பக்கம் எண் :

பொங்கல் வாழ்த்துக் குவியல்

பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர்

பொன்னூசல்

பொன்னூசல் எல்லோரும் ஆடுவமே -- நல்ல
பொங்கற் புதுநாளைப் பாடுவோமே
தென்னாடு வாழிஎன் றாடுவமே -- நல்ல
செம்பரிதி வாழிஎன் றாடுவமே! (பொ)

கன்னடம் தெலுங்குமலை யாளம் துளுவம் -- நல்ல
கன்னல்நிகர் செந்தமிழும் ஒன்றென்றே
மன்னிய திராவிடர்கள் எல்லோரும் -- பிறர்
வந்தசைக்க ஒண்ணாத குன்றென்றே! (பொ)

சந்தனப் பொதிகைமலை எங்கள் உடைமை -- வெண்
சங்கெறியும் தென்குமரி எங்கள் உடைமை
வந்தசைக்க ஒண்ணாத மறவர் நிலம் -- நல்ல
வங்கம்வரை எங்கள்நிலம் வாழிய என்றே! (பொ)

முத்தெடுக்கும் மூன்றுகடல் நட்டநடுவில் -- நல்ல
மூல்லைமரு தம்குறிஞ்சி நெய்தல் கிடந்தே
மெத்தநலம் செய்திடும் திராவிடநிலம் -- நன்கு
வெல்கவெல்க வெல்கவெல்க வெல்கஎனவே! (பொ)





( 5 )





( 10 )





( 15 )
பந்தாடல்

          (எடுப்பு)

[ பொங்கல் திருநாளில் பூப்புனை பந்தாடிச்
செங்கதிர் வாழ்த்திடுவோம் -- நாம்
செங்கதிர் வாழ்த்திடுவோம். (பொ)

          (உடனெடுப்பு)

தங்கவெயில் ஒளிதன்னில் குளிப்போம் -- செந்
தமிழில்பாடி உள்ளம் களிப்போம் (பொ) ]

          (அடிகள்)

அங்கங்குப் பாடகளும் அங்கங்கு நல்லிசையும்
அள்ளூறச் சொல்லுகின்ற போது -- இங்
கெங்கும் நறும்புகையும், பூவிங்கலவையும்
ஏறிக் கமழும் விண் மீது
சங்கை அலையெறியும் தண்கடல் நாட்டிலே
தாம்தாம் தாம் என்றே நாமும்குதித்தே. (பொ)

விட்டெறிந்த பூப்பந்து சிட்டாய்ப் பறந்ததுகண்
எட்டாத உயரத்தில் சென்றே -- நம்
பட்டாடை பறக்கக் கூந்தல் பறக்கமுற்
பட்டுப் பிடிப்போம் அதைநன்றே.
கட்டாணி முத்துநகை மங்கையரே கைப்பந்து
கட்டுத் தளரும்வகை விட்டடிப்போம் தொடர்ந்து. (பொ)

















( 20 )





( 25 )
பொங்கல் விளையாட்டு

தையும் பிறந்தது நன்றாம் -- நாம்
தைதை தைஎன்றாடு கின்றோம்
வைஇங்குப் பொங்கலை என்றோம் -- நாம்
வாயார அள்ளி உண்கின்றோம்.

நெய்யில் மிதக்கின்ற பொங்கல் -- பால்
நிறைய வார்த்த புதுப் பொங்கல்
செய்யில் விளைந்த முத்தரிசி -- நறுந்
தேனாய் இன்க்கின்ற பொங்கல்.

முந்திரிப் பருப்புமிட்ட பொங்கல் -- கொடி
முந்திரிப் பழங்களிட்ட பொங்கல்
சிந்தாமல் கையில் அள்ளும்போதே -- வாய்
தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்.

