பக்கம் எண் :

482கவிமணியின் கவிதைகள்

Untitled Document

     பாண்டியர் பரம்பரைக்           குரியதாயிருந்த இந்நாடு சங்க காலத்தில்தானே       சேரர்களால் பலமுறை அபகரிக்கப்பட்டதெனப்
புறநானூற்றாலும் (17)பதிற்றுப்பத்தினாலும்அறிகிறோம். பிற்குறித்த நூலில்,

ஆரியர் துவன்றிய பேரிசை இமையந்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே

எனவும் (11)

வடதிசை யெல்லை இமைய மாகத்
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ

எனவும் வரும் (43) அடிகள்    குமரியைச் சார்ந்த நாட்டைச் சேரர்கள்
வென்று அடிப்படுத்தினர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

     நாஞ்சில் என்ற பெயரும்          சங்ககாலத்தில் வழங்கி  வந்த
தொன்றேயாம். புறநானூற்றிலே,

உயர் சிமைய உழாஅ நாஞ்சிற் பொருந              (139)

என வருகின்றது.   இங்கே ‘உழாஅ நாஞ்சில்’ என்பது ‘பாயா வேங்கை’
என ‘பறவாக் கொக்கு’ என்பனபோல,      உழுதல் செய்யாத நாஞ்சில்
என்னும்   மலையெனப் பொருள்படுகின்றது. இது மலையோரம் என்பது
‘உயர் சிமைய’ (உயர்ந்த சிகரத்தையுடைய) என்ற அடையால் உணரலாம். இப்பழம் பெருநூலின்  உரைகாரரும் ‘நாஞ்சில் என்னும் பெயரையுடைய
மலைக்கு வேந்தே’ என்று    இவ்வடிக்குப் பொருள் கூறினர். நாஞ்சில்
மலையைத் தன்னகத்தே கொண்ட         நாடு ‘நாஞ்சில்நாடு’ ஆகும்.
இந்நாட்டிலே வீரத்தாற்         சிறந்து விளங்கிய வள்ளுவன் என்னும்
பெயருடையான் ஒருவன்       சங்ககாலத்தில் வாழ்ந்தனன். இவனைக் குறித்துப் புறநானூற்றில்     ஐந்து செய்யுட்கள்(137, 128, 129, 140, 380)
உள்ளன. இவற்றுள் நான்கு செய்யுட்களில்  இவன் ‘பொருநன்’ என்றே
சிறப்பிக்கப்படுகிறான். இவன்           பெருங்கொடை வள்ளலாகவும்
விளங்கியவனென்பது       பாணாற்றப்படையாகப் பாடப்பெற்ற 138-ம்
செய்யுளால் தெளியலாம். இவன்  ஒருவேந்தனுக்குப் படைத்துணையாய்
அமைந்தவனென்பது.

ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே

என இவனது வேந்தனையும்    இவனையுங் குறித்து வரும் அடிகளால்
அறியலாகும். இவ்வேந்தன் சேரன் என   உரைகாரர் கூறுவர். ஆனால்