பக்கம் எண் :

ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது!

ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது!



     எடுப்பு

பேறெல்லாம் பெற்றேன் மகனே -- உன்னைப்
பெற்றதால் பெறாத பேறெல்லாம் பெற்றேன்.

     தொகுப்பு

சீரெல்லாம் பெற்றேன் மகளே -- உன்னைப்
பெற்றதால் செந்தமிழ்ச் சீரெல்லாம் பெற்றேன்!

     அடிகள்

ஒருமகன், ஒருமகள் என்னிரு கண்கள்
உறவன்புக் காதலில் பிறந்தசீர்ப் பண்கள்
அருந்தமிழ் நாட்டுக்கு அளித்த நன்கொடை
அனைத்துல கொன்றாக்கும் தொண்டுக் கின்படை !
வள்ளுவர் இரண்டடி எம்இருபிள்ளை
வாழ்வார்க்கு் இலக்கணம் கற்பிக்கும் கிள்ளை !
அள்ளூறிப் போகின்றேன் மக்களால் யானே
அன்பின் வழியினர் அமிழ்திவர் தேனே !




( 5 )













( 10 )
முத்தம் கேட்கும் மொய்குழல்

பத்துத் திங்கள் கிடந்து
சிப்பி உடல் உடைந்து
முத்தே எனக்கொரு முத்தம் கொடு -- பவழக
கொத்தே எனக்கொரு முத்தங்கொடு!

செத்துப்போனேன் உனைப்
பெற்றேன் பிழைத்தேன் என்
சொத்தே எனக்கொரு முத்தங்கொடு -- மனம்
வைத்தே எனக்கொரு முத்தங்கொடு!

முற்றா இளம்பிறை நீ
சிற்றானைக் கன்றானாய்
சற்றே எனக்கொரு முத்தம்கொடு -- பயற்று
நெற்றே எனக்கொரு முத்தம்கொடு!

சுற்று மயிர்ச் சுருள்
நெற்றி நிலாக் கதிர்
பெற்றாய் எனக்கொரு முத்தம்கொடு -- உன்
நற்றாய் எனக்கொரு முத்தம் கொடு!

கொம்புத் தேன் சிரிப்பில்
ததும்பத் தவழுந்தாய் நீ
தம்பி எனக்கொரு முத்தம்கொடு -- தங்கக்
கம்பி எனக்கொரு முத்தம்கொடு!

தெம்பு தமிழ்க்கு வந்த
வம்பை விலக்கும் கூர்
அம்பே எனக்கொரு முத்தம்கொடு -- வெற்றிக்
கொம்பே எனக்கோர் முத்தங்கொடு!


( 15 )





( 20 )






( 25 )





( 30 )



( 35 )
தொட்டிலிற் பிள்ளை


கோணை கொண்டை எனக்குப் போட்டு
கோலம் செய்யும் மாமி -- என்

ஓணான் மீசைக் காரரான
உண்மை யுள்ள மாமன்

பேணிக் கையில் ஏந்த ஒரு
பேரன் வேண்டும் என்றார்;
மாணிக்க மாய் வந்த வனே
மகிழ்ந்து தொட்டில்      ஆடு -- மிகப்
புகழ்ந்ததடா நாடு!
என்னைப் பெற்ற அப்பா அம்மா
ஏழாந் திங்கள்         என்னை -- நற்
பொன்னியங்கி வண்டி யேற்றிப்
போனார்கள் தம் வீடு;
பன்னலம் செய்து வந்தார்
பத்தாந் திங்கள்        ஒன்றில் -- என்
தென்னவனே நீ பிறந்தாய்
தேனே தொட்டில்      ஆடு -- மிகச்
செழித்ததடா                 நாடு!
சின்னக் கண்ணே, மகிழ்ச்சியாக
உன்னைத் தூக்கி       வந்தேன் -- நம்
கன்னத்திலே முத்தமிட்டுக்
கையேந்தினார்                பாட்டி
பொன்வண்டைப் போலே மாமன்
பூவே உன்மேல் மொய்த்தார் -- மிகு
தன்மானத்துப் பொன்விளக்கே
தங்கத் தொட்டில்       ஆடு -- புகழ்
சாற்று தடா                  நாடு!





