பக்கம் எண் :

26கவிமணியின் கவிதைகள்

Untitled Document
127.   நாலா ரணப்பசுவை நாடிக் கறந்தளித்த
பாலாகு மென்றுபா ராட்டுமே - நூலாய்ந்து
வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
உள்ளுவந் தோது முலகு.

வேறு

128.   இம்மை மறுமையின் - பயன்கள்
     எவருமே யடையச்
செம்மை நெறியினை - விளக்கும்
     தெய்வ நூல் செய்தோன்.

129.   வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல
     வாழ்வை ஆக்க வந்தோன்;
ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு
     உயிரை ஊட்ட வந்தோன்.

130.   தொன்மை நூல்களெல்லாம் - நன்கு
     துருவி ஆராய்ந்து,
நன்மை தீமைகள் வகுத்த
     நாவலர் கோமான்.

131.   எதை மறந்தாலும் - உள்ளம்
     என்றுமே மறவாப்
பொதுமறை தந்த - தேவன்
     பொய் சொல்லாப் புலவன்.

132.   அறிவின் எல்லை கண்டோன் - உலகை
     அளந்து கணக்கிட்டோன்;
தறியில் ஆடை நெய்தோன் தமிழில்
     தரும நூல் நூற்றோன்.

133. சாதி ஒன் றேயாம் - தமிழர்
     சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம் - என்று
     நிலை நிறுத்தி நின்றோன்.