தமிழ்மொழி உரிமை இழந்த வரலாறு பாரதத் திருநாடு சற்றேறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுக் காலம்
ஆங்கிலப் பேரரசுக்கு அடிமைப்பட்டிருந்தது . ஆங்கிலேயர் , பிறந்த
நாட்டாலும் பெற்ற நிறத்தாலும் பேசும்மொழியாலும் பாரதத்திற்கு முற்றிலும்
அன்னியராவர் . அவ்வன்னியர் , நம் அரசுரிமையைப் பறித்ததோடன்றி,
நம்முடைய விழியினும் சிறந்த மொழியுரிமையையும் பறித்தனர் . இந்திய
நாட்டிலே, "எங்கும் எதிலும் ஆங்கிலம்" என்ற நிலையை ஏற்படுத்தினர்.
ஆட்சியிலே, துறைதோறும் ஆங்கிலம் ; கல்வியி்லே பாடந்தோறும்
பயிற்றுமொழி ஆங்கிலம் ; நீதி மன்றங்களி்லேயும் நிருவாக மொழி
ஆங்கிலம்.இப்படி, அங்கிங்கெனாத படி பாரதத்திலே எங்கெங்கும் தங்கள்
மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். அதனால், படித்தவர்களிடையே
தாய்மொழிப் பற்றுத் தேய்பிறையாகி , ஆங்கில மோகம் வளர்பிறையாக
வளர்ந்து வந்தது . சந்து முனையிலேயும் சந்தைக் கடையிலேயும் குழாயடி
யிலேயும் இலக்கண வழுவோடு பேசப்படும் கொச்சைத் தமிழே வாழ்வு
பெற்றது. அறிவியற் புலவர்களின் வாய்மொழி அவர்கள் தாய் மொழியாக
இல்லாத கொடுமை கோலோச்சியது.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
அகிலத்தை - அண்ட சராசரங்களைப் படைக்கவும் காக்கவும்
அழிக்கவும் ஆற்றல் பெற்ற இறைமையைக்கூட இனந்தெரிந்து கூறும்
திறனுடையது நம் தாய்மொழி. இதனைக் குமரகுருபரசுவாமிகள் சுவைபடக்
கூறுகின்றார். இறைவன்ஆண்பாதி-பெண்பாதியான அர்த்தநாரி வடிவிலே
தோன்றி , " செந்தமிழ்ப் புலவனே ! இப்பொழுது என்னை எப்படி
அழைப்பாய்?" என்று கேட்பது போலவும், தாம் அதற்கு வி்டையளிப்பது
போலவும் ஒரு செய்யுளை அமைத்துள்ளார். அது வருமாறு:
ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவொன் றால்அவ்
உருவையிஃது ஒருத்தன் என்கோ ஒருத்தி என்கோ
இருவருக்கும் உரித்தா வொருவர் என்றோர்
இயற்சொல் இலதெனின் யான்மற்று என்சொல்கேனே!.1