( 40 )





( 45 )




( 50 )




( 55 )




( 60 )
வலியார் இளையாரை வாட்டுவது எங்கே?

தாய் இடை சுமந்த சேய்தன் தந்தையை
விட்டான் ஓர் அறை!

கட்டி அணைத்து மகிழ்ந்த கணவனை
மங்கை நோக்கி,

"இளையார் வலியார்க் கின்னல் செய்யினும்
வலியார் இளையாரை வாட்டிடார என்பது

கலக உலகிற் காணோம்; நிலவக் கண்டோம்
நம் இல் என்றாளே.

( 65 )







( 70 )
தந்தை மகனுக்கு

பாரோர் உன்தமிழ் ஆராய்ச் திதனைப்
பாராட்ட வேண்டும் -- தம்பி
நேரே உன்தமிழ் உலகில் மேலென
நீ நாட்ட வேண்டும்.

ஆரானாலும் உன் தமிழே
அமிழ்தென வேண்டும் -- தம்பி
பேராசிரியர் புகழ்ந்திட நீ
பேசுதல் வேண்டும்;

எம்மொழிக்கும் தமிழ்ச் செம்மொழி வேரென
எண்பிக்க மாட்டாயா -- தம்பி
நம் அடுக்களையில் நாய்பு குந்ததை
நவின்று காட்டாயா?

பொய்ம்மறை ஆட்சியைப் போட்டுப் புதைத்திடப்
போரொன்று காணாயா? -- தம்பி
மெய்ம்மறை வென்றது வென்றது, நாடெனும்
மேன்மையும் பூணாயா?

தமிழ்மொழி என ஒன்றிலையாம் -- தமிழ்
நாடென ஒன்றிலையாம்,
உமிழ்த் தக்க சழக்கர் சழக்கை
ஒழிந்திட வேண்டுமடா?

நமதடா இந்த நாவலத் தீவு
நம்தமிழே எங்குமாம்;
தமிழ் நினைக்கையில் பகையை வேரோடு
தாக்கிடத் தூண்டுமடா!



( 75 )






( 80 )





( 85 )





( 90 )





( 95 )
சிறந்த விளையாட்டுகள் விளையாடு

    மெல்ல ஓடினால் ஒலிக்கும் தண்டை -- நீ
    விரைந்தோடினால் உடையும் மண்டை! (மெல்ல)

செல்வமே நீ ஆடவேண்டாம் காற்றில் -- நீ
செல்லவேண்டாம் நொள நொள நொளச் சேற்றில்; (மெல்ல)

    கும்மி யடிப்பாய். பூக் கொய்வாய்.
    அம்மி அரைப்பாய் ஆடை நெய்வாய்;

அம்மா விலையாடு தெரு ஓரம் - கேள்
ஆடு மாடு வண்டி வந்து சேரும். (மெல்ல)

    குடத்நைத் தூக்கி இடுப்பில் இடுக்கித்
    தண்ணீர் ஊற்றுப் பூஞ்செடிக்குப்

படித்திருந்த பள்ளிக் கூடப் பாட்டு -- நீ
பாடி வரிசையாய் நடந்து காட்டு! (மெல்ல)

    தமிழ் நாட்டில் சீனர் வந்தார் என்று -- நீ
    தமுக்கடிப்பாய் ஊர் நடுவில் நின்று;

அமைப்பாகத் துப்பாக்கியை நீட்டு -- நீ
அவரை அவர் நாட்டினுக்கே ஓட்டு. (மெல்ல)

இந்தி வேண்டும் என்று சொல்வார் சொல்லை
ஏற்காதே! உடைப்பாய் அவர் பல்லை!

    செந்தமிழே வாழ்க என்று பாடு -- மிகச்
    சிறந்த விளையாட்டை விளையாடு. (மெல்ல)






( 100 )






( 105 )







( 110 )






( 115 )
காலம் என்பது ...

காலம் என்பது மணியா தாத்தா?
காலம் என்பது நாளா தாத்தா?
காலம் என்பது திங்களா தாத்தா?
காலம் என்பது ஆண்டா தாத்தா?

