அங்கங்கு அருமை காட்டுவான் என்றும் கவிஞர் பாராட்டினார். ஆண்மையும் அழகும் வாய்ந்த அவ் வள்ளலைத் தலைவனாக வைத்து ஒரு ‘காதலும்’ பாடினார் கவிஞர். பொதிய மலைச் சாரலில் வேட்டையாடப் போந்த முத்துசாமி மன்னர். “சில்லென்று பூத்த செழுமலர்ப்பூங் காவனத்தில் வில்லொன்று செங்கையுடன் மேவி வரும்போதில்” ஒரு கட்டழகியைக் கண்டு காதலுற்றார்; அவள் ஊரும் பேரும் கேட்டார். மாற்றம் ஒன்றும் பேசாமல் தலைகவிழ்ந்து நின்றாள் மங்கை. அது கண்ட தலைவர், “ஊமையோ, வாயிலையோ ஓர்வசனம் நீஉரைத்தால் தீமையோ வாய்திறந்து செப்பினால் ஆகாதோ” என்று பின்னும் வினவினார். அப்போது அவள் வாய்திறக்கவில்லை; ‘வாய் இல்லையோ’ என்று கேட்டுப் பார்த்தோம், பலிக்கவில்லை; ‘மனம் காயோ’ என்று கேட்டுப் பார்க்கலாம் எனக் கருதி மேலும் பேசலுற்றார்: “வெள்ளரிக் காயா, விரும்பும்அவ ரைக்காயா உள்ளமிள காயாஒருபேச் சுரைக்காயா” என்று நயமுறக் கேட்ட போது, நங்கை புன்னகை புரிந்தாள் என்று காதற் பிரபந்தம் கூறிச்செல்கின்றது. வாக்கு வளம் உடைய அழகிய சொக்கர், நெல்லையாம் பதியிலே கோயில் கொண்டுள்ள காந்தி |