நடைமுறைக்கு வந்திருக்க, அடிமை இந்தியாவில் அன்னிய மொழியான
ஆங்கிலத்தைப் போதனா மொழியாக்கி, அத்திட்டம் திணிக்கப்பட்டது.
மூன்றாம் வகுப்பு தொடங்கி ஆங்கிலம், கட்டாய பாடம்; ஆனால் தாய்மொழி
கற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை; விரும்புவோர் கற்கலாம். சுருங்கச் சொன்னால், சுதந்திர நாடுகளில் வாழும் மக்களுக்கெல்லாம்
புதிய கல்விமுறை அமிர்தமாக இருந்தது. அதனை, நஞ்சாகமாற்றி இந்திய
மக்களுக்கு அளித்தனர் பிரிட்டிஷார். ஆம்; இந்தியர்களின் சுதந்திர
உணர்ச்சியைக் கொல்லும் குறிக்கோளுடன்!
கொடுமையினுங் கொடுமை!
மற்றொரு வகையில் சொன்னால், சுதந்திர நாடுகளிலே பழைய கல்விமுறையை
அழிக்காமல், அதன் மறுமலர்ச்சியாக, புதிய கல்வி முறை
செயல்படுத்தப்பட்டது. பாரதத்திலோ, பழைய கல்வி முறை அடியோடு
புறக்கணிக்கப்பட்டு, புதிய கல்வி முறை மக்கள் மீது திணிக்கப்பட்டது.
அடிமைப்பட்ட சாதிக்கு ஆளுஞ்சாதியினர் செய்த இந்தக்
கொடுமையிலிருந்து நாடு இன்னமும் விடுபடவில்லை.
இந்தியா, ஏழ்மை மிகுந்த - கிராமங்களை மிகுதியாகக் கொண்ட
விவசாய நாடு. இந்த நாட்டிலே, பெருஞ் செலவு செய்து சுமார்
பதினைந்தாண்டு காலம் வரை-தொழிலோடு தொடர்பற்ற வகையில் கல்வி
கற்கும் ஒரு திட்டத்தை உருவாக்கி, அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்
மெக்காலே. இதனால், நவீன கல்விமுறை சுகஜீவிகளின் தனிவுடைமையானது.
இது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நவீன கல்வி
நடைமுறைக்கு வந்த பரிதாபகரமான வரலாறாகும். இந்திய தேசிய காங்கிரஸ்,
பட்டதாரிகளுக்கு உத்தியோகம் தேடித்தரும் அமைப்பாக இருந்தவரை,
மெக்காலே கல்வித்திட்டத்தை அது எதிர்க்கவில்லை. ஆனால், அந்த
மகாசபை விடுதலை வீரர்களின் பாசறையாக மாறிய பின்னர், மெக்காலே
திட்டம் என்னும் நச்சு மரத்தை ஆணிவேரோடு பெயர்த்தெறிய முயன்றது.
இந்த முயற்சியை சுதந்தரப் போராட்டத்தின் ஒரு அம்சமாகவே செய்தார்
காந்தியடிகள்.
அடிமைச் சாதியைச் சிருஷ்டிக்கும் மெக்காலே கல்வித்திட்டத்திற்குப்
போட்டியாக, சுதந்தர வீரர்களைப் படைக்கும் 'தேசியக்கல்வி'