இந்த மட்டுந்தானா சேதி? -- பார்
இவ்வளவு செங்கரும்பு மீதி.
முந்தி இதில் நீயும் ஒருபாதி -- எடு
மொய்த்திருக்கும் எறும்பினை ஊதி.
( 30 )





( 35 )





( 40 )





( 45 )

திராவிடர்க்குப் பொங்கல் வாழ்த்து

(எழுசீர் விருத்தம்)

பொங்குற்றுப் பால் இனிது
குழைந்தது முத்தரிசி
புத்துருக்குநெய் புறங்கை ஓழுகத்
தங்கத்தைத் தூவு கதிர்
வாழ்த்தியே பாற் பொங்கல்
தைத்திரு நாளில் உறவுடன் உண்பீர்
இங்கிந்த நாள்போல
என்றுந் திராவிடர்
இடர்கள் நீங்கி விடுதலைஎய்தி
வங்கத்தை முக்கடலை
மறவர்தோள் காத்திட
வந்திடும் புகழ்க்குலம் மகிழ்ந்து வாழியவே!
( 50 )




( 55 )




( 60 )

திராவிடர் மீட்சி!

(எழுசீர் விருத்தம்)

ஒன்றுநம் உள்ளம்; ஒன்றுநம் மகிழ்ச்சி;
ஒன்றுநாம் உண்டதீம் பொங்கல்;
ஒன்றுநாம் அனைவரும்; ஒன்றுநம் உறவும்
உணர்ந்தனம் பொங்கல் நன் னாளில்!

இன்றுபோல் என்றும் இன்பம் ஓங்கிடுக!
இன்பத் திராவிட நாட்டை
நன்றுநாம் மீட்க உறுதிமேற் கொள்வோம்!
நனிவாழ்க திராவிட நாடே!



( 65 )




ஐந்தாம்படை அழிக

அமிழ்தென்று தைப்பொங்கல் உண்டோம்இந் நாளே
தமிழென்று போர்தொடுப்போம் தாவி -- நமை நலிப்பார்
உள்ள பகைவரல்லர்; உட்பகையே ஆம் என்றே
உள்ளுக வாழ்க உயர்ந்து.
( 70 )

வாழிய பொங்கல் நற்றிருநாள்!

(எழுசீர் விருத்தம்)

வாழிய வாழிய திராவிட மக்களே!
வாழிய பொங்கல்நற் றிருநாள்!
வாழிய தமிழாம் திராவிட நன்மொழி!
வாழிய திராவிடர் உரிமை!
ஏழியல் நரம்பின் யாழுநல் லிசையும்
என்னவே தலைவியர் தலைவர்
சூழுறு காதல்இன்பத் தியைந்த
தூயவாழ் வோங்குக நன்றே.

( 75 )




( 80 )

வாழ்த்து

(வெண்பா)

வெல்க தமிழர்! மிகஓங்க செந்தமிழ்தான்!
வெல்க தமிழர் விடுதலை! -- பல்க
தமிழர் அறமே! தனித்துயர்க யாண்டும்
தமிழர்நல் வாழ்வு தழைத்து.



( 85 )

பொன் கொடிக்குப் பொங்கல் வாழ்த்து

(எடுப்பு)

திராவிட நாட்டு மணிக்கொடிக்கே நாம்
பெரும் பொங்கல் வாழ்த்துரைப்போம் (தி)

பொன் கொடிக்குப் பொங்கல் வாழ்த்து

           (எடுப்பு)

திராவிட நாட்டு மணிக்கொடிக்கே நாம்
பெரும் பொங்கல் வாழ்த்துரைப்போம் (தி)

         (உடனெடுப்பு)

கருமுகில் கருங்கடல் பரப்பினில் மாணிக்கப்
பரிதி முழுவட்டம் ஒளிசெய்தல் போன்ற (தி)

           (அடிகள்)

திருவும் திருவும் அரிய செயல்களும் ஓங்குக
திராவிட நாட்டினில் எங்கும்!
அருவியைப் போலும் அறிஞரின் உள்ளம்
அழகிய நூல்பல நலிக!
திரைகடல் மூன்றொடு வங்க வடக்கெல்லை
சேரும் திராவிடநாடு செழித் தோங்க. (தி)

பொங்கற் புதுநாளைத் தோற்றி எழுந்த
பொன்வெயில் வாழிய நன்றே!
தெங்கு, கழுகு, செங்கரும்பும் விளைக! நன்
செய்யும் வளங் கொழிக்க என்றும்
எங்கள் விடுதலை மறுப்பவர் ஒழிக
இன்பத் திராவிடம் வாழிய நன்றே! (தி)












( 90 )




( 95 )





( 100 )

பொங்கல் பாட்டு

பொன்னோ, பொன் ஏடவிழ்ந்த
பூவோ "எழுந்தகதிர
தென்னாடு பூரித்தது தோழி -- இருள்
சென்றே மறைந்த தென்ன தோழி?

