உமாதேவி மயில் வடிவாக இறைவனைப் போற்றிய இடம் மயிலாப்பூர் என்பர். அவ் வூரிலே அம்மன் கோயில் ஒன்று உள்ளது. முண்டகக் கண்ணியம்மன் கோயில் என்பது அதன் பெயர். அன்பினால் வழிபடும் தொண்டர்களுக்கு முண்டக் கண்ணியாகவா காட்சியளிப்பாள் உமையம்மை? கண்டோர் கண்களைக் குளிர்விக்கும் கண்களல்லவோ அம்மையின் கண்கள்? கருணை பொழியும் கண்கள் முண்டக் கண்களாக இருக்க முடியுமோ? என்ற எண்ண மெல்லாம் நம் மனத்தில் எழுகின்றன. மயிலையில் வாழும் அவ் வம்மையின் உண்மையான பெயரை அறிந்தால் ஐயமும் திரிபும் அகன்றவிடும். முண்டகக்கண்ணி என்பது அவள் பெயர்; முண்டகம் என்பது தாமரை; சிறப்பு வகையில் செந்தாமரையைக் குறிக்கும். அருளுருவாகிய அம்மையின் செவ்வரி படர்ந்த அழகிய கண்களை வியந்து முண்டகக் கண்ணி என்று ஆன்றோர் பெயரிட்டனர். அதை முண்டக் கண்ணியாகச் சிதைத்து விபரீதம் விளைத்துவிட்டது நம் மக்களின் சிறுமை. பழனிமலைக்கு அருகே அயிரை என்ற மலை ஒன்று உண்டு. அம் மலையிலே கொற்றவை கோயில் கொண்டாள். வெற்றி தரும் தெய்வமாகிய கொற்றவையை மன்னரும் வீரரும் முன்னாளில் வழிபட்ட செய்தி பதிற்றுப்பத்து முதலிய பழந்தமிழ் நூல்களிற் கூறப்படுகின்றது. நாளடைவில் அயிரை மலை என்பது ஐவர் மலையென மருவிற்று. பாண்டவர் ஐவருக்கும் உரியது அம் மலை என்ற கதை பிறந்தது. பெண் வடிவத்தில் காட்சியளித்த கொற்றவை “ஐவர்க்கும் |