பக்கம் எண் :

மகாகவி பாரதியார்

பாரதியார் நாமம் வாழ்க

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்
புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்
தாளேந்திக்காத்த நறுந்தமிழ் மொழியைத்
தாய்மொழியை உயிரை இந்த
நாள் ஏந்திக் காக்குநர்யார்? நண்ணுநர் யார்?
எனஅயலார் நகைக்கும் போதில்
தோளேந்திக் காத்தஎழிற் சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்
போல் நல்லின்பத்தை
விளைத்திடு தீந்தமிழிருந்தும் வேறுமொழியே
வேண்டி வேண்டி நாளும்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
கனிந்தபடி தோலுரித்துச்
சுளைத் தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை
சுவையூட்டம் தந்து சந்த,
அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,
நற்காதல் ஆழம் காட்டித்
தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்
தமிழறிவில் தறுக் குண்டாக்கிச்
சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு
விடுதலையை மறுத்திருக்கும்
துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப்
பெண்மை தன்னில்
தக்கதொரு தாய்த்தன்மை, சமத்துவ நிலைகாட்டி
உயிர் தளிர்க்கும் காதல்
துய்க்கும் விதம் எழுத்தளித்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும்
பெரியாரின் துணையும் வேண்டும்
விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கே
உறக்கமில்லை கட்டாயத்தால்
வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற்
சுவைக்கவியால் மனத்தை அள்ளித்
தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

நிதிபெருக்கும் மனிதர்களும், நெடுந்தேச
பக்தர்களும், தலைவர் தாமும்
கதி பெருக்க ஏடெழுதும் ஆசிரியர்
என்பவரும் கவிதை யென்றால்
மிதி என்பார்! தமிழ்க் கவியைப் புதுவகையில்
மேலெழுப்பிக் கவிகள் நம்மைத்
துதிபுரியும் வகை தந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

பேசுகின்ற தமிழினிலே சுவைக் கவிதை
தரவறியாப் பெரியோ ரெல்லாம்
பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம்
வேண்டுவன பெறுதல் கண்டும்
ஏசிநின்றார். அவர் நாணத் தமிழ்க் கவிதை
உலகினிலே எசமான் ஆன
தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங் கவிஞன்
ஜரிஷ் மொழி வளரச் செய்தான்!
அயர்லாந்தில் அதன் பிறகே உணர்வுபெறல்
ஆயிற்றென்றறிஞர் சொல்வார்!
பெயர்பெற்ற கவிதைகளின் சுடர்க் கவிஞர் சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்
இசைந்திருந்த ஷேக்ஸ்பியரும்,
சொல்லும் விக்டர் யூகோவும், டால்ஸ்டாயும்
நவீந்திரனும் சொந்த நாட்டில்
நல்லசெயல் செய்தார்கள்! நடைப் பிணங்கள்
மத்தியிலே வறுமை என்னும்
தொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!

வாழ்க எழிற் பாரதியார் திருநாமம்
வையமிசை எந்த நாளும்
வாழ்க தமிழ்! தமிழ்க் கவிதை!
தமிழ் நாட்டார் மகாவீரராக எங்கும்
வாழ்க அவர் வகுத்தநெறி வருங்கவிதா
மண்டலமும் கவிஞர் தாமும்!
வாழ்கநனி சமத்துவநல் லிதயமதி வாய்ந்த
புகழ் நிலவுநன்றே.





( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )




( 60 )





( 65 )




( 70 )





( 75 )

பாரதியார் பட்டினி உபதேசம்

கேளென்று சொன்னாலும் கேளாத நெஞ்சத்தை
வாளொன்று கொண்டு வருத்தாமல் நீ தம்பி
தந்திரத்தாலே சரிப்படுத்தலாம் கண்டாய்!
வந்த வறுமையிலே செம்மை வரச் செயலாம்

அந்த விவரம் அறைகின்றேன் நீ கேட்பாய்
முந்தா நாள்நீ உண்ட மொச்சை விதைக் குழம்பு
நேற்றுப் புசிப்பதற்கு நெஞ்சு கசந்திருக்கும்
மாற்றிப் புசிக்க வழிதேடித் தானிருப்பாய்
இன்று முருங்கைக்காய் இட்டுப் பருப்பிட்டு
நன்று குழம்பிட்டு நாலுபிடி சோறுண்டால்
நாளைக்கு கத்தரிக்காய், நாளன்று பீர்க்கங்காய்
வேளைக்கு மாங்காய், விடிந்தால் புடலங்காய்
நித்தம் விதவிதமாய் நீ உண்பாய்; ஆனாலும்
அத்தனையும் தெவிட்டும்; ஆசைவிடும் மேற்கொண்டே