காலம் என்பதைக் காணோம் பாப்பா
பொருள்களின் நிகழ்ச்சி உண்டு பாப்பா
செங்கதிர் என்ப தொருபொருள்! அதுதான்
திரிந்து வருவது செங்கதிர் நிகழ்ச்சி.

இன்னும் இதனைக் கேட்பாய் பாப்பா;
மேற்கிற் புதைந்தது செங்கதிர் முன்பு

கிழக்கில் எழுந்தது செங்கதிர் பின்பு.
கோழி விழுத்தது கொக்கோ என்றது
மேழி சுமந்து விரைந்தான் உழவன்,
அப்பம் சுட்டுக் கொடுத்தாள் அம்மா
பள்ளிக் கூடம் பறந்தாய் நீதான்.

இதுதான் விடியற் காலமா தாத்தா?
கிழக்குக் காலமா? செங்கதிர் காலமா?
கோழி காலமா? கொக்கோ காலமா?
மேழி காலமா? உழவன் காலமா?
பள்ளி காலமா? பாப்பா காலமா?

நிகழ்த்தும்இப் பொருள்களின் நிகழ்ச்சி கண்டோம்
காலம் என்பதைக் காண்ணோம் பாப்பா.
காலம் வந்தது எப்படித் தாத்தா?

காலம் எனும் பெயர் கற்பனை பாப்பா.
ஏய்ப்பையும் தன்னலத்தையும்
பார்ப்பான் என்று பகர்ந்தது போலவே,





( 120 )





( 125 )





( 130 )





( 135 )






( 140 )
பொய்த் தோற்றங்கள்
ஓடும் புகை வண்டி தம்பி -- அது
நிற்பது போல் தோன்றக் கூடும்
ஓடாத மரம் அந்த நேரம் -- நமக்கு
ஓடுதல் போல் தோன்றும் தம்பி.

கூட வருவதைப் போலே -- நடந்தால்
குளிர் நிலவு தோன்றும் தம்பி
நாடு சுரண்டிடும் பார்ப்பான் -- மிக
நல்லவன் என்பதும் பொய் தம்பி.

நடக்கும் மணிப் பொறியின் முள்ளும் -- அது
நடந்து கொண்டே இருக்கும் தம்பி
நடப்பதை நாம் பார்ப்ப தில்லை --அது
நமது பிழை அன்றோ தம்பி.

கெடுக்கும் பார்ப்பனன் நம்மைத் -- தம்பி
கெடுத்துக் கொண்டிருப்பதும் மெய்யே
அடுத்திருந்தும் காண்பதில்லை -- நாம்
அறிவு பெறவேண்டும் தம்பி.

வாழ்வது போலிருக்கும் தமிழர் -- வாழ்வு
வறண்டு போவதை உணரோம்;
தாழ்வது போலிருக்கும் பார்ப்பான் -- வாழ்வு
தழைத்து வருவதை உணரோம்.

சூழ்ச்சி நடத்தும் பார்ப் பானால் -- நாம்
தொலைந்து வருவதை உணரோம்;
வீழ்ச்சி வருவதை நீக்கும் -- பெரும்
வீரம் பெறவேண்டும் தம்பி.
சாதி வலையினை அறுப்போம் -- இனித்
தமிழர்கள் ஒற்றுமைகொள்வோம்;
மோதி மிதித்துவிட வேண்டும் -- இங்கு
முட்டி எடுக்கவந் தோனை.

காது பொறுக்கவில்லை தம்பி -- அந்தக்
கயவன் சொன்னத்தைக் கேட்பாய்
பாதியில் வந்தநரிப் பார்ப்பான் -- தமிழ்
படைக்குத் தலைவன்என்று சொன்னான்.



( 145 )






( 150 )





( 155 )





( 160 )





( 165 )





( 170 )
என் பேரன்

     அழுக்குப் புழுதியில் ஆட லாமா?
     வழுக்கு வழியில் ஓட லாமா?
     என்றேன்! எதிரில் நின்ற பேரனை!
     அடிக்கக் கோலை எடுத்தேன்! அவனோ
     வில்லுக் கட்டஅக் கோலை வேண்டினான்
     கோலையும் கொடுத்துக் கட்ட நூலையும் கொடுத்தேன்
     நாலு முழத்திலே.

