நந்தியின் பேச்சால் சுந்தரத்தின் மன உறுதி உலையவில்லை; பரமசிவனைப் பார்த்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார். “அப்படியானால் அதோ தெரிகிறதே, அந்த மயானத்தில் இருக்கிறார் தலைவர். போய்ப் பார்” என்று விடை கொடுத்தான் நந்தி. சுந்தரம் சென்றார்; பரமசிவனைக் கண்டார்; கை தொழுதார்; திருத்தொண்டர் படும் பாட்டை உருக்கமாக எடுத்துரைத்தார். பரமசிவன் ஒன்றும் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்வித அசைவும் இல்லை. அந்நிலை கண்டு வருத்தமுற்ற சுந்தரம், “ஆண்டவனே! பெரிய இடத்திற்குப் பிச்சைக்குப் போனால், உண்டு என்பது மில்லை, இல்லை யென்பது மில்லை என்ற பழ மொழி உண்மையாயிற்றே! வல்லதெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினேன்: குறைகளையெல்லாம் சொல்லி முறையிட்டேன். வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்லலாகாதா?” “வல்ல தெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தி னாலும் வாய்திறந்து இல்லை என்னீர்! உண்டு மென்னீர் எம்மை ஆள்வான் இருப்ப தென்னே!” என்று கேட்டார்; அப்பொழுதும் பேச்சில்லை. சுற்று முற்றும் பார்த்தார், சுந்தரம்; சடையின்மேல் இருந்த கங்கையை நோக்கினார்; அவள் வாய் திறக்க வில்லை. கணபதியை நோக்கினார்; அவன் இருந்த இடம் விட்டு அசையவில்லை. குழந்தை முருகன் ஒரு கோழியைப் பார்த்துக் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். பார்வதி ஓர் அப்பாவியாகத் தோன்றினாள். |