அண்டை அயலகத்தில் ஆமைவடை மோர்க் குழம்பு
கண்டால் அதுபோற் கறியுண்ண ஆசை வரும்
ஆமை வடை மோர்க் குழம்புக்கு அப்பாலோ நாகரிகச்
சீமை அவரைக்காய் சேமியாப் பாயாசம்
வீட்டில் பதார்த்த விழா நடத்த ஆசையுண்டு
மூட்டைப் பணம் வேணும் முள்ளங்கிப் பத்தையைப் போல்
இட்டகூழ் இன்றைக்கு நன்றா யிராவிட்டால்
பட்டினியாப் போட்டு விடு; நாளைக்குப் பார்ப்பாய்நீ
இட்டதொரு கூழில் இனிமை கிளம்புவதை,
பட்டினியால் இலாபம் பல.


( 80 )





( 85 )




( 90 )





( 95 )




( 100 )

அலங்காரக் குறும்பு

ஊராரே கேளுங்கள் இந்த ஒரு சேதி
பாரதியார் என் மகனைப் பார்த்துப் பரிகசித்தார்
ஏன் பாரதியாரே, என்மகன் உம் காரியத்தில்
தான் வந்து வீணில் தலையிட்டுக் கொண்டதுண்டா?
இல்லையென்று சொல்கின்றீர். அவ்வாறிருக்கையிலே
தொல்லை தரும் வார்த்தை என் மகனைச் சொன்னதேன்?
ஏழ்மை கிழத்தன்மை நோய்கள் இவற்றையெல்லாம்
ஆழக் குழித்தோண்டி அப்படியே புதைத்துத்
தேசத்தை மேல் நிலையிற் சேர்ப்பதெனும் உங்கள்
ஆசையோ பேராசை! அப்படித்தான் ஆகட்டும்
அச்செயலை நான் ஒன்றும் ஆட்சேபம் பண்ணவில்லை?
கச்சை கட்டி ஆடுங்கள்! கை தட்டிக் கூவுங்கள்!
எங்கள் செயலுண்டு யாமுண்டு, மற்ற விதம்

உங்களிடம் யாரையா ஓடி வந்தார்? சொல்லும்!
இளம்பையன் வீதியிலே சொன்னான் எனில், நீர்
முதுமையில் மணி முதுமையில் மணி என்றே
எதிர் வந்து சொன்னீரே! எல்லாரும் கேட்டுக்
குலுங்க நகைத்தாரே! ஐயா குறும்பில்
அலங்காரம் சேர்த்தீரோ அங்கு?

குறிப்பு : பையனின் தந்தை, பாரதியாரிடம் பேசியதாகக்
கூறியது கற்பனை.



( 105 )




( 110 )




( 115 )





( 120 )


பாரதியார் முன் இரு பிரசங்கங்கள்

சமரச சன்மார்க்கக் கட்டிடத்தில்
தகு திரு வி கலியாணசுந்தரர் தாம்,
அமைவுடைய இளங்கோவின் கவி நயத்தை
அமுதம் போல் எடுத்துரைத்தார் பிரசங்கத்தில்!
தமை மீறிப் பொங்கி யெழும் சந்தோசத்தால்
தட தட எனக் கரகோசம் செய்தார் ஐயர்!
நமதுதமிழ் இனிமைதனைக் கண்டு கொள்க
நானிலமே என்றன நல்விழியும் மார்பும்!

அடுத்தபடி வேறொருவர் பிரசங்கித்தார்
அவர் கோணிக் குரங்கு போல் ஆடி ஆடி
எடுத்தெடுத்துப் பாடினார் தாயுமானார்
எழிற் பாட்டை அழுகுரலில்! அவர் சனத்தைப்
படுத்தாத பாடில்லை! கோபத்தாலே
பாரதியார் "யாராட இவன என்றார். நான்
தடுத்து விட்டேன் எழுந்திரு என்றார் ததாஸ்து சொன்னேன்
சபைத் தலைவர், பிரசங்கி சபையில் மீந்தார்!




( 125 )





( 130 )




( 135 )

சமத்துவ உள்ளம்

யானும் கோசும் பேசியிருந்தோம்
என்றார் பாரதியார் என்னிடத்தில்
வெளியிற் சென்று வீடு வந்தவர்
மேலுடை கழற்றவும் இல்லை, மேலும்
ஐயர் கண்களில் அழகு குறைந்ததால்

அங்கு நடந்ததைக் கேட்டேன் ஐயரை.
எல்லாரும் சமமா இல்லையா என்றார்
என்ன நடந்த தென்றேன். ஐயர்
ஒன்றுமில்லை உட்கார் என்றார்
உட்கார்ந்திட்டோம் ஐயரும் நானும்
யானும் கோசும் பேசியிருக்கையில்
எவனோ கோசின் காலில் விழுந்தான்.

''நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச்
சீரும் சிறப்பும் தேடலாமே''
என்று சொன்னார் கோசு என்னிடத்தில்
மரியாதை எனல் உண்டு
பெரியார் சிறியார் இல்லை என்றாரே!



( 140 )





( 145 )





( 150 )


பாரதியாரும் நாடகமும்

நற்சரிதை நற்கவிதை நல்நடிப்பு
நாடகத்தில் பாரதியார், அமைக்க எண்ணி
முற்காலம் காளிதாசன் புகன்ற
''சாகுந்தலம்'' நடத்த முடிவு செய்தார்
உற்ற நண்பர் சீனிவா சாச்சாரிக்குச்
சகுந்தலையின் வேடந்தான் உரியதென்றார்
பற்றறு விசுவா மித்திரர் வா வே சுக்காம்
பகரறிய துஷ்யந்தன் நான்தான் என்றார்.

தொண்டு செயப் பல நண்பர் காத்திருந்தோம்
துடை நடுங்கும் தமிழ்நாடு, தேச பக்தர்
அண்டுமந்தக் காரியத்தில் அண்டவில்லை
அருங்கவியின் நாடகத்தை இழந்தார் மக்கள்
வண்டி வண்டியாய்க் குப்பை கூளமெல்லாம்
வாரிப் போய் பாரதியார் போட்டிருப்பார்
கொண்டு வந்து சேர்த்திருப்பார் நாடகத்தில்
குளிர்நிலவை; ஒளிநிலவை; அற்புதத்தை!

( 155 )




( 160 )





( 165 )




( 170 )

ஸ்ரீ சி. சுப்ரமண்ய பாரதியார் புகழ்

(தில்லானா மெட்டு) இராகம் நாட்டை, தாளம் ஆதி்

              பல்லவி

தோயுந்தேன் கவிதரு நம்
சுப்ரமண்ய பாரதியைச் செப்புக தினம் (தோ)

              அநுபல்லவி

சுவை நிலாவை நாம் எலாம் மிக வின்பத்தால்
சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில் சந்தித்தோமே
                                      (தோ)

              சரணம்

ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும்
உலக மனிதர் சமம் என நிலை நாட்டும்
தீயமறை வகற்றி அகத்தெழில் கூட்டும்
செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும்

தாகிடஜெம் தாகிடஜெம் தகும்தரிகிடக்க தத்தரிகிடதக
தளாங்கு தகதிக தொக ததிங்கிண த்தோம் - தளாங்கு
ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம். (தோ)















( 175 )





( 180 )

பாரதியாரும் பையனும்

    கொஞ்ச வயதுடையான்-அவன்
    கூனற் கிழவனைப் போல்
    அஞ்சி நடந்து சென்றான்-ஐயர்
    ஆரடா தம்பி என்றார்!
    அஞ்சலி செய்து நின்றான்-ஐயர்
    அவனிடம் உரைப்பார்
    ''நெஞ்சு நிமிர்ந்து நட!-உன்
    நேரில் அச்சேவலைப் பார்''!

    சொன்ன சொல் பையனுளம்-தனில்
    சுடர் கொளுத்திடவே,
    முன்னைய கூனல் நடை-தனை
    முற்றும் அகன்றவனாய்ச்
    சென்னி தனை நிமிர்த்திக்-கொஞ்சம்
    சிரிப்பையும் காட்டிச்
    சன்னத்த வீரனைப் போல்-அந்தச்
    சாலை வழி நடந்தான்!




( 185 )





( 190 )





( 195 )

பாரதி

புது நெறி காட்டிய புலவன்

தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்கு
என்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக் குநன்றி செலுத்துகின்றேன்.
உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்
எக்கா ரணத்தால்? என்பீ ராயின்,
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி

நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவ ரிற்சுப் பிரமணிய னென்று
சொற் பாரதியைச் சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.

இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன், முடிவுரை கூறுவேன் பின்பே:-
கொலைமலிந்த நாளில் கொல்ல நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநாம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முதியோர் சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிறித்தவர் சூழ்இந்துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு.
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி
இராமலிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்.
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புளுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னாள் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்
விழுந்தார் விழித்தே எழுந்தார் என அவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்,
"வில்லினை யெடடா -- கையில்
வில்லினை எடடா -- அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா''
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
''பாருக்குள்ளே நல்ல நாடு -- இந்தப் பாரதநாடு''
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்னையானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்.
''தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் -- இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்''
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்:
''முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள்-அவள்
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் -- எனிற்
சிந்தனை யொன்றுடையாள்.''
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
''நீலத்திரை கடல் ஓரத்திலே -- நின்று
நித்தம் தவம்செய் குமரியெல்லை''
கற்பனைக் கிலக்கியம் காட்டிவிட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்;
''இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதம்திரு இரண்டு மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும்
விதம்தருகோடி இன்னல் விளைத்தெனை யழித்திட் டாலும்
சுதந்திரதேவி நின்னைத்தொழுதிடல் மறக்கி லேனே-''
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்கள்:
''எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு''
''விடுதலை! விடுதலை! விடுதலை!''
''மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே'.-என்றறைந்தார் அன்றோ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்.
''செந்தமிழ் நாடென்னும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே''-என்றான்.
சினம் பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம் எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்.
''வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா-அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா'' என்று கோலம் புதுக்கினான்.
பெண்உ தட்டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லுகின்றேன்:

''அமுதூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்''
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
'முனைமுகத்து நில்லேல்'-முதியவள் சொல் இது.
'முனையிலே முகத்துநில்'-பாரதி முழக்கிது!
'மீதூண் விரும்பேல்'-மாதுரைத் தாள் இது.
'ஊண்மிக விரும்பு'-என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர்-'கோல்கைக் கொண்டுவாழ்'
'குன்றென நிமிர்ந்துநில்,' 'நன்று கருது'
'நினைப்பது முடியும்', 'நெற்றி சுருக்கிடேல்'
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாயச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தெளிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.

   (அனைத்திந்திய வானொலி திருச்சி நிலையத்தில்
   5-வது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக்
   கூறப்பட்டது. 1946)



( 200 )




( 205 )




( 210 )





( 215 )






( 220 )




( 225 )




( 230 )




( 235 )




( 240 )




( 245 )




( 250 )




( 255 )




( 260 )




( 265 )




( 270 )




( 275 )




( 280 )




( 285 )




( 290 )




( 295 )




( 300 )




( 305 )




( 310 )




( 315 )




( 320 )




( 325 )




( 330 )




( 335 )




( 340 )




( 345 )





( 350 )




( 355 )




( 360 )





( 365 )




தேன் கவிகள் தேவை

பொழுது விடியப், புதுவையி லோர்வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார், கடிதங்கள் வந்திருக்கும்
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார்
முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படித்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை

அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னனென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள் பெறும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்.
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட்டரைஇருக்கும்

கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்;
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்,
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்.
வாசித்தார் ஐயர், மலர் முகத்தில் வாட்டமுற்றார்.
'என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்;
பாட்டெழுத வேண்டாமாம் பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை' என்றுரைத்தார்.
பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் 'சோர்வெ'ன்னும்
'காரிருளில் கால்வைத்தார் ஊக்கத்தால் மீண்டுவிட்டார்.
''பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?'
என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார்;
'நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை' என்றார்.

நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்.
ஆங்கிலம் வல்ல கசின்ஸ் என்னும் ஆங்கிலவர்
'நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்கு நல்ல பாட்டெழுதித் தாருங்கள்'
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார் எம்மை அபிப்பிராயம்கேட்டார்
'வேண்டும் எழுதத்தான் வேண்டும்' என்றோம். பாரதியார்

'வேண்டும்அடி எப்போதும் விடுதலை' என்
றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார்.
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற
வீ.வீ.எஸ். ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
ஆங்கிலவர், பாரதியார் ஆர்ந்த கவித்தேனை
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் ''தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்'' என்றுரைத்தார்;
தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர்
தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!
''தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர்
பயன் தெரிந்தார் நம்தமிழர்'' என்றுரைத்தார் பாரதியார்.
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள்
வெல்ல வருந்திருநாள்!



