பக்கம் எண் :

634என் சரித்திரம்

உழைப்பையும் தெரிந்துகொண்டவர்கள் அவர்கள் செயலைப்
பொருட்படுத்தவே மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

குரு பூஜை நிறைவேறியது. வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்கள்
தங்கள் ஊருக்குச் சென்றனர். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அன்புச்
செயல்களை நினைந்து நினைந்து பொழுது போக்கும் அளவோடு நான் பத்துப்
பாட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டேன்.

அத்தியாயம்-104

திருநெல்வேலிப் பிரயாணம்

1888-ஆம் வருஷ ஆரம்பத்திலே சுப்பிரமணிய தேசிகரை இழந்த
வருத்தம் ஆறுவதற்குள் மற்றொரு பெரிய நஷ்டம் நேர்ந்தது. எனது
நன்மையைக் கருதிய மகோபகாரிகளுள் சுப்பிரமணிய தேசிகருக்கு அடுத்த
படியாகச் சொல்லக் கூடிய ஸ்ரீ தியாகராச செட்டியார் சிவபதமடைந்தார்.

தியாகராச செட்டியார் பிரிவு

செட்டியாரிடமிருந்து எனக்கு அடிக்கடி கடிதம் வரும். அவர் கண்
பார்வை குறைந்தது முதல் வேறு யாரேனும் அவருக்காக எழுதுவார். அக்
கடிதங்களிலிருந்து செட்டியாருடைய தேகம் மிகவும் மெலிந்து விட்டதென்று
தெரிய வந்தது. ஆனால் அவ்வளவு விரைவில் அவர் வாழ்நாள் முடிவுபெறுமென்று நான் எண்ணவில்லை.

1888-ஆம் வருஷம் ஜனவரி மாதம் பத்தொன்பதாம் தேதி செட்டியார்
சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தாரென்ற செய்தி மறுநாளே எனக்குக்
கிடைத்தது. அவரைப் போய்ப் பாராமற் போனோமே யென்ற வருத்தம் என்
மனத்தில் உண்டாயிற்று. பத்துப் பாட்டு ஆராய்ச்சியின் ஆரம்பம் இவ்வாறு
இருந்ததில் என் மனம் சிறிது குழப்பமுற்றது. அதற்கு ஏற்றபடி இருந்தது அதன்
ஏட்டுச் சுவடியின் நிலையும்.

செட்டியாரது பிரிவு வருத்தவே சில செய்யுட்கள் எழுதினேன்.
அவற்றுள்,

“மடியென்றுந் தவிர்தியறி வினைவளர்க்கும் நூல்கள்மிக மகிழ்ந்தே
மெல்லப்