அவர் பாடம் சொல்லுவார். நான் இடை மறித்து, “இந்தச் செய்யுள் என்ன அலங்காரம்?” என்று கேட்பேன். அவருக்குத் தெரியாது. “பார்த்துத்தான் சொல்லவேண்டும்” என்று மழுப்புவார். நான் படித்த புஸ்தகத்தில் உரையில் இன்ன அலங்காரம் என்று குறித்திருக்கும். அதை விளக்கும்படி கேட்பேன். “அந்த அலங்காரத்தின் இலக்கணம் இதில் எவ்வாறு அமைந்திருக்கிறது?” என்று வினவுவேன். எனக்குத் திருப்தி உண்டாகும்படி விளக்க அவரால் இயலாது. அவர் என்னைக் கேள்வி கேட்பது போய் நான் சந்தேகம் தீர்த்துக் கொள்வதுபோல அவரைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன். “எவ்வளவோ கஷ்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தோம். இங்கு வந்தும் பிள்ளையவர்களிடம் நேரிற் பாடம் கேட்க இயலவில்லையே! எங்கே போனாலும் நம் அதிர்ஷ்டம் நம்மைப் பின் தொடருகிறதே!” என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று. “இந்த நிலை மாறவேண்டும். இதற்கு என்ன வழி?” என்று யோசிக்கலானேன். அத்தியாயம்-29 தந்தையார் விடை பெற்றுச் செல்லுதல் மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடம் கேட்க ஆரம்பித்து விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கஷ்டம் தீர்ந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாஸ்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே? பாடம் கேட்ட சந்தோஷத்தோடு நானும் என் தந்தையாரும் ஜாகைக்கு வந்து போஜனம் செய்தோம். என் தந்தையார் திண்ணையில் சிரமபரிகாரம் செய்து கொண்டார். நான் அருகில் உட்கார்ந்து ஏதோ புஸ்தகத்தைப் படித்து வந்தேன். கோபாலகிருஷ்ண பாரதியாரைக் கண்டது அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில் கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். அவரைக் கண்டவுடன் என் தகப்பனார் |