பக்கம் எண் :

180தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மன்னரின் ஆட்சியில் வந்தது. மைசூர் மன்னர் ஹைதர்
அலி
யின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டிருந்தது. கி.பி. 1768ஆம்
ஆண்டு கர்னல் உட் என்ற ஆங்கிலத் தளபதி ஹைதர்
அலியிடமிருந்து சேலத்தைக் கைப்பற்றினார். பின் இது
ஹைதரால் மீட்கப்பட்டது. ஹைதரின் மரணத்திற்குப்பின்
அவர் மகன் திப்புவின் ஆட்சியில் இப்பகுதி வந்தது. மூன்றாம்
மைசூர்ப் போரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி (1792)
ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானிடமிருந்து சேலம் மாவட்டத்தைப்
பெற்றனர். கந்தப்ப செட்டி என்பவர் சேலம் பகுதியின் முதல்
ஜமீன்தார் ஆவார். இவர் இறந்தபின் இவர் மனைவி
நயினம்மாளிட
மிருந்து சேலம் ஜமீன்தாரி உரிமையைக்
கி.பி. 1836இல் பிரடரிக் பிஷர் பெற்றார்.

கி.பி. 1860-லிருந்து சேலம் மாவட்டத்தின் தலைநகராகச்
சேலம் விளங்கிற்று. 1866இல் சேலம் ஒரு நகராட்சி ஆயிற்று.

1966ஆம் வருடம் சேலம் மாவட்டம் சேலம், தர்மபுரி
என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. சேலம்
மாவட்டத்தின் தலைமையிடமாகச் சேலம் நகர் விளங்கிற்று.

சேலம் நகரின் மக்கள் தொகை 1901ஆம் ஆண்டு 70,621
ஆகும். 1981ஆம் வருடக் கணக்குப்படி சேலம் நகரின்
(நகரப்புறப்பகுதிகள் இணைந்தது) மக்கள் தொகை 5,15,021 ஆகும்.

சேலம் நகரின் பண்பாட்டுச் சின்னங்கள்

இந்துக் கோவில்கள்

சேலம் நகரின் மத்தியில் சுகவனேஸ்வரர் கோவில்
உள்ளது. இது ஒரு பழமைமிக்க சிவ வழிபாட்டுத் தலம்
ஆகும். இக்கோவிலின் இறைவி சொர்ணாம்பிகை
எனப்படுகிறார். இக்கோவிலிலுள்ள நிருத்த மண்டபம்
சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது.
கல்யாண மண்டபம்
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்த
டேவிஸ்
என்பவரின் கொடையாகும். 1981, பிப்ரவரியில்
இக்கோவிலின் குட முழுக்கு விழா நடைபெற்றுள்ளது.