பக்கம் எண் :

52என் சரித்திரம்

அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத்
தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விஷயத்தில் அவர் யாரிடமும்
பக்ஷபாதம் காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று ஒருவன்
இருந்தான். அவன் தகப்பனார் பணக்காரர். அதனால் அவனுக்குச் சிறிது
கர்வமும் தைரியமும் இருந்தன. உபாத்தியாயர் அடிக்கும்போது அவன் திருப்பி
அடிக்க முயல்வான். முரட்டுத்தனத்தினால் குழந்தைகளை அடக்கியாள்வது
கஷ்டமென்பதை அந்த உபாத்தியாயர் தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு
அவருடைய கைப்பிரம்பே செங்கோலாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளும்
தம்முடைய தண்டனையை ஏற்றுக் கொள்ளும் போது பிச்சு மாத்திரம்
எதிர்த்தால் அவர் சும்மா இருப்பாரா? மேலும் மேலும் கடுமையான
தண்டனைகளை விதித்தார். அவன் சிறிதும் அடங்கவில்லை. பிறகு அவனைப்
பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கி விட்டார். “அவன் பெற்ற விடுதலை நமக்கும்
கிடைக்காதா?” என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு.

பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு பிறகு படிப்பைப் பற்றி
நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத்தவிர வேறு
ஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப்
பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்ன? இராவிட்டால் என்ன?

நாராயணையர் அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளைத்தான்
கற்பிப்பார். அவரிடம் நான் கற்றபின்பு சாமிநாதையரது பள்ளிக் கூடத்தில்
சேர்ந்தேன். அங்கேதான் ஏட்டில் எழுதக் கற்றுக் கொண்டேன். அக்காலத்தில்
காகிதம் பள்ளிக்கூடம் வரைக்கும் வரவில்லை. சிலேட்டும் இல்லை. முதலில்
மாணாக்கன் மணலில் எழுதிப் பழக வேண்டும். பிறகு அவனே
எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சாமிநாதையர் சங்கீதமும் ஸம்ஸ்கிருதமும் தெரிந்தவர். முன்பே அவரைப்
பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு அவர் சம்க்ஷேப ராமாயணம், விஷ்ணு
ஸஹஸ்ரநாமம், நீதி சாரம், அமரம் மூன்று காண்டங்கள் என்பவற்றைப்
போதித்தார். அவ்வளவும் எனக்கு மனப் பாடமாக இருந்தன. தமிழும்
கணக்கும் கற்பித்தார். அவர் நாராயணையரைப்போல் கடுமையானவர் அல்லர்.
ஆனாலும் அந்தக் காலத்துக் கிராம உபாத்தியாயர்களுக்குப் பிரம்பு
ஆடாவிட்டால் மாணாக்கர்கள் படிக்க மாட்டார்களென்ற எண்ணம்
பரம்பரையாக இருந்து வந்தது, அவருக்கும் அந்தக் கொள்கை உண்டு.