( 175 )




( 180 )
பிறந்த நாள் விழாவில்

                        எடுப்பு

   அம்மா அப்பா ஐயா வணக்கம்!
   உம்மால் பிறந்தேன் வளர்ந்தேன் -- அறிவடைந்தேன்
   அம்மா அப்பா ஐயா வணக்கம்!

        உடனெருப்பு

   கைம்மா றறியேன் பதின்மூன் றாண்டு
   கடந்தேன் நன்றி நவின்றேன் ஈண்டு;
   அம்மா அப்பா ஐயா வணக்கம்; உம்மால்
   பிறந்தேன் வளர்ந்தேன் அறிவடைந்தேன்.

          அடிகள்

   உற்றாற் என்னைக் காப்பது பாரம்
   உள்ள நாட்டார் என் வாழ்வுக்காதாரம்;
   கற்று வல்ல புலவர் எல்லாரும்
   கடுகள வருள்வைத்தால் நலமெல்லாம் சேரும்.

        அம்மா அப்பா ஐயா வணக்கம்; உம்மால்
        பிறந்தென் வளர்ந்தேன் அறிவடைந்தேன்.

   வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்
   மழையே செந்நெல் வயலே வாழ்க!
   வாழ்ந்தால் அல்லது காப்பவர் யாவர்?
   வாழ்கவே என்றன் இயல்புடை மூவர்.

        அம்மா அப்பா ஐயா வணக்கம்; உம்மால்
        பிறந்தேன் வளர்ந்தேன் அறிவடைந்தேன்.









( 185 )







( 190 )






( 195 )
வலியாரிடம் வாயாடாதே

   இரண்டு பக்கமும் வா வா என்றது  பூனை
   எதிரிலே தும் பிக்கை என்றது     யானை.

   உருண்ட துதிக்கை ஏனோ என்றது  பூனை
   ஊற்று நீரை உறிஞ்ச என்றது     யானை.

   திரண்டு நீண்ட பல்ஏன் என்றது    பூனை
   சீறும் புலியை தாக்க என்றது     யானை.
   
   இருண்ட மலை பாயா தென்றது    பூனை
   எடுத் தெறிந்தது பூனையைப் போய் யானை.
( 200 )






( 205 )
பிள்ளைக்குச் சோறுட்டல்

காக்கா காக்கா காக்கா பார்
கையில் நெய்யும் சோறும்,
வாய்க்குளிட்டால் பிள்ளை -- அதை
வாங்கேன் என்றா சொல்லும்?

கேட்கா தேநீ எங்கள் -- பைங்
கிளிக்கே வேண்டும் போ போ!
தாய்க்கா மீறும் பிள்ளை -- அது
தானே உண்ணும் சோறு!

ஒட்டாரம் பண்ணாமல் -- சோறு
உண்ணும் பார் நீ இங்கே,
தட்டா தெங்கள் பேச்சை -- அது
தங்கம் தங்கம் தங்கம்!

ஒட்டா துண்ணும் சோற்றை -- பார்
உமிழா தொங்கள் பிள்ளை
மட்டாய்க் குடிக்கும் தண்ணிர் -- அது
வயிரம் வயிரம் வயிரம்!

கொஞ்சம் தருவேன் உனக்கே -- எம்
கொடிமுல் லைக்கே வேண்டும்,
நெஞ்சம் புண்ணாகாதே -- நீ
நேராகப் பார் காக்கா!

கொஞ்சும் கிளிதான் உண்ணும் -- அது
கொட்டம் செய்யா தன்றோ?
நஞ்சா வேம்பா கூறு -- நல்
நறுநெய் கலந்த சோறு!


( 210 )





( 215 )






( 220 )





( 225 )





( 230 )
ஏன் அப்படி?

