பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு321

Untitled Document
  காற்றொடு முன்னம் கலந்து வந்த
தெய்வ கீதமும் செவியுறக் கேட்டனன்.
ஐயமில்லை, நம்ஐயன் தங்கிய
அரண்மனை யதனில் அந்நாள் இரவில்
தேவரும் நான்கு திசையும் சுற்றி
மறைந்து நின்று வாழ்த்தினர் அம்மா!
"இதுவே காலம்; இதுவே காலம்;
இமைப் பொழு தேனும் இனியான் இங்குஇரேன்;
யாதும் தடையிலை; இறங்கிச் செல்வேன்,
'பிரியா நாம்இனிப் பிரிவோம். ஆயினும்,
குறையொன்று அதனால் கூறுதற்கு இல்லை.
இருநில முழுதும் இன்பம் அடையும்
அறநெறி ஈதுஎன்று அறிந்து வா' என
ஆணை யிடுவதை அழகின் செல்விநீ
நித்திரை செய்யினும் நின்முகம் நோக்கித்
தெளிவுற யானும் தெரிந்து கொண்டனன்;
இனியான் உலகில் இயற்றுதற் குரிய
அரும்பெருஞ் செயல்கள் அனைத்தும் அவ்வானில்
உடுக்க ளென்ன ஒளிவிடும் எழுத்தில்
எழுதி யிருப்பதை இன்றிங்கு என்இரு
கண்களால் கண்டு களிப்படை கின்றேன்;
இறுதி யாக என்னுளங் கொண்ட
உண்மையும் ஈதாம் உறுதியும் ஈதாம்
பற்பல ஆண்டுகள் பகலும் இரவும்
ஆராய்ந் தாராய்ந்து அறிந்ததும் ஈதாம்;
படியில் எனக்குப் பரம்பரை யாய்வரும்
முடிமீது ஆசை முழுவதும் விட்டேன்,
வாழும் மன்னரை வாட்குஇரை யாக்கி,
நீள்நிலம் பற்றும் நினைப்பும் ஒழித்தேன்;
பூதல மெல்லாம் போர்க்களம் ஆக்கிய
பாதகன் என்றுஎனைப் பழித்துஎவ ருஞ்சொல,
ஓடி ஒழுகும் உதிரப் பெருக்கில்
தேர்க்கால் புதையத் திசைதொறும் சென்று