பக்கம் எண் :

158தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி
ஆகியோரால் பாடப்பெற்ற தலம்.

63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணான்
என்ற பண்டைய சோழ மன்னரால் முதன் முதலில் இக்கோவில்
செங்கற்கோவிலாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஆதித்த சோழன்
இதனைக் கருங்கற்கோவிலாக அமைத்தார். முதலாம்
குலோத்துங்க சோழன்
காலத்தில் இக்கோவிலின்
சங்கமேஸ்வரர் கோபுரமும்
மூன்றாம் பிரகாரக் கார்த்திகைக்
கோபுரமும் கட்டப்பட்டன. நான்காம் பிரகாரம், திருமதில்,
கீழ்க்கோபுரம் ஆகியவை சடையவர்மன் சுந்தரபாண்டியன்
காலத்தில் கட்டப்பட்டன. வீரசோமேஸ்வரன் என்ற ஒய்சள
மன்னன் இக்கோவிலில் பல திருப்பணிகள் புரிந்தார். விஜயநகர
மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளும்
இக்கோவிலில் உள்ளன. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்
இக்கோவிலில் சீரியத் திருப்பணிகள் ஆற்றியுள்ளனர்.

இக்கோவிலின் மூலவர் ஜம்புகேஸ்வரர் (நாவல் மரத்தடி
இறைவன்) எனப்படுகிறார். மூலவர் கருவறையில் லிங்க வடிவில்
காட்சி தருகிறார். இறைவனின் கருவறை தரைமட்டத்திற்குக் கீழ்
உள்ளதால் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் நிற்கிறது.
தேங்கிய நீர் அடிக்கடி வெளியேற்றப்படுகிறது. யானை வழிபட்டத்
தலமாக இருப்பதால் ‘திருவானைக்கா’ என்ற பெயர் வந்தது
என்பர். இறைவனின் கருவறைமீது எழுப்பப்பட்டுள்ள விமானம்
கருங்கல்லினாலானது. சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதில்
காணப்படும் நந்தி, சிங்கம், பசு ஆகியவற்றின் சிற்பங்கள்
அழகிய படைப்புகள் ஆகும். இறைவி அகிலாண்டேஸ்வரி
என அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலின் கலைச் சிறப்புமிக்க பகுதி கொடிக்கம்பத்தை
அடுத்துள்ள நான்கு கற்றூண்கள் ஆகும். இக்கற்றூண்களின்
அமைப்பு யாவரும் போற்றும் வண்ணம் உள்ளது.