சிந்தனை அலைகள் எழுந்தன. தொடக்கத்தில் காதலனைக் கண்டு காதல்கொண்ட நாள் நினைவுக்கு வந்தது, அவனுடைய அழகிய தோற்றமும் அழகிய பார்வையும் அன்பு மொழியும் அவளுடைய நினைவுக்கு வந்தன. அன்று அந்தத் தோற்றமும் நோக்கும் மொழியும் தன் உள்ளத்தை கவர்ந்திருக்கவில்லையானால், இந்தக் காதலும் இல்லை, கண்ணீர் விடும் துயரமும் இல்லையே என எண்ணினாள். உணர்ச்சி குறைந்து தெளிந்த மனத்தோடு சிறிது நேரம் இருந்தமையால் இந்த எண்ணம் தோன்றியது. தான் கலந்து உணராத ஒரு தன்மையோடு, பிறர் வாழ்க்கையில் பற்றில்லாமல் எண்ணிப் பார்ப்பதுபோல் எண்ணினாள்; பற்றில்லாமல் பிறர்க்கு அறிவுரை கூறும் மனநிலையோடு தன் கண்கள் அன்று காதலரைக் கண்ட நிகழ்ச்சியையும், இன்று அந்தக் கண்களே இவ்வாறு கலங்கி அழுவதையும் ஒருங்கே எண்ணினாள். யார் பார்க்கச் சொன்னார்கள். யார் அழச் சொன்னார்கள் என எண்ணினாள். தோழியை நோக்கி "தோழி! என்ன வேடிக்கை, பார்த்தாயா? இந்தக் கண்கள் அவரைக் கண்டு காதல் கொண்டபோது என்னைக் கேட்டு என் அனுமதி பெறவில்லை. கேளாமலே அவசரப்பட்டுக் கண்டு காதல் கொண்டன, இன்றும் என்னைக் கேளாமலே தாமே அழுகின்றன. இது நகைக்கத்தக்க செயலாகத்தான் இருக்கிறது" என்றாள். கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து, (குறள், 1173) "இப்போது இந்தக் கண்கள் அழுவதற்குக் காரணம் என்ன? யான் படும் துன்பமே. இந்தக் கண்கள் அவரைக் காட்டியதால், யான் உற்ற துன்பமே அல்லவா? அந்த நாளில் ஆராய்ந்து உணராமல் பார்த்துக் காதல்கொண்ட கண்கள், |