வருந்துகிறவர்கள் உண்டு. காதலும் ஓர் உணர்ச்சிதானே? சினம் முதலியவற்றைவிட மிக இயற்கையானது காதல். அவற்றைவிட வாழ்வில் வேரூன்றி நிற்பது காதல். மற்றவற்றைப் போல் மனித வாழ்வைக் கெடுக்கத் தூண்டுகோலாக இருக்காமல், மக்களின் பண்புகளை வளர்த்து உயர்த்தத் தூண்டுகோலாக இருப்பது காதல். இத்தகைய காதல் உணர்ச்சியின் வயப்பட்டவர்கள், அறிவு தெளிந்த நிலையில் மேற்குறித்தவர்கள்போல் தங்கள் செயலை நினைந்து வருந்துவதும் உண்டு; சிரிப்பதும் உண்டு. ஆனால் இது மிகச் சிலருடைய வாழ்வில் மட்டுமே காணப்படும். பெரும்பாலோர் ஓர் உணர்ச்சியிலிருந்து மற்றோர் உணர்ச்சிக்குத் தாவுவதிலேயே காலம் கழிக்கிறார்கள். யாரோ சிலர்தான், அந்த உணர்ச்சியிலிருந்து சிறிது நேரம் விடுதலையாகித் தனியே நின்று அதைப்பற்றி எண்ணிப்பார்க்க வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே உயர்ந்த படியில் உள்ளவர்கள். அழும்போது தான் அழுவதைப்பற்றி எண்ணிப்பார்க்க குழந்தையால் முடியாது; அறிவு வளர்ந்த பெரியவர்களால் முடியும். சிரிக்கும்போது தான் சிரிப்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கக் குழந்தையால் முடியாது; ஆனால் வளர்ந்த பெரியவர்களால் முடியும். காதல் உணர்ச்சியின் வயப்பட்டு நிற்கும்போது தம்மைப் பற்றி எண்ணிப்பார்க்கும் திறனும் எல்லோருக்கும் வராது. உணர்ச்சி உருவாக நின்று வாழும் குழந்தை மனம் உடையவர்களுக்கு அவ்வாறு எண்ணிப்பார்க்க முடியாது. உணர்ச்சி நிலையிலிருந்து பிறகு சிறிது நேரம் அறிவு நிலையில் நிற்க வல்லவர்களுக்கே அது முடியும். உணர்ச்சிநிலையில் மனிதன் எப்போதும் தானும் அதனோடு கலந்து போகின்றான். அறிவு நிலையில் மனிதன் |