என்னுஞ் சூத்திரத்தின் விதி பற்றி, வட்டப்பாலையின் முடிவுதானமாய், வலிந்த நிலைமையினையுடைய தாரம் பெற்ற இரண்டலகில் ஓரலகையும், இப்பாலையின் முதல் தானமாய் மெலிவினிற்கும் குரல் நரம்பு பெற்ற நாலலகில் இரண்டலகையும், தார நரம்பில் அந்தரக்கோலிலே கைக்கிளையாக நிறுத்தத், தாரந்தான் கைக்கிளையாயிற்று. அந்த நரம்பில், ஒழிந்த ஓரலகையும் பண்டை விளரியிலே கூட்ட, அவ்விளரி துத்த நரம்பாயிற்று. இப்படிப் பன்னிரு காற்றிரிக்கப், பன்னிரு பாலையும் பிறக்கும். பன்னிரு பாலையினுரு, தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப், பண்கள் நூற்று மூன்றாதற்குக் காரணமாமெனக் கொள்க. இவ்விடத்துத் தார நரம்பின் அந்தரக் கோலைத் தாரமென்றார். "தன்னமுந் தாரமுந் தன்வழிப் படர" என்னுஞ் சூத்திரத்தாலெனக் கொள்க" மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், (ச) விற்குரிய நாலாவது அலகில், இரண்டு அலகுள்ள (ம) வைக்க, (ச) தானே (ம) வாயிற்று. ச வின் இரண்டாவது அலகில் க போட வேண்டும். ச வின் ஒன்று இரண்டு அலகுகளும், நி, க்குரிய இருபத்திரண்டாவது, அலகும் சேர்ந்து, க வுக்குரிய மூன்று அலகுகளாகின்றன. இதன்பின், நி, க்குரிய இருபத்தோராவதான முதல் அலகை த வுக்குரிய மூன்று அலகோடு சேர்க்க நாலாகிறது. நி யின் முதலாவது அலகாகிய இருபத்தோராம் இடத்தில் ரி போட வேண்டும். ரி யின் நாலு அலகுகள் போக அதன் பின்னுள்ள 17 வதாகிய ப வின் கீழ் ச போட வேண்டும். இது போலவே, ச வின் நாலாவது அலகின் கீழ்ப்போட்ட ம விலிருந்து நாலு சுருதியுள்ள ப வை எட்டாவது சுருதியில் வரும் ரி யின் ஸ்தானத்தில் போட வேண்டும். அதன் மேல், மூன்று சுருதியுள்ள த, ரி யிலிருந்து மூன்றாவதாகப், பதினோராமிடத்தில் வரும் க வுக்குக் கீழ்ப் போட வேண்டும். இரண்டு சுருதியுள்ள நி யை க வுக்கு இரண்டு சுருதிக்கு மேலுள்ள பதின்மூன்றாமிடத்தில் மத்திமத்தின் கீழ்ப் போட வேண்டும். இப்போது ச, ரி, க, ம, ப, த, நி அல்லது ம, ப, த, நி, ச, ரி, க என்ற ஏழு சுரங்களும் ச4, ரி4, க3, ம2, ப4, த3, நி2, என்ற அலகுடைய சுரங்களில் நின்று பிறக்கின்றன. இப்படியே ம, க, ரி, ச, நி, த, ப என்கிற ஏழு சுரங்களும் ச வின் நாலாவது சுருதியில் ஆரம்பிக்கின்றன. இவைகள் ஏழும் பெரும்பாலை யென்று பெயர்பெறும். அவைகளின் பெயர் பின்வரும். இது தவிர, ச வின் முதல் அலகில் வரும் ரி யும், இரண்டாவது அலகில் வரும் ச வும், இரண்டாவது அலகில் வரும் நி யும், முதல் அலகில் வரும் ப வும், இரண்டாவது அலகில் வரும் ம வும் ஆகிய ஐந்தும், சிறு பாலையாகச் சொல்லப்படுகின்றன. பெரும்பாலை ஏழும் சிறு பாலை ஐந்துமாக 12 பாலைகள் பிறக்குமென்கிறார். இப்பன்னிரு பாலையும் வலமுறை திரிந்த பாலையாம். இடம் முறை திரிந்த பாலை இதன் பின் பார்ப்போம். வலமுறை திரிந்த பன்னிரு பாலை பிறக்கும் விதமும், அவற்றின் அலகும், அவைகளின் பெயரும், இவ்வேழு பெரும்பாலைகளிலிருந்து உண்டாகும் எவ்வேழு பாலைகளையும் பின்வரும் சக்கரங்களில் காணலாம்.
|