பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு39

Untitled Document
35. சூரியகாந்தி
232   ஆகாய வீதியுலாவி வருமிந்த
     ஆதித்த னோஉன் தன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்துநீ
     விண்ணிலே கண்ணாக நிற்பதேனோ?
233 பொன்னிறமுண்டு, பொலிவுண்டு கண்டுனைப்
     போற்ற இனிய வடிவுமுண்டு,
என்ன அரிய வரம்பெற, இன்னமும் நீ,
     இத்தவம் செய்வது, பூமகளே!
234 காயும் கதிரவன் மேனியை நோக்க - உன்
     கண்களும் கூசிக் கலங்காவோ!
நேயம் மிகுந்தவர் காய வருத்தம்
     நினைப்பதும் இல்லையோ? சொல், அடியே!
235 காலையி லேகதிர் வீசிவர - நிதம்
     கண்டு களித்து மகிழ்ந்திடும்நீ,
மாலையி லேமுகம் வாடித் தளர்ந்திட,
     வந்த வருத்தமும் ஏதடியே?
236 செங்கதிர் செல்லும் திசையது நோக்கி, - உன்
     செல்வ முகமும் திரும்புவதேன்?
மங்கையே உன்மண வாளனாகில் - அவன்
     வார்த்தை யொன்று சொல்லிப் போகானோ?
237 ஆசை நிறைந்தஉன் அண்ணலை நோக்கிட,
     ஆயிரங் கண்களும் வேண்டுமோடி?
பேசவும் நாவெழ வில்லையோடி? - கொஞ்சம்
     பீத்தற் பெருமையும் வந்ததோடி?
238 மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
     மாயப் பொடிவீசி நிற்கும்நிலை
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ,
     கண்ணீர் உகுக்குமோ? யாரறிவார்?
239 உன்பெயர் சூரிய காந்தியென்றார் - அதன்
     உண்மையும் இன்றே அறிந்துகொண்டேன்
இன்பம் அளித்திடும் பூவுல கத்துனக்கு
     யாரும் இணையில்லை, இல்லையம்மா!