பக்கம் எண் :

அவள் அப்படி

                   (தனித்தமிழ் வண்ணம்)

         (இசை ; கானடா               தாளம் ; ஆதி)

              தனதன தனதன தனதன தத்தன
              தனதன தனதன தனதன தத்தன
              தனதன தனதன தனதன தத்தன
              தனதன தனதன தனதன தத்தன தனதானா

       அமிழ்தமிழ் தமிழ்தெனில் இருதமிழ் கிட்டிடும்
       அவளிதழ் நினைவினில் விளைவன முத்தமிழ்
       அழகிய முழுமதி அவள்முகம் ஒப்பது
       கருவிழி இருகயல்! மொழிகனி ஒப்பது -- கதையாமோ!

       கமழ்குழல் மலரொடும் அணிகள் சுமப்பது!
       குறுநகை உலகினை ஒளியில் அமைப்பது!
       கனமணி அணியிழை கவிஞர்ம லைப்பது!
       கலையது கதிரிழை நெசவில்வி ரித்தது -- மிகையாமோ!

       சுமையுடல் எனமிகு துயர்கொ ளுடுக்கையை
       மெலிவுறு கொடியினை நிகருமி டுப்பினள்
       சுனையினை அழகுசெய் மரையின்ம லர்க்கையின்
       விரலிடை நகமது கிளியைநி கர்ப்பது -- தவறாமே

       நமதொரு தமிழகம் அடைதோர் வெற்றியும்
       நடைமுறை தனிலுறும் மகிழ்தரு பெற்றியும்
       நணுகிய தெனமனம் மகிழ்வைய ளிப்பவள்
       நடுவெயில் இடையவள் நறுநிழல் ஒப்பவள் -- அறிவாய்நீ










( 5 )





( 10 )





( 15 )





( 20 )

நீ வேண்டாம்

         இலவுகாத்த கிளியானேன் நானே -- அவன்
         என்னைத்தெருவில் விட்டுச்சென்றிட் டானே
         நிலையாக நம்பியிருந் தேனே -- அவன்
         நினைத்ததைநான் அறியவில்லை மானே!

         தலையில்அடித் தான்மணப்பேன் என்று -- ''நீ
         தமக்கை மகளே'' எனப்பு கன்று
         குலையில்அடித் தான்பாவி இன்று -- கருங்
         குரங்கிடத்தில் அன்புவைத்தான் சென்று!

         தேனிருக்க வேம்புகொள்ள லாமா? -- என்னைத்
         திகைக்கவிட்டா யோஅருமை மாமா!
         நானிருக்க அவளைஎண்ண லாமா? -- என்னை
         நலியவிட்டா யோஅருமை மாமா?

         நானிப்படி கேட்டேனடி கெஞ்சி -- அவன்
         நவின்றமொழி கேளடிஎன் வஞ்சி;
         யானெழுதும் அஞ்சலையும் மிஞ்சி -- பள்ளி
         ஏகலில்லை நீசிறுநெ ருஞ்சி !

         உருவணக்கம் தரும்உனக்கே இன்பம் -- வே
         றொருவனைஏன் மணக்க வேண்டும் பின்பும்?
         திருமாலின் சிவனாரின் முன்பும் -- நீ
         செங்கைகூப்ப வாய்த்ததாஉன் அன்பும்?

         வரும்பார்ப்பைச் சாமிஎன் றழைத்தாய் -- உன்
         மாண்குடியும் நாணமுற வைத்தாய்
         பெரியாரின் நன்னெறிப ழித்தாய் -- தமிழ்ப்
         பெருநாட்டின் பெருமையைக்கு லைத்தாய்!






( 25 )





( 30 )





( 35 )





( 40 )





நெட்டுக்காரி

         கொஞ்சம் திரும்பிப் பாராயா? -- நான்
         கூப்பிடும் போதும் வாராயா?
         நெஞ்சின் ஆசை தீராயா? -- உன்
         நேயம் எனக்குத் தாராயா?

         கெஞ்சும் மொழியும் கேளாதா? - நீ
         கேட்டுத் திரும்ப மாளாதா?
         தஞ்சம் அளிக்கத் தாளாதா? -- உன்
         தாராளம் என்னை ஆளாதா?

         ஒருசொல்லுக்குப் பஞ்சமா? -- என்

         உள்ளக்கொதிப்புக் கொஞ்சமா?
         இரும்புதான்உன் நெஞ்சமா? -- அடி
         என்மேல்உனக்கு வஞ்சமா?

