நிகண்டுகள், இசை, நாடகம், மருத்துவம், சோதிடம், கணிதம் ஆகியவற்றை எவ்வாறு பாகுபாடு செய்வது? நீதி நூல்களை இலக்கியத்தில் சேர்க்கலாம். நிகண்டுகளை இலக்கணத்தில் அடக்கலாம். சித்தர்பாடல்களை இலக்கியம் என்று கூறுவதைவிட, தத்துவம் என்று கூறுவது பொருந்தும். இசை நாடகம் சிற்பம் மருத்துவம் சோதிடம் கணிதம் முதலிய எல்லாவற்றையும் கலை என்ற பிரிவினுள் கொண்டு வரலாம். இலக்கிய நூல்கள் சிலவற்றை உரையின்றிக் கற்று அறிய முடியும் எனினும், ஏனையவற்றை உரைகளின் உதவி இல்லாமல் அறிய முடியாது. கால இருள் படிந்துள்ள நூல்களின் விளங்காத பகுதிகளை விளக்கும் ஒளி விளக்குகளாக உரைகள் உள்ளன. உரைகள் தமிழி்ன் உயிர் நாடிகள் தமிழ் இலக்கிய வரலாற்றை முன்னும் பின்னும் அரிமாநோக்குடன் கவனித்தால், உரையாசிரியர்களின் பணி, தமிழ் நூல்களின் வாழ்விற்கு எவ்வளவு முதன்மை வாய்ந்தது என்பதை உணரலாம். இறையனார் களவியலுரை தோன்றிய காலத்தில் மறைந்திருந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தையும் மற்றப் பகுதிகளையும் பேணிக் காத்து விளக்கம் தந்து இளம்பூரணர் வெளிப்படுத்தினார். கால மாறுபட்டால் அரசு நிலை திரிந்து தமிழ்க் கல்வி வீழ்ச்சி அடைந்ததால், பரிபாடலில் இடைச் செருகலும் பாட வேறுபாடுகளும் புகுந்து நூல் சிதைந்துவிட்டது. அந்த நிலையில் அதனைத் தூய்மை செய்து அதன் பண்டைய பெருமை மாறாமல் உரையுடன் தந்தவர் பரிமேலழகர். ஏனைய சங்கத்தமிழ் நூல்களுக்கும் உரை எழுதி அவற்றைக் காத்துத்தந்தவர்கள் உரையாசிரியர்களே. ஜைன சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணிக்குப் போட்டியாகச் சைவ சமயம் பெரிய புராணத்தைத் தோற்றுவித்துச் சிந்தாமணியை ஒளி இழக்கச் செய்த பின், நச்சினார்க்கினியர் அந்தக் காப்பியத்திற்குச் சிறந்த உரை எழுதி ஒளி பெறச் செய்தார். இவற்றிற்கு மறுதலையாகப் பழைய உரைகள் இல்லாததால், நூல்கள் இழந்த நலன்களை எண்ணிப்பார்ப்போம். கம்பராமாயணத்தில் காண்டந்தோறும் இடைச்செருகல் என்ற பெயருடன் பல நூறு போலிப்பாடல்கள் நுழைந்தும், |