| | 35. சூரியகாந்தி |
232 | | ஆகாய வீதியுலாவி வருமிந்த ஆதித்த னோஉன் தன்பனடி! வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்துநீ விண்ணிலே கண்ணாக நிற்பதேனோ? |
233 | | பொன்னிறமுண்டு, பொலிவுண்டு கண்டுனைப் போற்ற இனிய வடிவுமுண்டு, என்ன அரிய வரம்பெற, இன்னமும் நீ, இத்தவம் செய்வது, பூமகளே! |
234 | | காயும் கதிரவன் மேனியை நோக்க - உன் கண்களும் கூசிக் கலங்காவோ! நேயம் மிகுந்தவர் காய வருத்தம் நினைப்பதும் இல்லையோ? சொல், அடியே! |
235 | | காலையி லேகதிர் வீசிவர - நிதம் கண்டு களித்து மகிழ்ந்திடும்நீ, மாலையி லேமுகம் வாடித் தளர்ந்திட, வந்த வருத்தமும் ஏதடியே? |
236 | | செங்கதிர் செல்லும் திசையது நோக்கி, - உன் செல்வ முகமும் திரும்புவதேன்? மங்கையே உன்மண வாளனாகில் - அவன் வார்த்தை யொன்று சொல்லிப் போகானோ? |
237 | | ஆசை நிறைந்தஉன் அண்ணலை நோக்கிட, ஆயிரங் கண்களும் வேண்டுமோடி? பேசவும் நாவெழ வில்லையோடி? - கொஞ்சம் பீத்தற் பெருமையும் வந்ததோடி? |
238 | | மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த மாயப் பொடிவீசி நிற்கும்நிலை கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ, கண்ணீர் உகுக்குமோ? யாரறிவார்? |
239 | | உன்பெயர் சூரிய காந்தியென்றார் - அதன் உண்மையும் இன்றே அறிந்துகொண்டேன் இன்பம் அளித்திடும் பூவுல கத்துனக்கு யாரும் இணையில்லை, இல்லையம்மா! |
| | |
| | |
| | |
| | |
| | |