         திருவி ளக்கடி வீட்டுக்கே! -- நீ
         செந்தமி ழடிஎன் பாட்டுக்கே!
         உருவி ளக்கடி நாட்டுக்கே! -- தீ
         உயிரடி என் கூட்டுக்கே!

         அன்னத் தொடுநடைப் போட்டியா? -- என்
         ஆசைம னத்தினில் ஈட்டியா?
         பின்னழ கைமட்டும் காட்டியா -- நெஞ்சு
         பிளந்தனைமையல் மூட்டியா?

         முன்னழ கும்நகை முத்தழகும் -- நல்ல
         முத்தமிழ் கொட்டும்உ தட்டழகும்
         என்னழகும் சேர்இ ரண்டழகும் -- அடி
         இன்பத்தி லேநீந் தப்பழகும்!

( 45 )





( 50 )






( 55 )





( 60 )






( 65 )

கைப்புண் நோக்கக் கண்ணாடியா வேண்டும்?

        என் மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப் பாளா?

அன்னநடை நடப்பாளா? -- என்
முன்னே முன்னேவரு வாளா?
தன்னுடை திருத்து வாளா? -- தன்
மின்னிடை குலுக்கு வாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப் பாளா?

இப்படி வந்தால் தோளா -- லெனை
இடித்துக் கொண்டு போ வாளா?
அப்படிப் போகவி டாளா? - என்
அடியை யும்மதிப் பாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப்பாளா?

காலங் கடத்தக் கூடா -- தென்று
கையோடு பிடிப் பாளா? -- அவள்
ஆலம் பழத்தைப் பொறுக்கிப் பொறுக்கி
என்மேலே அடிப் பாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப்பாளா?

கொல்லைக்கு நான்போம் போதே -- அவள்
கொஞ்சும் கருங்குயில் போலே
மெல்ல மெல்லப் பாடு வாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப் பாளா?

என் நாய்க்குட்டிக்கு முத்தம் -- அவள்
என்னெதி ரேகொடுப் பாளா?
சின்னசிட் டுக்களின் கூடல் -- கண்டே
என்னையும் பார்த்தழு வாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப் பாளா?


( 70 )





( 75 )





( 80 )





( 85 )





( 90 )





( 95 )



இன்ப வெள்ளம்

       அன்றைக்குத்தான் சரிஎன் றாயே
       அப்புறம் என்னடி        நாணம்?
       இன்றைக்குத்தான் தனித்திருந்தாய்
       இன்னும் என்னடி        வேணும்?
       ஒன்றுக் கொடு கன்னத்திலே
       உயிரைக் காக்க          மயிலே
       ஓடைப் புனலில் ஆடவேண்டும்
       உறவு செய்யடி          குயிலே

       நன்றாகஉன் முகத்தைக் காட்டு
       நட்டுக் கொண்டதும்        ஏனோ?
       குன்றில்ஏறிக் கொம்புத் தேனைக்
       கொள்ளை கொண்டிடு       வேனோ
       அன்றிலைப்பார் சிட்டுக்கள் பார்
       அலுப்பில்லாத             காதல்
       ஆளிருந்தும் அறிவி ருந்தும்
       உனக்கேனடி              சாதல்?

       வலிதிழுப்பான் மகிழ்ச்சி கொள்வோம்
       என்று சும்மா        நின்றாய்
       கலிதவிர்க்க வந்தவளே
       கண்டுகொண்டேன்    நன்றாய்
       எலி இழுக்கும் மாம்பழம்போல்
       இருந்தேன் முன்     னாலே
       எட்டி இழு! கட்டித் தழுவ
       ஏன் சுணக்கம்       மேலே!

       மலை காணேன் மலர் காணேன்
       வைய கத்தைக்        காணேன்
       நிலை காணேன் உடல் காணேன்
       நிறை பொருள்கள்      காணேன்
       கொலைபுரிந்தாய் என்உடலைக்
       கொள்ளை கொண்டாய்   உள்ளம்
       கூடிவிட்டாய் காண்ப தெலாம்
       ஓர் இன்ப            வெள்ளம்

( 100 )





( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )




( 130 )

அவன்மேல் நினைவு

மனவீட்டினில் அவனிருக்கையில்
மறந்துறங்குவ தெப்படி! -- அடி
வஞ்சிக்கொடியே செப்படி -- அவன்
இனிக்கும்தமிழ் நாடிச் சென்றான்
என்று சொல்லவதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

இனிக்கப்பேசும் வாய் மறந்தே
யான் உறங்குவ தெப்படி? -- அடி
ஏந்திழையே செப்படி! -- அவன்
எனைவிடுத்தான் படிக்கச் சென்றான்
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