எழுந்தி ரென்றால் காலையிலே
இருகண் நன்றாய் மூடிடுவான்;
கழிந்த தென்றால் மிகநேரம்
கல்லைப் போல்உட் கார்ந்திருப்பான்
அழுந்தப் பேசி அனுப்பிடிலோ
அழுதே காலைக் கடன்முடிப்பான்;
உழுந்து வடைஅப் பந்தத்தால்
உண்டு கழிப்பான் அரைநாளை.

பள்ளிக் கூடம் போ என்றால்
பட்டுச் சட்டை கொடு என்பான்;
வெள்ளைச் சட்டை பட்டென்றால்
வேண்டும் வண்டி என்றிடுவான்;
தள்ளும் வண்டி தந்தாலோ
சம்பளம் கேட்பார் அவர்என்பான்;
உள்ளது தந்தால் சுவடிக்கே
ஓலைப் பைவேண் டாம்என்பான்.

எழுதச் சொன்னால் சட்டத்தை
இறகே இல்லை யேயென்பான்;
அழகாய் இறகைத் தந்தாலே
அங்கே மைக்கூ டேதென்பான்
ஒழுங்கா மைக்கூ டீந்தாலோ
உள்ளே மைதான் ஏதென்னபான்
பழுதில் லாத மைந்தால்
பச்சைத் தண்ணீர் இதுஎன்பான்,

இரவில் பாடம் படிஎன்றால்
இங்கு விளக்கில்லை என்பான்;
அருகில் விளக்கை வைத்தாலோ
அந்தச் சுவடி ஏதென்பான்;
இருக்கும் படியே செய்தாலும்
ஏடு கிழிந்த தே என்பான்;

ஒருநல் சுவடி தந்தாலோ
உடனே இருமல் துவங்கிடுவான்.

படிப்ப தென்றால் எட்டிக்காய்,
பள்ளிப் கூடம் வேப்பங்காய்,
விடிந்தால் அச்சம் வாத்தியினால்,
விளக்கு வைத்தால் பெற்றோரால்.
விடுமுறை வந்தால் மகிழ்வான்ஏன்?
மேன்முறை யில்லை பள்ளியிலே,
நடைமுறை மாறிக் கல்விமுறை
நன்முறை யானால் நலமுறலாம்.



( 235 )





( 240 )




( 245 )





( 250 )




( 255 )





( 260 )






( 265 )




( 270 )
அழகழகாய்

அழகழகாய் எழுது ஆணிமுத்து போலே
எழுதும் எழுத்துன்றன் இயல்பைக் காட்டுமன்றோ?
தெளிவடைந்த அறிவு சிந்தனைப் படத்தை
எளிமையான முறையில் எழுதிக் காட்டுமன்றோ?
ஏட்டில் உள்ள பாட்டை இசைத்துப்படி புரியும்
காட்டும் உரைநடையைக் கலந்துபடி தெரியும்!
செந்தமிழ்க்குத் தொண்டு செம்மையான வாழ்க்கை
முந்த வேண்டும் உண்மை முத்தமிழ்க்கதே அன்பு



( 275 )



நலத்திற்காக நலம்

தெய்வம் தொழ வேண்டா -- அது
   தீது செய்யத் தூண்டும்;
பொய்புகல்வார் ஆன்மா -- அது
   புரட்டர்களின்ன் கோட்டை!

உன்னுடைய காலில் -- நீ
   ஊன்றி நிற்க வேண்டும்
இன்புறுமா றென்றும் -- நீ
   ஏற்ற நலம் செய்க!

நலத்தினை முன்னிட்டு -- நீ
   நலம்புரிய வேண்டும்
மலங்கழிப்பதைப்போல் -- உன்
   மடமையினைப் போக்கு,

மறுமை உலகம் என்று -- நீ
   மயக்கமுற வேண்டா
சிறுமை மதம், சாதி;...இழி
   சீழ் பிடித்த எண்ணம்!

