| ஊராரே ஆளக்கூடிய மன்ற ஆட்சி (பஞ்சாயத்து) இருந்தது. இப்படியே பல ஊர்களிலும் அமைந்திருந்த காரணத்தால், நாடு வாழும் முறை எளிதாக இருந்தது. ஓர் ஊர் மற்றோர் ஊரை உணவுக்காகவோ, கைத்தொழிலுக்காகவோ எதிர்ப் பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை; ஓர் ஊரை மற்றோர் ஊரிலுள்ளவர்கள் உறிஞ்சி ஆளும் தொல்லையும் இல்லை. அதனால் கிராமங்களில் அமைதியான வாழ்க்கை நிலவிவந்தது. ஆனால் புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்ட சில மன்னர்கள் மண்ணாசை கொண்டு படையெடுத்து எதிர்த்துப் போர் செய்யும் நிலைமை இருந்தது. இதுவும் பெரும்பாலும் எல்லைகளில் உள்ள ஊர்களையே கலக்கியது; அரசர்கள் வாழ்ந்த தலைநகரங்களையே கலக்கியது. இந்த முறை பலவகையிலும் நல்ல முறையே ஆகும். ஒவ்வோர் ஊரில் உள்ள வயல்களுக்கும் வேண்டிய நீரை அந்த அந்த ஊரிலேயே ஏரியாகக் கட்டி நீரைத் தேங்க வைத்து வயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதைப் போன்றது இந்த ஊர்த்தேவை நிலை. மற்றோர் ஊரிலுள்ள ஏரியை எதிர்பார்க்க வேண்டிய கவலையும் இல்லை; மற்றோர் ஊரைப் பற்றிய பொறாமையும் இல்லை. பல ஊர்களின் வயல்களுக்கும் பொதுவாக ஒரு நல்ல இடத்தில் அணை கட்டி அளவற்ற நீரைத் தேங்கவைத்து அந்த அந்த ஊர்களுக்கு வேண்டிய அளவு அவ்வப்போது வாய்க்கால்கள் வழியாக அனுப்பிப் பாய்ச்சுவது மற்றொரு முறை. இந்த முறைப்படி பல ஊர்களும் இந்த ஓர் அணையையே எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்த அணையின் |