கட்டி அணைக்கும் கையை மறந்து
கண்ணு றங்குவ தெப்படி? -- அடி
கானக்குயிலே செப்படி! -- அவன்
எட்டிச் சென்றான் தமிழ் ஆய்ந்திட
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

ஒட்டும் அன்பன் உடல் மறந்தும்
உறக்கம் கொள்ளுவ தெப்படி? -- நடை
ஓவியமே செப்படி! -- அவன்
எட்டச் சென்றான் தமிழ் பரப்பிட
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

தொட்டால் சுவைக்கும் விரல் மறந்தே
தூக்கம் கொள்ளுவ தெப்படி? -- அடி
தோகை யேநீ செப்படி -- அவன்
எட்டுத் திசையும் தமிழுக்குச் சென்றான்
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

பட்டால் இனிக்கும் உதட்டை மறந்து
பாயிற் படுப்ப தெப்படி? -- அடி
பச்சைக் கிளியே செப்படி? -- அவன்
இட்டே தமிழ் பரப்பச் சென்றான்
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்





( 135 )





( 140 )





( 145 )





( 150 )





( 155 )




( 160 )





( 165 )

அவன் எழுதிய அஞ்சல்
(அஞ்சல் விளக்கம்)

கேளாய் தோழி? கேட்டில் உழன்றநான்
ஆளன் எழுதிய அஞ்சலால் மகிழ்ந்தேன்.
செய்திச் சுருளுக்குச் செப்பும் பெயரே
அஞ்சல் என்பதாம்; அதுகாரணப் பெயர்!
நானதை விளக்குவேன் நன்று கேள்நீ:

எழுதிய செய்திச் சுருளை எவரும்
ஆவ ணத்திற் சேர்ப்பர்; அவற்றை
ஊர்க்கொரு பையே யாகச் சேர்த்தே
அஞ்சற் காரன் வாயிலாய் அனுப்புவர்.

தகட்டுச் சிற்றிலை மிகப்பல கோத்த
வளையம் தலையில் வாய்ப்புறப் பொருந்திய
கலகலத் தடியும் கையும் ஆகிய
வலியான் ''அஞ்சல் வன்சுமை'' தாங்கிய
நெடுவழி செல்லுவான் நீகண் டிருப்பாய்!
அஞ்சலோன், அதைப்பிறர் பறிப்பார் என்றே
அஞ்சலால் செய்திச் சுருளுக்கு அஞ்சல்
என்பதோர் ஆகு பெயரா யிற்று.

மற்றுமோர் காரணம் வழுத்துவ துண்டு
''அரசினர் ஆள்இவன்'' என்று சலங்கை
உரைத்தலால் பறிக்க எண்ணுவார் உள்ளம்
அஞ்சலால் செய்திச் சுருளைத் தமிழர்
அஞ்சல் என்றனர்! என்பதும் அறிக.

இவ்விரு காரணம் இருக்க நானுமோர்
காரணம் கழறு கின்றேன்! அயலூர்
சென்ற காதலன் சேயிழை என்னை
மறந்தா னோஎன மருண் டிருக்கையில்
அஞ்சா தேஎனும் அருமைப் பொருள்படும்
அஞ்சல் என்றதால் சுருளுக்கு
அஞ்சல் என்றபேர் அமைந்தது நன்றே!










( 175 )





( 180 )





( 185 )





( 190 )




( 195 )

அம்மாபோய்விட்டாள் அன்பை அழை!

காளையடி வீட்டுக் கொல்லையிலே! -- சென்று
கட்டிப்போட்டுவாடி என்மயிலே
வேலையோடு சென்று புல்லிடுவேன் -- பயன்
விருந்துக்கு நன்றி சொல்லிடுவேன்
தாளினைப் போடடி! என்அன்னை -- வீட்டில்
தனியே விட்டுச்செல் வாளென்னை
பாளை பிளந்த சிரிப்புடையாய் -- அந்தப்
பத்தமடைப்பாயை நீவிரிப்பாய்!

என்னம்மை இன்னமும் போகவில்லை -- தோழி
இங்குநம் ஆசையும் தீரவில்லை
இன்ப இலக்கியம் கையிலுண்டு -- நம்
ஏக்கம் தவிர்த்திட வாய்ப்புமுண்டு

இன்றைய வாய்ப்பினை நானிழந்தால் -- வே
றெப்போது நான்பெறக் கூடுமடி?
அன்பனைச் சென்றழை என்தோழி -- என்
அம்மையும் சென்றுவிட்டாள் வாழி!





( 200 )





( 205 )





( 210 )