இன்னாத ஆட்சி எனில்
வாழாது வாழிய நாம்
தென்னாட்டு விடுதலை தோழா -- புதுச்
செம்பரிதி பூரித்தது தோழா.

தைப்பொங்கல் இன்பம்
தரும்பொங்கல் உண்டாடப்
பொற்பந்தல் வானோடு தோழி -- கதிர்
போடும் வியப்பென்ன தோழி?

முப்பாங்கும் ஆழாழி
முன்விந் தியக் குன்றின்
இப்பாங்கு நம் ஆட்சித் தோழா -- கதிர்
இட்டான் விழாப் பந்தல் தோழா.

செந்நெல் அடித்ததுவும்
செங்கரும்பு வெட்டியதும்
பொன்னங் கதிர் விளைவு தோழி -- பால்
பொங்கிவரும் பொங்கலென்ன தோழி?

தன்னல் நீக்கி! நல்ல
தைப் பொங்கல் இட்டே வரும்
தென்பாங்கு பாடுவதில் தோழா -- இன்று
சேர்ந்தின்பம் எய்திடுவர் தோழா.

மூடுபனிப் பகையின்
மூட்டறுத்துக் கீழ்க்கடலில்
பாடி எழும்பரிதி தோழி! -- அந்தப்
பாட்டுக்குப் பொருளென்ன தோழி?

கூடு திறந்திடவும்
கொஞ்சு தமிழ்க் கிளிகள்
காடு பழம்பழுக்கத் தோழா -- மிகக்
'கிண்ணா யிருக்க' என்னும் தோழா!

ஆவின் நறும்பால், நெய்
யாழியுள் முத்தரிசி
தூவும் பருப்பேலம் தோழி -- வெல்லம்
தோய்ந்த சுவைப் பொங்கலென்ன தோழி?

நாவலந் தீவினிலே
நம்கல்வி நம்ஒழுக்கம்
தேவைசிறந்த வென்று தோழி -- நன்கு
செப்புவது தைப்பொங்கல் தோழா!

தேனோடு முக்கனிகள்
தென்னாட்டுப் பண்ணியங்கள்
ஏனோடி பொங்கலுடன் தோழி -- சுவை
ஏற்றி நுகந்தார்கள் தோழி?

மீனோடு வில் புலியும்
மேவு கொடி மூவரசின்
மேனாள் சுவையுணரின் தோழா -- நமை
விட்டுப்பிரிந்திடுமோ தோழா

எல்லார்க்கும் நல்லாடை
எல்லார்க்குமே போங்கல்
இல்லாமையே இல்லை தோழி -- எனில்
என்றைக்கும் வாய்க்குமோ தோழி?

பொல்லாத ஆட்சியினைப்
போக்கித் திராவிடரின்
செல்வாக்கில் இற்றைநிலை -- தோழா
தேயாது செய்திடுவோம் தோழா.

எங்கும் மகிழ்ந்தாடி
இன்பத் தமிழ் பாடி
மங்கையர் ஆடவர் தோழி -- இன்ப
வாழ்விற் பொலிந்தனர் என் தோழி?

அங்கங்குப் பொன்னூசல்
அங்கங்குக் கச்சேரி
பொங்கலோ பொங்கல் என்தோழா -- பாற்
பொங்கல் நான் வாழ்க என்தோழா!




( 105 )






( 110 )





( 115 )





( 120 )





( 125 )





( 130 )





( 135 )





( 140 )





( 145 )






( 150 )





( 155 )





( 160 )





( 165 )