பக்கம் எண் :

நான் பதிப்பித்த முதல் புஸ்தகம் 451

சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. மேற்படி திருவாவடுதுறையில்
மேற்படி சுவாமிகளியற்றுவித்த கொலு மண்டபமென்னும் வேணுவனலிங்க
விலாசச் சிறப்பு. இவை பல வித்துவான்களாற் பாடப்பட்டு மேற்படி ஆதீன
அடியார் குழாங்களிலொருவராகிய ஆறுமுக சுவாமிகளாலும் மேற்படி
திருவாவடுதுறை வேங்கட சுப்ப ஐயரவர்கள் புத்திரராகிய சாமிநாத
ஐயரவர்களாலும் பார்வை யிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர
அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. வெகு தான்யடு ஆனிமீ.”

அப்புஸ்தகத்தில் வேணுவனலிங்கத் தம்பிரானுடைய சரித்திரச்
சுருக்கமும், திருவாவடுதுறை குமார சுவாமித் தம்பிரான் இயற்றிய தோத்திரச்
செய்யுட்களும், வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டிப்
பாடிய பாடல்களும் சேர்க்கப்பெற்றன. பிழைத்திருத்தம் சேர்க்கவேண்டி
நேர்ந்தது. எல்லாம் சேர்ந்து 32 பக்கங்கள் ஆயின.

அந்தப் புஸ்தகம் அச்சிட்டு வந்த காலத்தில் நானும் பிறரும் அதை
வைத்து அழகு பார்த்துக் கொண்டேயிருந்தோம். சம்பிரதாயத்திற்காக
ஆறுமுகத் தம்பிரான் பெயரையும் சேர்த்துப் பதிப்பித்திருந்தாலும் அவர்
என்னிடமே ஒப்பித்து விட்டமையால் நான்தான் முற்றும் கவனித்துப்
பார்த்தவன். ஆதலின் எனக்கு அப்புஸ்தகத்தைப் பார்த்தபோதெல்லாம்
ஆனந்தம் பொங்கியது. “நான் பதிப்பித்த புஸ்தகம், என் பாடல்கள் உள்ள
புஸ்தகம்” என்ற பெருமையோடு மற்றொரு சிறப்பும் அதில் இருந்தது.
சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்புச் செய்யுட்களில் தியாகராச செட்டியார்
பாடல்கள் பதின்மூன்று இருந்தன. அதில் ஒரு செய்யுளில் என்னைப் பாராட்டி
யிருந்தார்.

“துன்னுறுபே ரிலக்கணமு மிலக்கியமு
மீனாட்சி சுந்தரப் பேர்
மன்னுறுநா வலர்பெருமா னிடையுணர்ந்தெல்
லாநலமும் வாய்ந்தன் னோன்போற்
பன்னுகவி சொல்சாமி நாதமறை
யோனியற்சண் பகக்குற் றால
மென்னுமுயர் பெயர்புனைந்த கவிராஜன்
முகற்பலரு மியம்பி யேத்த”

என்பது அச் செய்யுள்.

பாபநாசம்

செவந்திபுரத்தில் சுப்பிரமணிய தேசிகர் நான்குமாத காலம்
தங்கியிருந்தார். தினந்தோறும் காலையில் அருகிலுள்ள பாபநாசம்