அறிந்து வைத்திருந்தார் தீர்க்கதரிசியான பாரதியார். பத்தொன்பதாம்
நூற்றாண்டின் துவக்கத்திலேயே தமிழ்மொழிக்குப் புத்துயிரும் புதுவாழ்வும்
புகழும் அளிப்பதெனப் பராசக்தி கங்கணம் கட்டிக் கொண்டு
விட்டாளல்லவா! 1914ல் “மாதா மணிவாசகம்” என்ற பெயரில் பாரதியாரின் கவிதைகள்
அடங்கிய மற்றொரு தொகுப்புநூல் தென்னாப்பிரிக்காவிலிருந்து
வெளியாகின்றது. இதில் அடங்கிய பாடல்களனைத்தும் வேதாந்தப்
பாடல்களே!
அதுகாறும் - அதாவது, 1914 வரை பாரததேசத்தைப் பற்றியும்
தெய்வங்களைப் பற்றியும் பாட்டியற்றிய பாரதியார், அதற்குப் பின்னரே
தமிழ்மக்களைப் பற்றியும் தமிழ்மொழியைப்பற்றியும் தமிழ்நாட்டைப்
பற்றியும் பாட்டியற்றுகின்றார். பாரதியாரின் பாடல்கள்மொத்தம் 300க்கும்
மேற்பட்டவை. அவற்றுள் 6 பாடல்களே, தமிழ்மொழி - தமிழ்மக்கள்
-தமிழ்நாடு பற்றியவையாகும். அந்த ஆறு பாடல்களும் ஒரு மாபெரும்
தத்துவத்தை நமக்கு விளக்குகின்றன. தமிழ் மணத்தோடும், ‘தமிழன்’
என்ற மனத்தோடும், தமிழ்நாட்டு மண்ணோடும் கலவாத தேசியம்,
வளராது-வாழாது என்பதே அந்தத் தத்துவம்.
வடக்கேயிருந்து தமிழகத்துக்கு வந்த சமண - பௌத்த மதங்கள்,
ஆரம்ப காலத்தில் தமிழ்ப்பற்றோடு, ‘தமிழன்’ என்ற இனஉணர்வோடு
கலந்தே வளர்ந்தன வாழ்வு பெற்றன. பிந்திய காலத்தில் அவை
தமிழகத்தில் செல்வாக்கிழக்கக் காரணம், தமிழினத்தவரின் தனிப்
பண்புகளுக்கு வேறுபட்டும் விரோதப்பட்டும் வளரவும் வாழவும்
முயன்றதேயாகும்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வடக்கே தோன்றித் தெற்கில்
புகுந்த ‘தேசியம்’ என்ற புது மதமும் தமிழகத்தில் வளர வேண்டும்-
வாழவேண்டும் என்றால், தமிழ்மொழிப் பற்றோடும், ‘தமிழன்’ என்ற
உணர்வோடும் உறவு கொள்ள வேண்டுமென்பதனைத் தமிழகத்துத்
தேசியவாதிகளுக்கு முதன் முதலாக உணர்த்திய பெருமை தேசியக்கவி
பாரதியாருக்கே தனியுரிமை.
ஆறே பாடல்கள்
பாரததேசம் பற்றியும் தேசிய ஒருமைப்பாடு பற்றியும் தேச
விடுதலை பற்றியும் ஆன்மஞானம் பற்றியும்; வடபுலத்துப் பெரு
வீரன் சிவாஜி, புதுமதம் வளர்த்த குரு கோவிந்தசிங் ஆகியோர்