மதிக்கப்படுகிறது. தாங்களும் அவரைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களே! கவிராயர் : - ‘இது நல்ல கருத்து. காஞ்சி மாநகரம் கல்விக்குப் பேர்போன இடம். ஆனந்தக் கூத்தர் ஒட்டக்கூத்தருடைய மகள் வழியிலே வந்தவர். ஆயினும் ஒட்டக்கூத்தர் உடம்பில் ஓடிய இரத்தத்திலே ஒரு துளியேனும் அவருடம்பில் ஒடாதிருக்குமா? இன்றே போய் அவரைப் பாரக்கிறேன்’ என்று எழுந்து, கோடையிடியிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர்க்குச் சென்றார். அப்பொழுது அடுக்குமொழிக் கூத்தர் தம் காலிற் புண்பட்டுப் படுக்கையில் இருந்தார். சரம கவிராயர் அந்நிலையிற் காண வந்தது ஒரு துர்ச்சகுனம்போல் அவருக்குத் தோன்றியது. ஆயினும், கவிராயரை உள்ளே வரவழைத்து, “பங்கமில்லாப் பாட்டிசைக்கும் சிங்கமே வருக! சங்கமா முடியில் வைகும் தங்கமே வருக” என்று அடுக்கு மொழி கூறி அவர் வரவேற்றார். கவிராயர்: - “அடுத்த மொழிவிடுக்கும் ஆனந்தக் கூத்தாகேள் படுத்த படியறிந்தும் பாடுரைக்க வந்தோம்யாம் எடுத்தபெருங் கவிபாடி ஏற்றமுற்ற கூத்தருடன் தொடுத்திலங்கும் பேறெமக்குத் தோன்றால்! அருளாயே” என்று தம் கருத்தை தெரிவித்தார். உடனே அடுக்குமொழி, ‘சகல பந்த சரமே! இந்நிலவுலகில் நும்மொப்பர் பிறர் இன்றி நீரேயானீர்! கவிச்சக்கரவர்த்தி யென்று புவிச் சக்கரவர்த்திகள் பாராட்டிய ஒட்டக்கூத்தருக்குப் பின் அப்பட்டம் |