( 370 )




( 375 )





( 380 )




( 385 )





( 390 )




( 395 )




( 400 )





( 405 )




( 410 )





( 415 )




( 420 )




( 425 )




( 430 )

பாரதி உள்ளம்

சாதி ஒழித்திடல் ஒன்று-நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால்-மற்றப்
பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி-நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே-நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!
என்றுரைப் பார்என் னிடத்தில்-அந்த
இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை-நான்
இன்றும் இருப்பதனாலே!
பன்னும்நம் பாரதியாரின்-நல்ல
பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு-நம்
நற்றமிழர்க் கெழில் மூச்சு!
மேலவர் கீழவர் இல்லை-இதை
மேலுக்குச் சொல்லிட வில்லை
நாலு தெருக்களின் கூட்டில்-மக்கள்
நாலா யிரத்தவர் என்று-காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று-சொல்லும்
தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும் அப்பாரதி சொல்வார்-''சாதி
வேரைப் பொசுக்குங்கள்'' என்றே.
செந்தமிழ் நாட்டினிற் பற்றும்-அதன்
சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ-எந்த
நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை-கையிற்
காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி-நல்ல
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.



( 435 )




( 440 )




( 445 )




( 450 )




( 455 )




( 460 )

மகா கவி

*இது அந்நாளில் ஆனந்த விகடனில் ''ரா.கி.'' (கல்கி)யால்
பாரதி உலக கவியல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத்
தக்கன உள்ளன என்றும் எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.

*பாரதியார் உலககவி!-அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக்குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையவர் அல்லர். மற்றும்


வீரர் அவர்!-மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பால் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தெளிவாக, அழகாக, உண்மை யாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.

பழையநடை பழங்கவிதை, பழந்த மிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்தாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்!
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!

கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்தி ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம்; சமத்வ உள்ளம்;
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில், அண்ணல் தந்த
தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!

ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை, கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலிசபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்! மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!

'பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே' யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென்பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவனைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்சகர்கள் .

'சாதிகளே இல்லையடி பாப்பா' என்றார்
'தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்' என்றார்.
சோதிக்கின் ''சூத்திரற்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி''
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார், நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும்படி 'பழமை பழமை என்பீர்
பழமைஇருந்திட்டநிலை அறியீர்' என்றார்.

தேசத்தார் நல்லுணர்வு பெறும்பொ ருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி, அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசைபொறுத்தார் நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார். இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.

வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சிலநாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்,
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைத்கிழுக்கும் கற்பிக் கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?

( 465 )





( 470 )





( 475 )





( 480 )





( 485 )




( 490 )





( 495 )





( 500 )




( 505 )





( 510 )




( 515 )





( 520 )





( 525 )




( 530 )





( 535 )

செந்தமிழ் நாடு

(செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற
பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)


தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிச்சங்கத் தார் உரைத்தார்
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
பலநண்பர் வந்து பாரதியாரை
நலமாகக் கேட்டார்; அதற்கு நம்ஐயர்
என் கவிதைதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார்
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார்; போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்!
'அந்தவிதம் ஆகட்டும்' என்றார்கள் நண்பரெலாம்.
''செந்தமிழ் நாடென்னும் போதினிலேயின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே'' என்று
அழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்
காதினிக்கும் நல்லகருத்தினிக்கும் அஃதிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு!

( 540 )




( 545 )




( 550 )




( 555 )

திருப்பள்ளி எழுச்சி

(திருப்பள்ளி எழுச்சி என்ற பாடலைப்
பாரதி ஏன் பாடினார்)


நற்பெரு மார்கழி மாதமோர் காலை
நமதுநற் பாரதியாரோடு நாங்கள்
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்
பெற்ற முதுவயது அன்னையார் ஐயரே,
பீடு தரும் ''திருப் பள்ளி யெழுச்சி'' தான்
சொற்றிறத் தோடுநீர் பாடித் தருகெனத்
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே

நீல மணியிருள் காலை அமைதியில்
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின்
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்,
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,
காலை மலரக் கவிதை மலர்ந்தது;
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது!
ஞானப் ''பொழுது புலர்ந்த'' தென் றார்ந்த
நல்ல தமிழ்க்கவி நாமடைந்தோமே!




( 560 )





( 565 )




( 570 )

நாடக விமர்சனம்

ஒருநாள்நம் பாரதியார் நண்பரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்த் திருந்தார். அங்கே
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத்தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி
''என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ'' எனும்பாட்டைப் பாடலானான்!
வாய்பதைத்து பாரதியார் கூவு கின்றார்;

மயக்கம்வந் தால்படுத்துக்கொள்ளு வதுதானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்!
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்
சரிதானே பாரதி சொன்ன வார்த்தை?
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்.
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான், தூங்கி விட்டால்
முடிவுநன்றா இருந்திருக்கும் சிரமமும்போம்!



( 575 )




( 580 )





( 585 )