இருமனம் ஏனினி? என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே.
உன்னையு மறந்துறங் குதியே லினிமேல் என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும் ஒருவரை யொருவ ருணர்ந்தமை!
(மனோன்மணி : திடுக்கிட்டுவிழிக்க)
(3)
(வாழ்த்து-மருட்பா)
பள்ள வுவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென உள்ள முவந்தோடி யொன்றானாய்-விள்ளா மணியின தொளியும் மலரது மணமும் அணிபெறு மொழியி னருத்தமும் போல, இந்நிசி யாகவெஞ் ஞான்றும் மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே!
(யாவரும் வாழ்த்த)
ஐந்தாம் அங்கம் : மூன்றாங்களம் முற்றிற்று.
கலித்துறை
சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன் குறியாந் தலைவன் குடிலன்பின் னெய்திய கொள்கைகண்டீர் அறிவா மெனுநம் மகங்கர மாறு மவத்தையினிற் செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படுஞ் சீரிதுவே.
ஐந்தாம் அங்கம் முற்றிற்று.