பக்கம் எண் :

பக்கம் :104பூங்கொடி

ஏமகானன் பாராட்டுரை

 

 

திசைதொறும் சென்று தன்புகழ் நிறீஇ
விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு
வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான்
 
  ஏம கானன் எனும்பெயர் பூண்டோன்  105
  தோமறு மீனவன் தொண்டும், தமிழிசைப்
புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக்
கலைமலி காளையின் கண்முன் தோன்றி
`உரவோய்!  இளமையில் ஒருதனி நின்றே
 
  இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும் 110
  நின்னிசைப் பணிக்கு நெடிதுவந் தனனே,
என்னிசைப் பயிற்சியும் எளிதாய் நினக்கு
வருமா றுரைக்க மனங்கொண் டுன்பால்
வருதல் உற்றேன்; வடபுலத் திசையும்
 
  ஒருங்குடன் சேரின் ஒளிரும் நின்புகழ்; 115
  அருங்குணம் ஆன்றோய்!  விரும்புதி யோ'என,  
     
  மீனவன் ஏளனம்  
     
  வயிறுபுண் ணாக வாய்விட்டுச் சிரித்துக்
`குயிலின் குரலொடு கோழியின் குரலும்
இணையின் என்னாம்?  இந்நாள் வரையும்
 
  துணைவிழி மூடித் தூங்கிய மாந்தர் 120
  கண்விழித் தெழுந்து கருத்துடன் தமிழிசைப்
பண்தொடுத் திசைக்கப் பயிலுங் காலை
மீட்டும் மற்றோர் இசைபுக விழையின்
காட்டும் ஆர்வம் கருகிச் சாகும்;
 
  அரும்பிய ஆர்வம் அணிமல ராகி 125
  விரிந்து நறுமணம் வீசுதல் ஒன்றே
என்குறிக் கோள்'என எடுத்துரைத் தனனே;
 

---------------------------------------------------------------

  விருது - பட்டம், பரிசு; செவிமடுத்து - கேட்டு, உரவோய் - அறிஞ!