பக்கம் எண் :

26என் சரித்திரம்

களைப் பொறாமைக்காரருடைய போதனைகள் மறையச் செய்தன.
கிருஷ்ணையருடைய பல்லவி அந்த ஜமீன்தாருடைய காதில் விழுந்ததோ
இல்லையோ உடனே அவரது பழைய இயல்பு மேலெழுந்து நின்றது. ‘என்ன
பைத்தியக்காரத்தனம் பண்ணி விட்டோம்! நாம் இவருக்கு முத்துப் பையா
தந்திருக்கிறோம்! வஜ்ரப் பதக்கமா கொடுத்தோம்! இவரால் நமக்கு எவ்வளவு
பெருமை! நடுக் காட்டிலுள்ள இந்த ஊருக்கு வேறு ஸமஸ்தானத்திலிருந்து
வித்துவான்களெல்லாம் வந்து போவது யாராலே? இவராலே அல்லவா? இதை
நாம் மறந்து விட்டோமே’ என்று நினைந்து இரங்கினார்.

“ஸ்வாமீ! க்ஷமிக்க வேண்டும். நான் தெரியாமல் பராமுகமாக இருந்து
விட்டேன்” என்று ஜமீன்தார் வேண்டிக் கொண்டார்.

நினைத்த காரியத்தைச் சாதித்துக் கொண்ட கிருஷ்ணையர் பழைய
பல்லவியை ஜமீன்தாரைப் புகழும் முறையில் மாற்றிப் பாடத் தொடங்கினார்:

“பத்துப்பை முத்துப்பை வஜ்ரப் பதக்கமும்
பரிந்து கொடுத்து மிகச்சுகந் தந்துபின்
பஞ்சணை மீதினிற் கொஞ்சி விளையாடி
ரஞ்சிதமும் அறிந்த மகராஜனே”

என்று இவர் அதை மாற்றிப் பாடவே ஜமீன்தார் முகம் மலர்ந்தது.

“சங்கீதமும் சாகித்தியமும் உங்களுடைய அதிகாரத்தின் கீழ் உங்கள்
இஷ்டப்படி ஏவல் செய்கின்றனவே!” என்றார் அவர்.

“நான் என்ன ஜமீன்தாரா? ஏவல் செய்ய எனக்கு வேறு யார்
இருக்கிறார்கள்? என்னுடைய அதிகாரத்துக்கு யார் வணங்குவார்கள்?” என்று
சிரித்துக்கொண்டே கிருஷ்ணையர் கூறினார்.

“இதோ, நான் இருக்கிறேன்; உங்கள் சங்கீத அதிகாரத்துக்குத் தலை
வணங்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள்” என்று ஜமீன்தார் சொல்லியபோது
அவ்விருவருடைய அன்புள்ளங்களும் மீட்டும் பொருந்தி நின்றன.

இவ்வாறு கனம் கிருஷ்ணையருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த
நிகழ்ச்சிகள் பல உண்டு. அந்த அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி இவர்
பாடிய கீர்த்தனங்களும் பல. இவருடைய சந்தோஷமும், கோபதாபங்களும்,
வெறுப்பும், பக்தியும் கீர்த்தனங்களாக வெளிப்பட்டுள்ளன.

டாக்டர் ஐயரவர்கள்

(1859-1942) ஐயரவர்களின் பெற்றோர்கள்