என்று குறையிரந்து கண்ணீருகுத்தார். கவிஞரது கொடிய வறுமையை அறிந்த வள்ளல் மனம் நெகிழ்ந்து, கண்களில் நீர் ததும்ப நின்று, “அருந் தமிழ்ப் புலவரே! நான் செல்வத்தால் செழித்து வாழ்ந்திருந்த காலத்தில் நீர் வரலாகாதா? இவ் வறுமைக் காலத்தில் வந்தடைந்தீரே! இப் பொழுது உமது இன்மையை அகற்றப் பாவியேன் என் செய்வேன்?” என்று மனம் குழைந்தான். ஆயினும் இல்லையென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்த வள்ளல், சிறிதுபொழுது சிந்தனையிலாழ்ந்து, ஈகையால் தன்னுள்ளே நினைந்து தமிழ்ப் புலவரிடம் தன் உடைவாளை உருவிக் கொடுத்து “ஐயனே! இத் “தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்து விலைதனை மீட்டுநின் வறுமைநோய் களையே” என்று முகமலர்ந்து மொழிந்தான். தமிழ்ப் புலவனது வறுமை தீர்த்தற்காகத் தன் தலையையும் அளிக்க இசைந்த தலையாய வள்ளலது செயல் கண்டு தரியாத தமிழறிஞர் கண்ணீர் பெருக்கிக் கதறியழுது அவ்வாளை எடுத்துக் கொண்டு, அமணனிடம் ஓடிச் சென்று, “ஐயனே! தலையையும் கொடுத்துத் தமிழறிந்த தமியேனது வறுமையைக் களையப்போந்த வள்ளலாய உன் தமையனது பெருமையை என் என்பேன்?” “பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என் நாடிழந் ததனினும் நனிஇன் னாதென வாள்தந் தனனே! தலைஎனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்” |