கல்வியின் ஒரு அங்கமாக அமைந்தது. நாடு முழுவதிலும் ஒரே
மாதிரியான கல்விமுறை நடைமுறைக்கு வந்தது. இவ்வளவையும் ஒழுங்காக
நடத்தி வைக்கப் பள்ளிகளும் கல்லூரிகளும், அவற்றை இணைக்கும்
நிலையங்களாகப் பல்கலைக்கழகங்களும் தோன்றின. இவ்வளவும் பிரிட்டிஷ்
ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த நவீனக் கல்விமுறை உலகம் முழுவதிலும் நடைமுறைக்கு வந்த
காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றதனால், இங்கு
அவர்களால் அமுல் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி இங்கு நுழையாமல்
நம் நாட்டை நம்மவரே ஆண்டிருந்தாலும், இந்த நவீனக் கல்வி இன்னும்
சிறந்த வகையில் நடைமுறைக்கு வந்திருக்கும். இந்த உண்மையை உணராமல்,
பிரிட்டிஷார் தந்த கல்வி முறையால் தான் இந்திய மக்கள் நாகரிகம் பெற்றனர்
என்று பேசுவது அறியாமையாகும்.
லார்டு மெக்காலே என்பார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகில்
சுதந்தர நாடுகளிலெல்லாம் நடைமுறைக்கு வந்த நவீன - 'நாகரிக'க்
கல்விமுறையை இந்தியாவிலும் செயலுக்குக் கொண்டுவரத் திட்டம் வகுத்தார்.
அவர், இந்திய நாகரிகத்தை மதியாதவர்; இந்திய மக்கள் எதனைத் தங்கள்
பூர்வ நாகரிகம் என்று கருதிக் கொண்டிருக்கிறார்களோ, அதனைக்
கேவலமாக வருணித்து நூல் எழுதியவர். அவரைக் கொண்டு, மேலே
சொன்ன நவீனக் கல்வி முறையைப் பரப்ப அந்நாளைய இந்திய அரசு
திட்டம் வகுத்தது. இந்திய நாகரிகத்தை அழித்தொழித்து, நவீன முறையில்
கல்வி கற்பவர்களை ஐரோப்பிய நாகரிகத்துக்கு அடிமைப்படுத்தும்
நோக்குடனேயே அவர் தனது கல்வித் திட்டத்தை வகுத்தார்.
அந்தநோக்கத்தை அவர் வெளிப்படையாகவும் சொன்னார்.
நவீனக் கல்வி முறை, சுதந்தரநாடு ஒவ்வொன்றிலும் கட்டாய இலவச
ஆரம்பக்கல்வியை அடிப்படையாகக் கொண்டு அமுல் நடத்தப்பட்டது.
ஆனால், இந்தியாவில், கட்டாய இலவச ஆரம்பக் கல்வி மறுக்கப்பட்டு,
"ஒரு சிலருக்கே கல்வி” என்ற அடிப்படையில் நவீனக் கல்வித்திட்டம்
அமுல் நடத்தப்பட்டது.
பிரிட்டன் உள்ளிட்ட சுதந்தர நாடுகளிலெல்லாம் தாய்மொழியைப்
போதனா மொழியாகக் கொண்டு நவீன கல்வித் திட்டம்