பக்கம் எண் :

பிரசங்க சம்மானம் 377

ரெட்டியாருக்கு விடை சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. “அப்பால்
உங்கள் இஷ்டம். நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது” என்று
ஒப்புக்கொண்டார்.

புராணப் பூர்த்தி

திருவிளையாடற் புராணம் பூர்த்தி செய்யும் பொருட்டு ஒரு நல்ல நாள்
குறிப்பிடப்பட்டது. அப்புராணத்தில் இறுதிப் படலமாகிய அருச்சனைப்
படலத்தில் ஒரு பகுதி முன்பே நடைபெற்றது. பிற்பகுதியைச் சொல்லிப்
பிரசங்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பிட்ட தினத்தில் ஊர் முழுவதும் பெருங்கூட்டமாக இருந்தது.
பிரசங்கம் செய்து வந்த பிள்ளையார்கோவிலுக்கு முன் இருந்தபந்தலைப்
பிரித்து ஒரு பெரிய பந்தல் போட்டார்கள். வாழை, கமுகு, கூந்தற் பனை,
இளநீர்க்குலை, மாவிலைத் தோரணங்கள், தேர்ச் சீலைகள்
முதலியவற்றைக்கட்டிப் பந்தலை அலங்கரித்தார்கள். ஒரு பெரிய
திருவிழாநாளைப் போல எல்லோரும் உத்ஸாகத்தோடு இருந்தார்கள்.
மாலையில் முன்நேரத்திலே பிரசங்கம் தொடங்கப் பெற்றது. இப்புராணத்தைக்
கேட்டு வந்த வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பலர் பல சிவஸ்தலங்களைத்
தரிசித்துக் கொண்டு மதுரையை அடைந்து ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளை
வழிபட்டுப் பூசித்தனரென்ற செய்தி அருச்சனைப் படலத்தில் உள்ளது.
அம்முனிவர்கள் பூஜை செய்த பிறகு சொக்கநாதப் பெருமானைத் துதிப்பதாக
அப்படலத்தின் இறுதியில் ஒரு பகுதி இருக்கிறது. அப் பகுதியில் அக்கடவுளின்
அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் முக்கியமானவை ஓசைச் சிறப்புடைய
செய்யுட்களில் தொகுத்துச் சொல்லப் பெற்றிருக்கின்றன.

“பழியொடு பாச மாறுகெட வாச வன்செய்பணி
கொண்ட வண்டசரணம்
வழிபடு தொண்டர் கொண்டநிலை கண்டு வெள்ளிமணி
மன்று ளாடிசரணம்
செழியன்பி ளிந்தி டாதபடி மாறி யாடல்தெளி
வித்த சோதிசரணம்
எழுகடல் கூவி மாமியுடன் மாம னாடவிசை
வித்ச வாதிசரணம்”

என்பது அப் பகுதியில் முதற் பாட்டு. இவ்வாறு ஆறுபாடல்கள்
வருகின்றன. அச்செய்யுட்களை வெவ்வேறு ராகத்திற் பாடிப் பொருள்
சொல்லும்போது முன்பு விரிவாகச் சொன்ன திருவிளையாடல்களின்
ஞாபகத்தினாலும், பாடல்களின் இன்னோசையாலும் யாவரும் மனங்கசிந்து
உருகினர்.