பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 139

இலக்கியத்தில் மிளிர்கின்றன. கூடலூர் கிழார் தீட்டியளித்துள்ள ஓவியக்
காட்சியிது: புதிதாக மணஞ்செய்துகொண்டு தன் கணவன் வீடு சென்ற ஒரு
பெண், தன் தளிர் விரல்கள் சிவக்குமாறு, புளித்த கட்டித்தயிரைப் பிசைந்து,
கண்ணில் புகை கரிப்பதையும் பாராட்டாமல், அதற்குத் தாளிதம் செய்து,
துழவித் துழாவி அதனை இனிய குழம்பாக்கித் தன் கணவனுக்குப்
படைக்கின்றாள். தாய் வீட்டில் அடுதொழில் பயிலாத சிறு பெண்ணாதலால்
தயிர் தோய்ந்த விரல்களைக் கழுவத் தோன்றாதவளாய்த் தன்
புடவையிலேயே துடைத்துக் கொள்ளுகின்றாள். உணவு மிகவும் சுவையாக
உள்ளதே என்று கணவன் அவளைப் பாராட்டிப் புகழ்கின்றான்.33 அவள்
முகமும் மலர்ந்தது. மற்றொரு காட்சி : இளம்பெண் ஒருத்தி தன் காதலனுடன்
அவனுடைய ஊருக்குச் சென்று தங்கிவிட்டுமீண்டும் தன் தாய் வீட்டுக்கு
வந்தாள். புகுந்த ஊரில் குடிநீர் இனிமையாக இராது. ஆகையால்
அதை அப்பெண் எப்படி விரும்பிக் குடித்தாள் என்று அவள் தோழி
வினவுகின்றாள். அதற்கு அப் பெண், ‘தோழி! நீ கூறியபடி என் தலைவரது
ஊர்த் தண்ணீர் பிறர் குடிக்கத் தகாதது தான். அங்கு ஒரு சிறு குட்டையில்
தழைகள் உதிர்ந்து ஊறிக் கிடக்கின்றன. விலங்குகள் அத் தண்ணீரைக்
குடிக்கப்போய் அதைக் கலக்கிவிட்டன. எனினும், அஃது என்னவோ எனக்கு
இனிமையாகவே சுவைக்கின்றது. ஏன், இங்கு நம் தோட்டத்தின் மரங்களில்
பிழியும் தேனையும் பாலையும் கலந்து உண்ணும் போது காணும் சுவையைவிட
அக் குட்டைத் தண்ணீரே எனக்கு மிகவும் இனிமையாகச் சுவைக்கின்றது’
என்று புக்கவீட்டில் தான் காணும் சிறப்பை அவள் எடுத்துப் பெருமை
பாராட்டிக் கொள்ளுகின்றாள்.34 மற்றுமொரு காட்சி : ஒரு பெண்ணும்
அவளுடைய காதலனும் திருமணம் முடிந்து அவன் ஊரில் வாழ்கின்றார்கள்.
பெண்ணின் பெற்றோர்கள் நிறைந்த செல்வம் வாய்ந்தவர்கள். அவளுடைய
கணவன் வீடோ வறண்ட குடி. அவ் வீட்டில் தன் மகள் அவள் கணவனுடன்
இன்ப வாழ்க்கை வாழ்கின்றாள் எனக் கேட்ட தாய் ‘பாலையும் தேனையும்
கலந்த சோற்றைப் பொற்கலம் ஒன்றில் பெய்து செவிலித்தாய் அதை ஒரு
கையில் ஏந்திக் கொண்டு மற்றொரு கையில் பூச்சுற்றிய மெல்லிய கோலைக்
காட்டி மருட்டி இச் சோற்றை உண்ணுவாய் என்று வேண்டவும், யான்
உண்ணேன் என்று பந்தலின்கீழ் ஓடி ஒளிந்து விளையாட்டுக் காட்டுவாளே
என் மகள். அத்தகைய குறும்புக்காரப் பெண்

     33. குறுந். 167.
     34. ஐங்குறு. 203.