பக்கம் எண் :

169

Untitled Document
வேண்டும். அவருக்குக் கொடுக்க   வேண்டிய கட்டணத்திற்கு என்ன
ஏற்பாடு?”

     கட்டணம் என்று சொல்லப்பட்டது எனக்கு வேதனை அளித்தது.
எனவே, நான் குறுக்கிட்டுச் சொன்னதாவது:   “அப்துல்லா சேத், என்
கட்டணம் என்ற பேச்சுக்கே   இடமில்லை. பொது ஜன ஊழியத்திற்கு
கட்டணம் இருக்க முடியாது.   நான் தங்குவதாயின் உங்கள் சேவகன்
என்ற முறையில் தங்க முடியும். இந்த நண்பர்கள்    எல்லோருடனும்
எனக்குப் பழக்கம்      இல்லை என்பதையும்   நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், அவர்கள்     ஒத்துழைப்பார்கள் என்று நீங்கள் நம்பினால்,
மேற்கொண்டும் ஒரு மாதம் தங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
என்றாலும்,      ஒரு விஷயம் இருக்கிறது.  எனக்கு நீங்கள் எதுவும்
கொடுக்க வேண்டியதில்லையென்றாலும், நாம் எண்ணுவதைப் போன்ற
வேலையை, ஆரம்பத்திலேயே ஏதாவது ஒரு  நிதி இல்லாமல் செய்ய
முடியாது.   நாம் தந்திகள்    அனுப்ப வேண்டி      வரலாம்; சில
பிரசுரங்களையும்       அச்சிடவேண்டி வரும்.    கொஞ்சம் சுற்றுப்
பிரயாணமும் அவசியமாவதோடு, உள்ளூர் அட்டர்னிகளையும் கலந்து
ஆலோசிக்க நேரலாம்.    இங்குள்ள சட்டங்களைக் குறித்து எனக்கு
ஒன்றும் தெரியாதாகையால்      அவைகளைப் பார்க்கச் சில சட்டப்
புத்தகங்களையும்      வாங்க வேண்டியிருக்கும்.  இவற்றை எல்லாம்
பணமில்லாமல் செய்ய முடியாது. மேலும்    இந்த வேலைக்கு ஒருவர்
மாத்திரம் போதாது என்பதும் தெளிவானது.  எனக்கு உதவி செய்யப்
பலர் முன்வர வேண்டும்.”

     உடனே, ஏககாலத்தில்   பல குரல்கள் எழுந்தன: “அல்லாவின்
மகிமையே மகிமை! அவன்     அருளே அருள்! பணம் வந்துவிடும்
உங்களுக்கு    எவ்வளவு  தேவையோ அவ்வளவுக்கு  ஆட்களும்
இருக்கிறார்கள்.         தயவுசெய்து   நீங்கள் தங்குவதற்கு ஒப்புக்
கொள்ளுங்கள். எல்லாம் நன்றாகிவிடும்” என்றனர்.

     இவ்விதம்  பிரிவுபசார கோஷ்டி,   காரியக் குழுவாக மாறியது.
‘விருந்து    முதலியவைகளைச் சீக்கிரமாக முடித்துக் கொண்டு வீடு
திரும்பிவிடுவோம்’    என்று        யோசனை கூறினேன்.  இந்தப்
போராட்டத்திற்கு      என்     மனத்திற்குள்ளேயே   ஒரு திட்டம்
போட்டுக்கொண்டேன்.   வாக்காளர் ஜாபிதாவில்    யார் யாருடைய
பெயர்கள்    இருக்கின்றன     என்பதைத்  தெரிந்து கொண்டேன்.
மேற்கொண்டும் ஒரு மாத காலம் தங்குவ தென்றும்   தீர்மானித்தேன்.

     இவ்விதம் தென்னாப்பிரிக்காவில் என் வாழ்க்கைக்குக்  கடவுள்
அடிகோலியதோடு      தேசிய   சுயமரியாதைக்காக      நடத்திய
போராட்டத்திற்கு விதையையும் ஊன்றினார்.