தன்னலம் துறப்பாய் -- உலகத்
   தாயின் மக்கள் யார்க்கும்
மன்னலத்தைச் சேர்ப்பாய் -- தமிழ்
   மகிழ்ச்சி முரசார்ப்பாய்!
( 280 )





( 285 )





( 290 )





( 295 )




புரட்சி செய்

புரட்சிசெய் புரட்சிசெய் தம்பி
   புதிய நல்வாழ்வினை நம்பி!
புரட்சியினாலன்றி நாடு
   பொதுமை கொள்ளாதுயர் பீடு!

பழமைகள் யாவுமே சாவும்,
   பண்பாட்டுப் புதுமையே மேவும்!
கிழமான சாதி மதங்கள்
   கிளரச்சிக் குதவாத பதங்கள்!

சீர்திருத்தம் என்னும் பரிதி -- ஒளிச்
   சிந்தனை யாலே உன் குருதி
சேர்ந்தது வேமாற்றம்கருதி -- நீ
   செயல்படுவாய் வெற்றி உறுதி!

அறிவியல் புகுந்தே எங்கும் -- அட
   அறியாமையின் இருள் நடுங்கும்;
முறிந்தது முடியர சாட்சி -- நீ
   முழங்குக குடியரசு மாட்சி!
( 300 )





( 305 )





( 310 )





( 315 )
வீதிக்கழகு வீட்டிற்கழகு

வான மீனின் ஓளிம ழுங்க
வைகறைத்தாய் எழுந்தாள்
போன வாழ்வு மீண்டதுபோல்
புலர்ந்தது கீழ்த்திசையே
மானம் அழியாத் தமிழாய்
ஞாயிறொளி தந்தான்.

கூட்டி மெழுகிக் கோலம் போட்டு
வீட்டைக் கோலம் செய்வோம்;

ஊட்டியதாய்ப் பாலுடனே
உவந்த தமிழ்ப் பாடி
ஏட்டில் இலாக் கோலங்களை
யாம் இழைப்போம் வாரீர்!

வீதிக்கழகு செய்வதெல்லாம்
வீட்டிற்கழகு ஆமே;
ஓதி உணராக் கல்வி, தாயின்
உடன் பிறந்த கலைகள்
காதலுடன் கை வளரும் காண்பார்
கண்மனமும் களிக்கும்!




( 320 )






( 325 )





( 330 )
இந்த நூற்றாண்டு

எந்த நூற்றாண்டும் இல்லா முன்னேற்றம்;
இந்த நூற்றாண்டில் எழுந்ததே ஏற்றம்!

கால விரைவினைக் கடக்கும் வானூர்தி
ஞாலப் பரப்பினைச் சருக்கிற்றுப்பார் நீ!

தொலைபேசித் தொடர்பு தோழமை நட்பு!
அலைகடல் மலையை அறிந்தது பெட்பு!

வானொலி யாலே வையமொழிகள்
தேனொலி யாயின திக்கெலாம் கனிகள்!

ஏவுகணைகள் கோள் விட்டுக் கோளைத்
தாவின எங்குமே நாம் செல்வோம் நாளை!

ஒற்றுமை அமைதி ஒங்கிடத் தம்பி
முற்றும் அறுந்தெறி வேற்றுமை முட்கம்பி!

( 335 )






( 340 )






( 345 )
வெண்ணிலவில் தமிழப் பெண்!


நிலவில் மாந்தர் இறங்கும்நாள்
   நெடுநாள் ஆகா தென்கிறார்;
குலவும் மகளே! விரைவினில்
   குடியேறினாள் எம் தமிழ்மகள்
நிலவில் என்று பாரெலாம்
   நெடுகப் பேசச் செல்லுவாய்.

வெண்ணிலாவில் இறங்கிநீ
   வெற்றி கொடுக்கும் அறிவியல்
தண்டமிழ்ப் பெண் கொண்டாதாய்த்
   தரையில் புகழும் வண்ணமே
எண்ணற்கரிய உடுக்களின்
   இயல்பறிந்து வருகநீ!

மக்கள் வாழும் உலகினில்
   மதங்கள் சாதி வேற்றுமை
சுக்கு நூறாய் ஆக்கிய
   தூய பெரியார் முகமென
அக்கரைக்கண் தோன்றிடும்
   அழகு நிலவில் இறங்குவாய்!




( 350 )





( 355 )






( 360 )