பக்கம் எண் :

224சத்திய சோதனை

Untitled Document
தாக்கிய புயலோ    மிகக் கடுமையானது.   நீண்ட நேரம் அடித்தது.
எனவே, பிரயாணிகள் திகில் அடைந்து விட்டனர்.     அது பயபக்தி
நிறைந்த காட்சியாக   இருந்தது. எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்ட
அபாயத்தில், சகலரும் ஒன்றாகிவிட்டனர். முஸ்லிம்கள்,   ஹிந்துக்கள்,
கிறிஸ்தவர்கள்           முதலிய       எல்லோரும், தங்களுடைய
வேற்றுமைகளையெல்லாம்     மறந்து விட்டு ஒன்றை ஒரே கடவுளை
நினைத்தார்கள். சிலர் அநேக வேண்டுதல்களைச்  செய்துகொண்டனர்.
பிரயாணிகளின்        பிரார்த்தனைகளில், கப்பல் காப்டனும் கலந்து
கொண்டார். புயல்           ஆபத்துக்கு இடமானதுதான் என்றாலும்,
அதையும்விட மோசமான புயல்களைத் தாம்    அனுபவித்திருப்பதாகக்
காப்டன்      பிரயாணிகளுக்கு உறுதி கூறினார்.   சரியான வகையில்
கட்டப்பட்ட கப்பல்,      எந்தப் புயலையும் சமாளித்துத் தாங்கிவிடும்
என்றும் விளக்கினார். ஆனால், பிரயாணிகளைத் தேற்ற முடியவில்லை.
‘கிரீச்’ என்ற  சப்தமும், முறியும் சப்தமும் கப்பலின் பல பாகங்களிலும்
ஒவ்வொரு  நிமிடமும் கேட்டுக் கொண்டே இருந்தன. கப்பலில் பிளவு
கண்டு, எந்த நேரத்திலும்      தண்ணீர் உள்ளே புகுந்துவிடக் கூடும்
என்பதை அந்தச் சப்தங்கள் நினைவுபடுத்தி வந்தன. கப்பல் அதிகமாக
ஆடியது; உருண்டது; எந்தக் கணத்திலும் கவிழ்ந்துவிடக் கூடும் என்று
தோன்றியது.     மேல் தளத்தில் இருக்கமுடியும் என்ற    பேச்சிற்கே
இடமில்லை. ‘எல்லாம் அவன் சித்தம்போல்    நடக்கும் சொல்லாதவர்
இல்லை. இருபத்து                  நான்கு மணி நேரம் இவ்விதம்
அல்லல்பட்டிருப்போம்    என்பது என் ஞாபகம். கடைசியாக வானம்
நிர்மலமாயிற்று;   சூரியனும் காட்சியளித்தான்.  ‘புயல் போய் விட்டது’
என்று காப்டன் அறிவித்தார். கப்பலில்   இருந்தவர்களின் முகங்களில்
ஆனந்தம் பொங்கியது.         ஆபத்து மறைந்ததோடு அவர்களின்
நாவிலிருந்து     கடவுள் நாமமும் மறைந்தது.    திரும்பவும் தின்பது,
குடிப்பது,   ஆடுவது, பாடுவது எனபவற்றில்      அவர்கள் இறங்கி
விட்டார்கள். மரண பயம் போய்விட்டது.    ஒரு கணம் மெய் மறந்து
ஆண்டவனைத்         துதித்த பக்தி போய்; அவ்விடத்தை மாயை
மூடிக்கொண்டுவிட்டது. வழக்கமான நமாஸ்களும்  பிரார்த்தனைகளும்
பின்னாலும் நடந்து வந்தன   என்பது உண்மையே. ஆனாலும், அந்த
பயங்கர நேரத்தில் இருந்த பயபக்தி, அவற்றில் இல்லை.

     அப்புயல் மற்றப்      பிரயாணிகளுடன்   என்னை ஒன்றாகப்
பிணைத்துவிட்டது. இதுபோன்ற      புயல்களின் அனுபவம் எனக்கு
இருந்ததால் புயலைப்பற்றிய பயம் எனக்குச்   சிறிதும் இல்லை. கடல்
பிரயாணம் எனக்குப் பழக்கப்பட்டுப் போனபடியால், எனக்கு மயக்கம்
வருவதே இல்லை. ஆகையால், பயமின்றிப் பிரயாணிகளிடையே நான்
அங்கும் இங்கும் போக முடிந்தது.