ஆண்எலியும் பெண்எலியும்
ஆண்எலி ஒன்று, பெண்எலி ஒன்று
அன்பாய் வளையில் வசித்தனவே.
ஆண்எலி எதிரே, பெண்எலி எதிரே
அப்பம் பெரிதாய் இருந்ததுவே.
ஆண்எலி தின்றது, பெண்எலி தின்றது.
ஆயினும் ஆசை தீரவில்லை.
ஆண்எலி புகுந்தது, பெண்எலி புகுந்தது
அருகில் இருந்த வீட்டினிலே.
ஆண்எலி பார்த்தது, பெண்எலி பார்த்தது
அருமைப் பண்டம் பொறியினிலே.
ஆண்எலி பாய்ந்தது, பெண்எலி பாய்ந்தது
ஆசை தீரத் தின்றிடவே.
ஆண்எலி கேட்டது, பெண்எலி கேட்டது
அதிரும் சத்தம் பட்டெனவே.
ஆண்எலி திகைத்தது, பெண்எலி திகைத்தது
அந்தோ ! பொறியில் சிக்கினவே.
ஆண்எலி கதையும் பெண்எலி கதையும்
அப்புறம் அறியேன், அறியேனே ! |