யாதுவிளையுமோ என இரக்கமுற்று அவனுடைய குலகுருவாகிய சுந்தரமுனிவர் அவனுக்குத் தோன்றாத்துணையா யிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக் கருகிலுள்ள ஒரு ஆச்சிரமம் வந்தமர்ந்தருளினர். முனிவர் வந்து சேர்ந்தபின் நிகழ்ந்த கதையே இந்நாடகத்துட் கூறப்படுவது. 7. முனிவர் எழுந்தருளியிருப்பதை யுணர்ந்து ஜீவகன் அவரைத் தன் சபைக்கழைப்பித்து, தனது அரண்மனை கோட்டை முதலியனவற்றைக் காட்டி அவை சாசுவதம் என மதித்து வியந்துகொள்ள, அவ்விறுமாப்பைக் கண்ணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப்பாகக் கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றிற்கும் க்ஷேமகாமாகச் சில கிரியாவிசேஷம் செய்யும்பொருட்டு அவன் அரண்மனையில் ஓரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவுகோலை வாங்கி்க்கொண்டு, தம் ஆச்சிரமம் போயினர். ஜீவகவழுதிக்குச் சந்ததியாக மனோன்மணி என்னும் ஒரே புத்திரிதான் இருந்தனள். அவள் அழகிலும் நற்குண நற்செய்கைகளிலும் ஒப்புயர்வற்றவள். அவளுக்கு அப்பொழுது வயது பதினாறாக இருந்தும், அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சும்போல யாதொரு பற்றும் களஞ்கமு மற்று நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்றதோழியாக இருந்தவள் வாணி. இவள் ஒழுக்கம் தவறா உளத்தள் ; தனக்கு நன்றெனத் தெள்ளிதில் தெளிந்தவையே நம்புந் திறத்தள். அல்லனவற்றை யகற்றும் துணிபுமுடையள். இவ்வாணி நடராஜனென்ற ஒரு அழகமைந்த ஆனந்த புருஷனை யறிய அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப் படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்குமாறாக, இவ்வாணியினது பிதா மிகப்பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குத் தன் மகளை மணம்புரியில், தனக்குச் செல்வமும் கௌரவமும் உண்டாமென்ற பேராசைகொண்டு அவ்வாறே அரசன் அநுமதி பெற்று விவாகம் நடத்தத் துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதா யிருந்தது. இச்சோகம் நீங்க மனோன்மணி பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையளாயிருந்தாள். இவ்வாறிருக்கும்போது முனிவர் கோட்டை காண வந்த நாளிரவில் ஈடுமெடுப்புமற்ற சோதேசத் தரசனாகிய
|