“குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்து ஈங்(கு) என்துயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய்”. என்று கற்பின் செல்வியைப் புகழ்ந்து போற்றினான். இவ்வாறு கணவனைப் பிரியாது வாழ்தலே நிறை யமைந்த மாதர் நெறியாகும். கற்புடைய மாதர் கணவரோடு இன்பமும் துன்பமும் ஒருங்கே நுகர்வர்; அவர் ஆவி துறப்பின் அந் நிலையே உயிர் நீப்பர். நீரில் அமைந்து வாழும் நீலமலர் அந் நீர் வற்றும்போது அவ் விடத்தே ஒட்டி உறைந்து உலரும் தன்மைபோல், கற்பமைந்த மங்கையர் கணவன் வாழுங் காலத்து அவனுடன் இனிது வாழ்ந்து, அவன் அழியும் காலத்துத் தாமும் அகமகிழ்ந்து அழிவர். இத் தன்மை வாய்ந்த குலமாதர் நெறியைக் கொடியின் தன்மையோடு ஒப்பு நோக்கிக் கம்பர் அமைத்துள்ள கற்பனை, அழுகு வாய்ந்ததாகும். “நிலம ரங்கிய வேரொடு நேர்பறித்து அலம ரும்துயர் எய்திய ஆயினும் வலம ரங்களை வீட்டில மாசிலாக் குலம டந்தையர் என்னக் கொடிகளே” என்னும் கவியில் அமைந்துள்ள சொல் நயமும் பொருள் நயமும் ஆயுந்தோறும் அளவிறந்த இன்பம் பயப்பதாகும். குலமாதர் போன்ற கொடிகளின் தன்மை இவ்வாறாக, விலைமாதர் போன்ற வண்டுகளின் தன்மையையும் கவிதையிலே காணலாம். பொரு |