக்கும்
அன்புத் தமிழர்கள் வாழ்வு!
மணிமுடி மறவர்கள் முழுதுணர் மேலோர்
மாபெரும் கவிஞர்கள் கூட்டம்,
அணிமுடி காதல் மகளிர்கள் கூட்டம்,
ஆவது தமிழர்கள் ஈட்டம்!
பணிகுதல் இல்லை அஞ்சுதல் இல்லை
பாய்ந்திடும் ஒற்றுமை யாலே!
தணியாக் காதல் நிறைவா மின்பம்
தமிழர்க்கு இப்புவி மேலே!
உலக சமாதானம்
அகிலப் பொதுச்சேனை
படை நடத்தல்
நானிலத்தின் மேனிலைக்குச்
சேனை கூட்டினோம்! -- பொதுச்
சேனை கூட்டினோம் -- வெறி
நாய்கள் ஒக்கப் போர்தொடுக்கும்
ஈனம் ஓட்டினோம்! -- கெட்ட
ஈனம் ஓட்டினோம்.
தேனடைக்குள் ஈக்கள் ஒப்பர்
பூதலத்தினோர்! -- இந்தப்
பூதலத்தினோர் -- அவர்
சீவனத்திற் பேதம் வைத்துப்
பாழ்படுத்தினார்! -- துஷ்டர்
பாழ்படுத்தினார்.
ஆனதுஷ்டர் தீயதன்மை சாகடிக்கும் நாள் -- முற்றும்
சாகடிக்கும் நாள் -- இது
வாகும் என்று தீவிரத்தில்
வாளெடுக்கும் தோள்! -- கூர்
வாளெடுக்கும் தோள்!
மேனிலைக்கண் மாநிலத்தை
ஏற்றுவிப்பீரே -- விரைந்
தேற்றுவிப்பீரே -- நீர்
மேல் நடப்பிர்! மேல் நடப்பிர்!!
மேல் நடப்பிரே!!! -- உடன்
மேல் நடப்பீரே
உலக முன்னேற்றம்
உலகமே உயர்வடைவாய்!
உள்ளவர்க் கெல்லாம் நீயே தாய்!
நலந் தரும் சமத்வம்
நாடுதல் மகத்வம்
நண்ணுவாய் சுதந்தரத்வம்! (உலக)
கலகமேன்? சண்டைகளேன்?
கருத்தெலாம் பேதம் கொள்வதேன்?
கலன் செல்லும் பாதையின்
காரிருள் வெளிக்குக்
கல்வியே சுடர் விளக்கு! (உலக)
கொடை வாழ்க!
எக்காளக் குயில்
வெண்பா
நின்றசெங் காந்தட்பூ நேரிற்கை யேந்தநெடுங்
கொன்றைமலர்ப் பொன்னைக் கொட்டுகிறாள் -- என்றே
அடைகுயில்கள் எக்காளம் ஆர்த்தனவே மண்ணிற்
கொடைவாழ்க என்று குறித்து.
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
|