என்று தொடங்கி, அறுசுவை உண்டிக்குப் பத்துப் பாட்டுப் பாடி முடித்தான். அப் பாட்டுக்கு ‘ அகட்டுத் திருப்பதிகம்’ என்று தலைப்பிட்டுத் தந்தையிடம் கொண்டு போனான். பொன்னப்பன் பாடிய முதற் பாட்டு அன்னப் பாட்டா யிருக்கக் கண்டு தந்தை ஆனந்த மடைந்தார்; “அவரை போட்டால் துவரை முளைக்குமா? துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்திருக்கின்றது” என்று மெச்சினார்; ‘பள்ளிக்கூடத்தில் படிக்கும் பயல்கள் அசட்டுப் பிசட்டென்று பாடுகிறார்களே! என் மகன் பாடிய அகட்டுப் பாட்டின் அடித்தூசி விலை பெறுமா அவை? அகட்டுப் பாட்டு என்ற தலைப்பின் அர்த்தந்தான் அப் பயல்களுக்குத் தெரியுமா? என் பிள்ளை பொன்னப்பனுக்கு நிகண்டு தலைகீழாய்ப் பாடம். அகடும் மோடும் உதரமும் வயிறே’ என்ற பண்டை நிகண்டு மனப்பாடமாயிருப்பதனால் அன்றோ, வயிற்றுப் பாட்டை அகட்டுப் பாட்டு என்று அழைத்தான் என் அப்பன்? இவன் கம்பரைபோல் ஒரு பெரிய கவிச்சக்கரவர்த்தி யாவான்’ என்று எண்ணி மனங்களித்தார்; அகட்டுத் திருப்பதிகத்தை ஆறு தரம் படித்தார்; பல ராகங்களில் பாடினார். அத் திருப்பதிகத்துக்கு ஒரு சிறப்புப் பாயிரமும் கொடுத்தார். “அன்னக் கவிபாடி அகங்குளிரச் செய்திட்ட பொன்னப்பா உன்தன் புலமைத் திறத்தாலே மன்னவரும் போற்ற மணியா சனத்திருப்பாய் என்னப்பா என்குலத்திற் கேற்ற எழிலொளியே” என்று தந்தை பாடித் தந்த பாயிரத்தைப் பையன் பதிகத்தோடு சேர்த்துக் கட்டி வைத்துக்கொண்டான். |