பக்கம் எண் :

இளமைக் கல்வி 53

கிராமத்துப் பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
என்றும் சொல்லுவார்கள். அந்தப் பள்ளிக் கூடங்களில் மாணாக்கர்கள் பயிலும்
முறையே வேறு. இப்போது அதனை எங்கும் பார்க்க முடியாது.

பிள்ளைகள் யாவரும் விடியற் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து
சுவடித்தூக்கோடு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடவேண்டும். சுவடிகளை யெல்லாம்
வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித்தூக்கென்று
பெயர். அந்தத் தூக்கு ஒருவகை உறியைப் போல இருக்கும். தூக்கைப்
பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டி விட்டுப் பிள்ளைகள் முறைப்படி இருந்து
முதல் நாள் நடந்த பாடங்களைப் பாராமல் ஒப்பிக்க வேண்டும். அதற்கு முறை
சொல்லுதல் என்று பெயர். அப்போது உபாத்தியாயர் வீட்டிற்குள் படுத்துக்
கொண்டிருப்பார்; அல்லது வேறு ஏதேனும் செய்து வருவார். அவரை
எதிர்பாராமல் பிள்ளைகள் பாடங்களை முறை சொல்ல வேண்டும். அதை
அவர் உள்ளே இருந்தபடியே கவனிப்பார். பெரும்பாலும் திண்ணைப்
பள்ளிக்கூடங்கள் உபாத்தியாயரது வீட்டுத் திண்ணையிலேயே இருக்கும்.

ஆறு மணிக்குமேல் பிள்ளைகளெல்லாம் வாய்க்கால் அல்லது குளம்
முதலிய இடங்களுக்குப் போய்த் தந்த சுத்தி செய்து தங்கள் தங்கள்
குலத்திற்கேற்ற சின்னங்களைத் தரித்துக்கொண்டு ஸந்தியா வந்தனமோ வேறு
அனுஷ்டானமோ செய்வார்கள். பிறகு தங்கள் வஸ்திரங்களில் மணலை
எடுத்துக்கொண்டு மூஷிகவாகனம், ஸரஸ்வதி ஸ்தோத்திரம் முதலியவற்றைச்
சொல்லிக்கொண்டே பள்ளிக் கூடத்திற்கு வருவார்கள். முன்பிருந்த பழைய
மணலை அகற்றி விட்டுப் புதிய மணலைப் பரப்புவார்கள்.
எழுதுவதற்குரியவர்கள் அதில் எழுதுவார்கள்; மற்றவர்கள் தங்கள்
பாடங்களைப் படிப்பார்கள்.

ஒன்பது மணிக்குப் பிள்ளைகளைப் பழையது (பழைய அமுது)
சாப்பிடவிடுவது வழக்கம். அப்பொழுது உபாத்தியாயர் ஒரு பக்கத்தில்
வீற்றிருந்து ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் பிரம்பால் அடித்து
அனுப்புவார். பழைய சோற்று ருசியில் பள்ளிக்கூட ஞாபகம் மறக்கக்
கூடாதென்பதற்காக அங்ஙனம் செய்வார் போலும்!

பிள்ளைகளுக்குள்ளே கெட்டிக்காரனாகவும் பலசாலியாகவும் இருப்பவனை
உபாத்தியாயர் சட்டாம் பிள்ளையாக நியமிப்பார். அவன் புத்திசாலியாக
இராவிட்டாலும் பலசாலியாக இருக்க வேண்டியது அவசியம்.
உபாத்தியாயருக்குப் பிரதிநிதியாகப்