பக்கம் எண் :

380என் சரித்திரம்

அங்கே விருத்தாசல ரெட்டியாரும் அவர் குமாரராகிய நல்லப்ப
ரெட்டியாரும் காரையில் நிகழ்ந்தவற்றைக் கேட்டு மகிழ்ந்தார்கள். நான்
பிள்ளையவர்களிடம் செல்வதில் வேகமுள்ளவனாக இருத்தலை உணர்ந்த
நல்லப்ப ரெட்டியார், “நீங்கள் மட்டும் போய் வாருங்கள். தங்கள் ஐயாவும்
அம்மாவும் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறவே நான் அங்ஙனமே செய்ய
உடன்பட்டேன். என் தாயாருக்கு என்னைப் பிரிவதில் சிறிதும் விருப்பமில்லை.
அன்றியும் அக்காலத்தில் கும்பகோணத்திலும் அதைச் சார்ந்த இடங்களிலும்
விஷபேதி நோய் பரவியிருந்தது. அச்செய்தி எங்கள் காதுக்கு எட்டியது.
இயல்பாகவே என்னை அனுப்புவதற்கு மனம் இல்லாத என் பெற்றோர்களுக்கு
இச் சமாசாரம் துணைசெய்தது. “நீ இப்போது போக வேண்டாம். இங்கேயே
தங்கி அந்த நோய் அடங்கியவுடன் போகலாம்” என்று தடுத்தார்கள். எனக்கு
மாத்திரம் எவ்வாறு இருந்தாலும் அப்பால் ஒருநாளாவது அங்கே தாமதிக்கக்
கூடாது என்ற உறுதி ஏற்பட்டது.

என்ன சொல்லியும் கேளாமல், “இவ்வளவு காலம் திருவிளையாடல்
படித்தேன். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருவருள் என்னைக் காப்பாற்றும் என்ற
தைரியம் இருக்கிறது” என்று சொல்லிப் புறப்பட்டேன். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர்
திருவருள் என்று வெளிப்படச் சொன்னாலும், அந்த அருளோடு
அம்மூர்த்தியின் திருநாமத்தைக் கொண்ட என் ஆசிரியரது உண்மையன்பு
என்னைப் பாதுகாக்கு மென்ற தைரியமும் என் அந்தரங்கத்தில் இருந்தது.

திருவாவடுதுறையை அடைதல்

செங்கணத்திலிருந்து புறப்பட்டபோது என் அன்னையார் ஒரு மைல்
தூரம் உடன் வந்து பிரிவதற்கு மனம் இல்லாமல் கண்ணீர் வழிய,
“தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி விடையளித்தார். நான்
நேரே திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தேன். ஆசிரியர் அம்பரில் புராணம்
அரங்கேற்றிய பின் திருவாவடுதுறைக்கு வந்து விட்டார். நான் அவரைக்
கண்டவுடன், “மறுபடியும் போவதாக உத்தேசம் இல்லையே? இங்கேயே
இருக்கலாமல்லவா?” என்று கேட்டார்.

நான், “இங்கிருந்து பாடம் கேட்பதையன்றி எனக்கு வேறு வேலை
இல்லை” என்று சொன்னேன். தாய்தந்தையர் க்ஷேமம் முதலியவற்றை அவர்
விசாரித்தார்.

சுப்பிரமணிய தேசிகருடைய மொழிகள்

அப்பால், “ஸந்நிதானத்தைப் போய்ப் பார்த்து வாரும். பல மாதங்களாக
நீர் பார்க்கவில்லையே” என்று ஆசிரியர் கூறவே நான்