பக்கம் எண் :

490தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தமிழராகவே மாறித் தமிழருடன் கலந்து உறவாடி வந்துள்ளனர். இக்
காரணங்களினால் வடநாட்டில் விளைந்தவற்றைப் போன்ற குருதி சிந்தும்
சமயச் சண்டைகளும், அரசியல் கிளர்ச்சிகளும், போராட்டங்களும்
தமிழகத்தில் ஆதரவு பெறாமற் போயின.

குலப் பூசல்கள்

     மக்களிடையே நூற்றுக்கணக்கான குலங்கள் பெருகி விட்டிருந்தன. ஒரே
குலத்தினர் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கேற்பப் பல மொழிகளைப் பேசினர்.
கொள்ளேகாலத்தில் வாழ்ந்த தேவாங்கச் செட்டிகள் கன்னடத்தையும், வட
ஆர்க்காட்டு மாவட்டத்தில் வாழ்ந்த தேவாங்கச் செட்டிகள் தெலுங்கையும்
தமிழையும் பேசினர். திருநெல்வேலியில் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள்
தமிழையே பேசுகின்றனர்; அவர்களுள் பெரும் பாலார்க்கு உருது பேச எழுத
வாராது. திருநெல்வேலியின் தென்பகுதியிலும், நாஞ்சில் நாட்டிலும் வாழும்
பிராமணர்கள் தமிழும் மலையாளமும் பேசுகின்றனர். அதைப்போலவே இன்ன
குலத்தினர் இன்ன சமயத்தைத்தான் பின்பற்றி வருகின்றனர் என்று வரையிட
முடியாது. பேரி செட்டிகளிடையே, ஆரிய வைசியச் (கோமுட்டிச்)
செட்டிகளிடையே சைவர் உண்டு; வைணவர் உண்டு. இவ் விரு
பிரிவினருக்குள்ளும் பந்தி உணவும் பெண் கொடுத்தலும் எடுத்தலும்
நடைபெற்று வருகின்றன. பிராமணருள் வைணவர்கள் தம்மை அய்யங்கார்கள்
என்று கூறிக் கொள்ளுவர்; நாமம் தீட்டிக்கொள்ளுவார்கள். ஆனால்,
ஸ்மார்த்தப் பிராணருக்குள் ஒரு பிரிவினர் நெற்றியில் நாமம்
போட்டுக்கொண்டு வைணவத்தைப் பின்பற்றுகின்றார்கள். பொதுவாகப்
பிராமணர்கள் வெளியில் திருநீறு பரக்கப் பூசி, உத்திராக்கம் அணிந்தாலும்

     உள்ளே இராம மந்திரமே ஓதுவார்கள்; ‘சிவாயநம’ என்னும்
ஐந்தெழுத்து ஓதும் சைவப் பிராமணனைக் காணவே முடியாது. புரோகிதம்
செய்யும் ஸ்மார்த்த, வடமப் பிராமணர்கள் தம் குலத்துக்கு மட்டும் புரோகிதம்
செய்வார்கள்; பிராமணர் அல்லாத ஏனைய குலங்களுக்குப் புரோகிதம்
செய்வதில்லை. பிராமணர் அல்லாதார்க்குப் புரோகிதம் செய்வதற்கெனவே
பிராமணர்கள் தனியாக உள்ளனர். கோமுட்டிகளுக்குப் புரோகிதம் செய்யும்
பிராமணர் வேறு எக் குலத்தினருக்கும் புரோகிதம் செய்யும் வழக்கம் இல்லை.
கோயில் அருச்சகத் தொழிலுக்கு உரிமையுடையவர்கள் ஆதிசைவ
அந்தணர்கள் அல்லது குருக்கள் ஆவார்கள். ஏனைய பிராமணப் பிரிவினர்
இவர்களுடன் உணவுக் கலப்பும் இரத்தக் கலப்பும் கொள்ளுவதில்லை. ஆதி
சைவரின் கோத்திரங்கள் சூத்திரங்களுக்கும், ஏனைய பிராமணரின் கோத்திர
சூத்திரங்களுக்கும்