பக்கம் எண் :

ராவ்பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை 425

அதனைச் சித்தம் செய்யச் சொல்லலாமென்றும் சொன்னார். தேசிகர்
அப்படியே செய்யச் சொல்வதாகக் கூறியிருந்தார். ஆயினும் அது நிறைவேற
வில்லை.

அது முதல் பட்டாபிராம பிள்ளை அப்பக்கம் வரும்போதெல்லாம்
திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து அன்புடன்
சல்லாபம் செய்து செல்வார்.

வரவேற்புப் பாடல்

தாது வருஷம் புரட்டாசி மாத ஆரம்பத்தில் (செப்டம்பர் 1877) ஒரு
முறை அவர் திருவாவடுதுறைக்கு வந்தார். மாணாக்கர் கூட்டம் அதிகமாக
இருந்ததைக் கண்டு சந்தோஷமடைந்தார். அவர்களுடைய கல்வித் திறமையைப்
பரீட்சித்துத் திருப்தி அடைந்தார். தேசிகருடைய விருப்பத்தின்படி
மாணாக்கர்களில் ஒவ்வொருவரும் அவர் விஷயமாக ஒவ்வொரு செய்யுள்
இயற்றிச் சொன்னோம். நான் இயற்றிக் கூறிய செய்யுள் வருமாறு:-

“கார்நோக்கி நிற்கு மயில்போல நீங்கிய காதலன்றன்
தேர்நோக்கி நிற்கு மடந்தையர் போலத் திகைப்பறவிப்
பார்நோக்கி நிற்குநற் பட்டாபி ராம பராக்கிரம
நேர்நோக்கி நின்றனம் யாங்களெல் லாநின் னிகழ்வரவே.”

எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்த பட்டாபிராம பிள்ளை சுப்பிரமணிய
தேசிகரைப் பார்த்துத் தம்முடைய பழைய வேண்டுகோளை ஞாபகப்படுத்தினார்.
“இவ்வளவு மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். ஸந்நிதானம் மனம்
வைத்தால் அகராதியை விரைவில் நிறைவேற்றலாம்” என்று விண்ணப்பம்
செய்தார். “பிள்ளையவர்கள் இந்த உபயோகமான காரியத்தைச்
செய்திருக்கலாம். அவர் எப்போதும் புராணங்களும். பிரபந்தங்களும் பாடியே
தமது வாழ்க்கையைக் கழித்து விட்டார். பெரிய வித்துவான்கள் உலகத்திற்கு
உபகாரமான காரியங்களைச் செய்ய முன் வந்தால் தமிழ் எவ்வளவோ
விருத்தியடையும்” என்றார். தேசிகர் “பார்ப்போம்” என்று சொல்லி விடை
கொடுத்தனுப்பினார்.

பாடற் கடிதம்

பாட்டாபிராம பிள்ளை திரிசிரபுரம் சென்று தாம் திருவாவடுதுறைக்கு
வந்திருந்த காலத்தில் தமக்கு உண்டான மகிழ்ச்சியைப் புலப்படுத்தியும் தம்
வேண்டுகோளை நினைவுறுத்தியும் நான்கு பாடல்கள் எழுதி அச்சிட்டுச்
சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பினார். அவை வருமாறு:-