புகழ்மிக்க நாடக நடிகர் கலைஞர் தி.க.சண்முகம், பாவலரின் நாடகப்
பணிபற்றித் தந்துள்ள சிறப்புரை வருமாறு:
"திரு. தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் தேசியப் பெரும் புலவராக
மதிக்கப் பெறவேண்டிய சிறந்த மேதை. இவரது 'கதரின் வெற்றி' 1922ல்
சென்னையில் நடிக்கபெற்றபோது, நானும் என் சகோதரர் திரு.டி.கே.
முத்துசாமியும் பாவலரின் பாலர் குழுவில் இருக்கும்படியான பாக்கியம்
பெற்றோம்.
'திரு.தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலரைத் தேசியப் புரட்சி வீரர் என்றே
குறிப்பிடவேண்டும்... அக்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய மதுரை
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பாவலர் சிலகாலம் ஆசிரியராகப்
பணிபுரிந்தார். அப்போது 'கதரின் வெற்றி' நாடகத்திற்கு 'கதர்பக்தி' என்னும்
பெயர் சூட்டி மேலும் சில புதிய காட்சிகளைச் சேர்த்துப் பயிற்றுவித்தார்...
நடிகர்கள் காளி.என். இரத்தினம், கே.பி.கேசவன், டி.ஆர்.பி.ராவ், செல்வமணி,
இராமன்குட்டி, எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.இராமச்சந்திரன் போன்ற சிறந்த
நடிகர்கள் இந்த நாடகத்திலே பங்கெடுத்துக் கொண்டனர்.
"கதர் பக்தி" நாடகத்தில் அன்னியத் துணிகளை மறியல் செய்யும் காட்சி
ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது. இக் காட்சி போலீசார் மறியல் செய்யும்
தொண்டர்களைத் தடியால் அடித்து விரட்டுவதாக அமைந்திருந்தது. இந்தப்
பகுதியை மட்டும் நீக்கிவிட வேண்டுமென்று ஆங்கில சர்க்கார்
தடைவிதித்தனர். அதன் விளைவாக நாடகம் சில காலம் நிறுத்தப்பட்டது.
பிறகு மகாத்மா காந்தியடிகளுடன் கடிதத் தொடர்பு கொண்டு, அவர்களின்
யோசனைப்படி அக்காட்சி மாற்றப்பட்டு மீண்டும் தொடர்ந்து நாடகம்
நடைபெற்றது."1