பக்கம் எண் :

எனக்கு உண்டான ஊக்கம் 505

வற்றையும் கவனித்து வந்தார். ராயர் முகத்தில் ஏற்படும் விருப்பு
வெறுப்புக்குறிப்புக்களினால் அவரது அபிப்பிராயத்தை அறிய முயன்றார்.

ஆனால், கோபால ராவ் முகத்தில் புதிய குறிப்பு ஒன்றையும் அவர்
காணவில்லை. எப்பொழுதும் உள்ளது போன்ற மலர்ச்சி இருந்தது. தம்முடைய
விருப்பு வெறுப்புக்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் இயல்புடையர்
அல்லர் அவர். கம்பீரமான தன்மையினர். அவருடைய அபிப்பிராயத்தை
எளிதில் யாவரும் அறிந்து கொள்ள முடியாது. செட்டியார் ஒரு குறிப்பும்
அறியாத வராகிச் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தார்.

செட்டியாரின் ஆவல்

மணி ஐந்து அடித்தது. கோபால ராவ், தம் கையில் உள்ள புஸ்தகத்தை
உரிய மாணாக்கரிடம் கொடுத்து விட்டு எழுந்தார். நானும் செட்டியாரும்
எழுந்து நின்றோம். கோபால ராவ் உள்ளத்தில் எவ்வகையான கருத்து
உண்டாயிற்றென்பதை அறிய எனக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது. அதை
எவ்வாறு தெரிந்துகொள்வது?

அவ் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணையரென்னும்
மாணாக்கர் அப்போது திடீரென்று எழுந்து ராயரை நோக்கி, “ஒரு
விஞ்ஞாபனம்; மாணாக்கர்களாகிய நாங்களெல்லாரும் ‘செட்டியாரவர்கள்
வேலையை விட்டு விலகிக் கொள்கிறார்களே; இனி என்ன செய்வோம்?’ என்ற
கவலையில் நேற்று வரையில் மூழ்கியிருந்தோம். இப்போது அந்தக் கவலை
நீங்கி விட்டது. செட்டியாரவர்கள் தாம் இருந்த ஸ்தானத்துக்குத்
தக்கவர்களையே அழைத்து வந்து அளித்து எங்கள் பயத்தைப் போக்கி
விட்டார்கள்” என்று சொன்னார்.

அவர் அவ்வளவு தைரியமாகப் பேசியது குறித்து வியந்து அவரைப்
பார்த்தேன். செட்டியார் கண்களும் அன்புடன் அவரை நோக்கின. ராயரோ
அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் செய்து புறப்பட்டார். நாங்களும்
புறப்பட்டோம்.

ராயவர்களுக்கு நான் பாடம் சொன்ன விஷயத்தில் என்ன
அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாமென்ற கேள்வியைக் காலேஜ் ஆசிரியர்கள்
எல்லோரிடமும் செட்டியார் கேட்டார்.

“நல்ல அபிப்பிராயமாகத்தான் இருக்க வேண்டும்” என்று சிலர்
சொன்னார். ராயரோடு நெருங்கிப் பழகும் சேஷையர் முதலியோர்.
“பிள்ளைகளுக்கு விளங்கும்படி சொல்கிறார் என்பதே அவர் அபிப்பிராயம்
என்று தெரிகிறது” என்றார்கள்.