பக்கம் எண் :

மேலும் துன்பங்கள்137

Untitled Document
விரும்பியதோடு,   கொஞ்சம்     காற்றோட்டமாக  இருக்கவும் அவர்
விரும்பியிருக்கக் கூடும்.     ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர்
அழுக்குக் கோணித் துண்டை  எடுத்து, வண்டியில் ஏறும் கால்படிமீது
அதை விரித்தார்.    பிறகு என்னைப் பார்த்து  “சாமி, இதன்மீது நீர்
உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான்  உட்கார வேண்டும்”
என்றார்.      இந்த அவமதிப்பை   என்னால் சகிக்க முடியவில்லை.
“என்னை     உள்ளே உட்கார    வைக்கவேண்டியிருந்தும் நீர்தான்
என்னை    இங்கே உட்காரவைத்தீர்.    அந்த    அவமதிப்பையும்
சகித்துக்கொண்டேன்.இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப்
பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது       காலடியில் உட்காரச்
சொல்கிறீர்.          அப்படி உட்காரமாட்டேன்.  ஆனால், உள்ளே
வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக்
கொண்டும் கூறினேன்.

     இவ்விதம் நான்      தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த
போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில்  ஓங்கி அறையத்
தொடங்கினார்.     என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும்
முயன்றார்.     வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டேன். மணிக்கட்டுகளின்   எலும்புகள்   முறிந்தாலும்
பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன்.    அவர்
என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும்,   நான் சும்மா இருப்பதுமாகிய
அக் காட்சியைப்  பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ
பலசாலி; நானோ பலவீனமானவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம்
உண்டாயிற்று.     “அவரை விட்டுவிடும். அடிக்காதேயும். அவர் மீது
குற்றம் இல்லை.  அவர் செய்தது சரியே.     அவர் அங்கே இருக்க
முடியாதென்றால்      இங்கே வந்து       எங்களுடன் உட்கார்ந்து
கொள்ளட்டும்” என்றனர்.        “அது முடியாது!” என்று ‘தலைவர்’
கத்தினார். ஆனாலும்,      கொஞ்சம் அவமானம் அடைந்துவிட்டவர்
போலவே காணப்பட்டார். என்னை அடிப்பதை  நிறுத்திவிட்டார். என்
கையை விட்டுவிட்டு,       கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தார்.
வண்டிப்       பெட்டியின்   மற்றொரு  பக்கத்தில்   ஹாட்டன்டாட்
வேலைக்காரர் உட்கார்ந்திருந்தார். எழுந்து படிக்கட்டில் உட்காரும்படி
அவருக்குச்     சொல்லி,   அவர் காலி செய்த இடத்தில் ‘தலைவர்’
உட்கார்ந்துகொண்டார்.

     பிரயாணிகள் ஏறி    அவரவர்களிடத்தில்      உட்கார்ந்தனர்.
ஊதியதும்,   வண்டியும்     வேகமாகப் புறப்பட்டுப் போயிற்று. என்
இருதயமோ    அதி    வேகமாக  அடித்துக் கொண்டிருந்தது. சேர
வேண்டிய இடத்திற்கு உயிருடன்    போய்ச் சேர முடியுமோ என்று
எண்ணித் திகைத்தேன்.    ‘தலைவ’ரோ    அடிக்கடி கோபத்துடன்
என்னை       முறைத்துப்   பார்த்துக் கொண்டே இருந்தார். “இரு,
ஸ்டாண்டர்ட்டன்     போய்ச்  சேர்ந்ததும்     என்ன செய்கிறேன்