பக்கம் எண் :

கோகலேயுடன் ஒரு மாதம் - 1279

Untitled Document
எனக்குத் தேவையே இல்லை.   என் காரியங்களையெல்லாம் நானே
செய்துகொண்டதும், நான் சுத்தமாக இருந்ததும்,     என்னிடமிருந்த
விடாமுயற்சி, ஒழுங்கு      முதலிய குணங்களும் அவர் மனத்தைக்
கவர்ந்துவிட்டன. அவர் அடிக்கடி       என்னை மிகவும் புகழ்ந்து
பேசுவார்.

     தமது காரியம் எதையும்         எனக்குத் தெரியாமல் அவர்
ரகசியமாக வைத்திருந்ததாகத் தெரியவில்லை. தம்மைப் பார்க்க வரும்
முக்கியமானவர்களிடமெல்லாம் என்னை அறிமுகம் செய்து வைப்பார்.
இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில்  என் நினைவில்
முக்கியமாக நிற்பவர் டாக்டர்        (இப்பொழுது ஸர்) பி.ஸி. ராய்
கோகலேயின் ஜாகைக்கு      வெகு கிட்டத்திலேயே அவர் வசித்து
வந்தார் ஆகையால், அடிக்கடி வருவார்.   “இவர் தான் பேராசிரியர்
ராய். இவருக்கு   மாதச் சம்பளம் ரூ. 800. அதில் தமக்கென்று ரூ.40
வைத்துக்கொண்டு மீதியைப்             பொதுக் காரியங்களுக்குப்
பயன்படுத்துகிறார். இவருக்கு விவாகம் ஆகவில்லை.       விவாகம்
செய்துகொள்ள விரும்பவும் இல்லை”       என்று சொல்லி அவரை
எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

     டாக்டர் ராய், இன்று இருப்பதற்கும் அன்று இருந்ததற்கும் எந்த
வித்தியாசத்தையும் நான் காணவில்லை.      அவருடைய ஆடையும்
இப்பொழுது இருப்பதுபோலவே     அப்பொழுதும் எளிமையானதாக
இருந்தது. ஆனால், ஒரு வித்தியாசம் உண்டு. அந்த நாளில்  இந்திய
மில் துணி ஆடை அணிந்துவந்தார். இப்பொழுது கதர்  உடுத்துகிறார்.
கோகலேயும் டாக்டர் ராயும்      பேசிக்கொண்டிருப்பதை எவ்வளவு
நேரம் கேட்டாலும் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை. ஏனெனில்,
அப் பேச்சு பொதுநன்மையைப் பற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால்
அறிவை ஊட்டுவதாக இருக்கும். சில சமயங்களில் இப் பேச்சு, பொது
ஜனத் தலைவர்களின் நடத்தையைக்     கண்டிப்பதாகவும் இருக்கும்.
அப்பொழுது அதைக் கேட்பது,    மனத்திற்கு வேதனையைத் தரும்.
இதன் பயனாக, முக்கியமான வீரர்களாக         எனக்குத் தோன்றி
வந்தவர்களில் சிலர், மிகவும்        சின்ன மனிதர்களாகத் தோன்ற
ஆரம்பித்தனர்.

     கோகலே, வேலை செய்வதைப் பார்ப்பது    இன்பம் தருவதாக
மாத்திரமின்றி, ஒரு        போதனையாகவும் இருக்கும்.  ஒரு நிமிட
நேரத்தைக்கூட அவர் வீணாக்குவதில்லை.   அவருடைய தனிப்பட்ட
உறவுகள், நட்புகள் எல்லாமே பொது நன்மையை உத்தேசித்துத் தான்
இருக்கும். அவர் பேசுவதெல்லாம் நாட்டின்    நன்மையைக் குறித்தே.
அதில்    உண்மையல்லாததையோ, கபடமானதையோ ஒரு சிறிதேனும்
காணமுடியாது. அவருக்கிருந்த பெரிய கவலையெல்லாம், இந்தியாவின்
வறுமையும் அடிமைத்தனமும்            எப்படி ஒழியும் என்பதே